வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 22, 2015

மகன் தந்தைக்கு எழுதும் கடிதம் ! (நகைச்சுவைக்காக மட்டுமே)

ஒரு மகன் தன் பெற்றோருக்கு இப்படி கடிதம் எழுதுகிறான். 

 Disclaimer : நகைச்சுவைக்காக மட்டுமே.... 

** 

வணக்கம், 

உங்கள் அன்பு மகன் எழுதுகிறேன். 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தீர்கள். என்னை படிக்க வைக்க நீங்கள் அடைந்துள்ள கஷ்டத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். 

இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ’படிப்பே வேண்டாம்’ என்று முடிவு செய்திருக்கிறேன். நான் உங்கள் மகன். எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். அதனால், வீட்டு வாடகைக்கு வைத்திருந்த ரூ.10000 பணத்தை பீரோ உடைத்து சீட்டு விளையாட எடுத்திருக்கிறேன். 

உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருப்பேன். இப்போதைக்கு இரண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. 

உங்கள் மீது கொண்ட அன்பின் அடிப்படையில், நான் வீட்டு செலவுக்காக ரூ.1000 விட்டு வைத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் ரூ.10000யை ரூ.20000 மாற்ற முழு வீச்சில் செயல்படுவேன். 

என் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்களாக நாய் சேகர், ப்ளேட் பக்கிரி, போகிரி ராஜா, புது நண்பனான அசால்ட் சேது என்னுடன் அயராது உழைப்பார்கள். அவர்களை முழுவதுமாக நம்புகிறேன். 

அதில் வெற்றிப் பெற்ற பிறகு, உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. 

எனக்குச் பொதுநலம் அறவே கிடையாது. என் உறவு நீங்கள் தான். நான் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும் நீங்கள் வாங்கிக் கொடுத்தது. என் இல்லமும் உள்ளமும் என் பெற்றோராகிய நீங்கள் தான். 

நீங்கள் வைத்த பெயரை மறந்து போகும் அளவுக்கு, ’தண்டச்சோறு’, ’தருதலை’, ’உதவாக்கரை’ என்று அழைக்கின்ற சொல்லுக்காகவே என் வாழ்நாட்கள் முழுக்க வாழ விரும்புகிறேன். 

இது போன்ற சம்பவங்களில் பல முறை நான் மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை மீண்டு வந்து, உங்கள் புகழை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தனயன் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். 

நன்றி! 

உங்கள் அன்பு மகன் 
தருதலை.

Friday, December 18, 2015

’இலக்கியச் சவடுகள்’ நூலை வெளியிட்ட ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் !

பெரம்பூரில் நண்பர் உதயகண்ணன் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் நடத்தி வருகிறார். எங்கள் பகுதிக்காரர் என்பதாலோ என்னவோ இது என்னுடைய ‘பதிப்பகம்’ போன்ற உணர்வு. உரிமையாக எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வேன். 

ம.காமுத்திரை எழுதிய ‘மில்’ நாவலுக்கு ’சுஜாதா’ விருது கிடைத்ததும், அதைப் படித்து விமர்சனம் எழுதிய முதல் ஆள் நானாக இருப்பேன். எஸ்.ஷங்கர்நாராயணன் நூல்களை பலருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். இன்றைய இலக்கிய பதிப்புலகத்தில், இலக்கிய புத்தகத்திற்கு நியாயமான விலை வைத்து பதிப்பவர் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகத்தின் உதயகண்ணன். 



நான் ‘நண்பன்’ என்பதால் என்னுடைய நூல்களை பதிப்பிக்க கேட்டால் ‘முடியாது’ என்று தான் சொல்வார். நான் எழுதும் வாழ்க்கை வரலாறு, அரசியல் நூல்களுக்கு அவர் பதிப்பகத்தில் இடம் கிடையாது. கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கே முன்னுரை. படைப்பில் கொஞ்சமாவது இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகே சென்ற வருடம் நான் எழுதிய ‘பெரியார் ரசிகன்’ (நாவல்) பதிப்பித்தார். 

தற்போது, ம.காமுத்திரை நூல்களை வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு பதிப்பகங்கள் வெளியிடுகிறது. மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ நாவலை காலச்சுவடு வெளியிட்டுயிருக்கிறது. இவர்களின் முதல் நூலை வெளியிட்டது ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் தான். 

