வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 16, 2009

சாண்டில்யன் எழுதிய 'கடல் புறா' - முதல் பாகம் சுருக்கம்

சமிபத்தில் ஒரு நாவலை படிக்க நான் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதில்லை. மூன்று பாகங்கள் கொண்ட இந்த சரித்திர நாவல் வீரராஜேந்திரன் காலத்தில் 'தமிழ் - கலிங்க' எல்லை விவகார சமயத்தில் நடக்கிறது. கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களுக்கு காரணம் ஏன் இருக்க கூடாது என்ற சிந்தனையில் இந்த நாவல் பிறந்ததுள்ளது. அநபாய குலோத்துங்கனின் ஸ்ரீ விஜயப் பயணத்தையும் இந்த நாவலில் சாண்டில்யன் சேர்த்துள்ளார்.

சரித்திர நிகழ்வுகளை வைத்து நாவலாக படிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று. அதுவும் இந்த நாவலில் கப்பல் பயணத்தை பற்றி விபரிக்க போதும், போர் கப்பல் அமைப்புகளை பற்றி சொல்லும் போதும் நடுகடல் பயணத்தில் இருப்பது போல் இருந்தது.

இருபத்தியைந்து பதிப்பு அச்சான நாவலை பற்றி இதற்கு மேல் விளக்க எனக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது.



கதை சுருக்கத்துக்கு போவோம்.

புகார் நகரத்தில் இருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.

அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார். இளையபல்லவனை ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கிறார் சேந்தன்.

கலிங்க படை தன்னை வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசியையும் காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். குணவர்மனை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவன் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன் குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை குணவர்மன் உணர்கிறார்.

குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது 'வெண் புறா' அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.

மறு நாள் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவம் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி அவர்களை விடுவிக்க சொல்கிறார். காஞ்சனாதேவி அனந்தவர்மன் மார்ப்புக்கு குறிவைத்து வில்லோடு நின்றாள்.

தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனை தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து காஞ்சனையும், குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனை பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.

முதல் பாகத்தில் காட்சி விபரங்களை விட மிகவும் ரசித்தது வசனங்களை தான்.

காஞ்சனை அறையில் மறைந்திருந்த இளைபல்லவனை பார்த்து...
" நீ எதிரியா...?" காஞ்சனை.

"இல்லை"

" அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்"

"கள்வனுமல்ல..."

"அப்படியானால் தமிழனா ?"

இந்த கேள்வி மேலும் பிரபிப்பையே அளித்தது இளையபல்லவனுக்கு."கள்வனாயிராவிட்டால் தமிழனாயிருக்க வேண்டுமா ?" என்று வினவினான். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்.


குணவர்மன் இளையபல்லவனிடம் தன் கதையை சொல்லும் போது, " இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கி தள்ளுகிறது." என்கிறார்.

நீதி மன்ற விசாரனையின் போது...

அனந்தவர்மன் " சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம்"
இளையபல்லவம் : மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் அதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று.."
அனந்தவர்மன் : சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளை கலிங்கம் அளிக்கும்.


இந்த வசனத்தை படிக்கும் போது ஈழ பிரச்சனைக்கு கலிங்கம் முன் உதாரணமாக இருக்கின்றது என்று தான் தோன்றியது. பல இடங்களில் இப்படி பல ‘நச்’ வசனங்களும் உள்ளன.

பல ஆங்கில படத்தில் இருந்து கதை, வசனத்தை தழுவும் தமிழ் இயக்குநர்கள், இது போன்ற நாவல்களில் இருந்து கதை, வசனங்களை உரிமை வாங்கி எடுத்தால் எழுதுபவர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

புத்தக வாசகர்கள் ‘கடல் புறா’ கண்டிப்பாக படிக்க வேண்டிய சரித்திர நாவல்.

3 comments:

Unknown said...

links for
Sandilyan novel pdf free downloaD.

Unknown said...

இப்பொதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன்,கதைச்சுருக்கம் எனக்கு உதவியாக இருக்கிறது,

Suresh said...

Planning to buy this book in this book fair..

LinkWithin

Related Posts with Thumbnails