 பதிப்புலகத்தில் பதினைந்து வருடம் மேல் இயங்கி வருகிறார். இவர் பதிப்பித்த பல நூல்களுக்கு தமிழக அரசு விருது, பாரத் ஸ்டேட் வங்கி விருது, கவிதை உறவு விருது கிடைத்திருக்கிறது. ஆனால், இன்னும் இவருக்கு பாபஸி உறுப்பினர் வழங்கப்படாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். 

இப்படி, One-Man Army யாக செயல்ப்பட்டு வரும் உதயகண்ணனுக்கு நேற்று அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும். காரணம், ஆ.மாதவன் எழுதி உதயகண்ணனின் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பித்த ‘இலக்கியச் சுவடுகள்’ நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பல வருடங்கள் பதிப்பகம் நடத்திய உதயகண்ணனுக்கு நேற்று தான் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. 


ஆ.மாதவனை பலர் பாராட்டியிருப்பார்கள். பலருக்கு அந்த நூலை பதிப்பித்தவர் யார் என்று கூட தெரிந்திருக்காது. இந்த பதிவின் மூலம் ‘இலக்கியச் சுவடுகள்’ நூலை பதிப்பித்த பதிப்பாளர் உதயகண்ணனை நான் வாழ்த்துகிறேன். 

Monday, December 14, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 10

அடர்ந்த காடு.

புலி தனது இறையை தேடும் போது ஒரு நரியை தனியாக இருப்பதை பார்த்தது.

மறைந்திருந்து புலி நரியை தாக்கி உண்ணும் போது நரி கோபமாக “எவ்வளவு துணிவு இருந்தால், இந்த காட்டின் அரசனை தாக்குவாய்” என்றது.

புலிக்கு திகைப்பாக இருந்தது. எப்படி ஒரு நரி காட்டின் அரசனாக இருக்க முடியும். “நீ ஒரு நரி. எப்படி இந்த காட்டின் அரசன் என்று நம்புவது” என்று புலி கேட்டது.

“என் பின்னால் வா. நா நிருபித்துக் காட்டுகிறேன்” என்றது நரி.



நரி முன்னே செல்ல, புலி பின்னால் வந்தது.

இருவரும் மான் கூட்டம் விளையாடிக் கொண்டு இடத்தில் சென்றார்கள். மான் கூட்டம் நரி பின்னால் புலி இருப்பதை பார்த்து அஞ்சி ஓடியது.

“பார்த்தாயா ! என்னைப் பார்த்து எல்லா மான்களும் பயந்து ஓடியது.” என்றது. இதை புலியால் நம்ப முடியவில்லை.

”என்னோடு வா. மீண்டு நிறுபித்துக் காட்டுகிறேன்” என்று குரங்குகள் இருக்கும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

 குரங்குகளும் புலியைப் பார்த்து மிரண்டு மரத்துக்கு மரம் தாவி ஓடியது. “இப்போது புரிந்ததா ! நான் தான் காட்டின் அரசன்” என்று நரி கூறியது.

“மன்னித்து விடுங்கள் அரசே ! உங்கள் பெருமை தெரியாமல் உங்களை தாக்கிவிட்டேன்” என்றுது புலி.

Management நீதி : 

நிர்வாகத்தில் பெரிய ஆளாக இருக்க  நாம் புலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘புலி’ யை வேலைக்கு நியமித்தால் போதும்.

Sunday, December 13, 2015

பல கேள்விகளை உருவாக்கும் விளம்பர நோட்டீஸ் !

[ Disclaimer (என் நலன் கருதி): இதில் நான் யாரையும் குறைக் கூறவில்லை. நோட்டீஸில் இருக்கும் கணக்கைப் பற்றி கேள்விக்கேட்கிறேன். பதில் தெரிந்தவர்கள் கூறலாம். ] 


1. 600+1200+1400+1920+45000+300000 = மொத்தம் 3,50,120... 80120 அல்ல (யாரு போட்ட கணக்கோ !!). 

2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 பாதுகாப்பு மூகாம் = 5554 சென்னை (14), காஞ்சிபுரம் (6), கடலூர் (6) = மொத்தம் 26 தொகுதிகள். 

அப்படியென்றால், ஒரு தொகுதியில் 214 மூகாம் (5554 / 26 = 213.615) அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் (13,80,461 / 5554 = 248.55) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு பள்ளி / சமூகக்கூடம் / தனியார் திருமண மண்டபங்கள் என்று கணக்கு வைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் 214 மூகாம் அமைக்க முடியுமா ? ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் இருக்க இடம் இருக்கிறதா ? 

3. உணவு பொட்டலம் = 72, 64, 353 மூகாம்மில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கை. மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 ஒருவருக்கு 5.26 பொட்டலம் வழங்கப்பட்டிருக்கிறது. 

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு நாள் (ஒரு நாளுக்கு 3 வேளை உணவு) மட்டும் தான் மூகாமில் தங்கியிருக்கிறார்கள். அதற்கு மேல் தங்கவில்லையா ? அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு உணவு வழங்கியது யார் ? 

அப்படியென்றால் மூகாமுக்கு வராமல் வெள்ளத்திலும் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்க வில்லையா ? உதவியை எண்ணிக்கை வைத்து செய்தால் இப்படி தான் கணக்கு தவறாக வரும். 

இப்படி பல கேள்விகளை இந்த நோட்டீஸ் உருவாக்குகிறது. 

கடைசி கேள்வி, உண்மையிலேயே இந்த நோட்டீஸ்யை அதிமுக ஐ.டி விங் தயாரித்ததா ? அல்லது எதிர்கட்சி ஐ.டி விங் சதியா ?

Thursday, December 10, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 9

நாம் சிறு வயதில் படித்த கதை தான். 

நூறு பறவைகள் கூட்டமாக வானில் பறந்துக் கொண்டு இருக்கும் போது கீழே தானியங்கள் பரவி கிடப்பதைப் பார்க்கிறது. தானியங்களை உண்ணும் போது, வேடனின் வலை அவர்களை சிறைப்படுத்துகிறது. வேடன் வருவதை பார்த்த பறவைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க முற்படுகிறது. ஆனால், யாராலும் பறக்கமுடியவில்லை.

அப்போது, ஒரு பறவை தலைமை ஏற்று, “ நாம் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக முழு பலத்தோடு பறக்க வேண்டும்” என்றது. 

அப்படியே, எல்லா பறவைகளும் பறக்க முயற்சிக்கும் போது வலையோடு சேர்ந்து வானத்தில் பறந்தது. பறவை தப்பித்ததோடு இல்லாமல் வேடன் தனது வலையை இழந்தான். 

”ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” என்ற நீதிக்கு இந்த கதையை படித்திருப்போம். ஆனால், இந்த கதை இத்தோடு முடியவில்லை. 



வேடனிடம் இருந்து பறவைகள் தப்பித்தாலும், காலில் சிக்கிய வலையோடு முன்பு போல் சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தங்கள் காலில் மாட்டிய வலையை அருக்க யாருடைய உதவியை நாடலாம் என்று பறந்தப்படி பறவையின் தலைவன் கேட்டான். 

“எலியின் உதவியை நாட்டலாம்” என்று ஒரு பறவைக் கூறியது. 

ஒரு சில பறவை அந்த கருத்தை ஆதரித்தாலும், “நாம் கூட்டமாக வருவதை பார்த்து எலி பார்த்து பயந்து ஓடிவிடும். இது சாத்தியமாகாது” என்றது. 

“சிங்கம், நரி போன்ற பெரிய மிருகங்களிடம் உதவிக் கேட்கலாம்.” என்று இன்னொரு பறவைக் கூறியது. 

இந்த கருத்தை ஒரு சில பறவைகள் ஆதரித்தாலும், “வேடனிடம் மாட்டியிருந்தால் ஒரு சிலராவது தப்பித்திருக்க முடியும். சிங்கம், நரி போன்ற கொடிய மிருகத்திடம் இருந்து யாரும் உயிருடன் தப்பிக்க முடியாது” என்றது.

பறவைகளின் தலைவன், “நம்மால் நீண்ட நேரம் இப்படியே பறக்க முடியாது. அதனால், முதலில் எலியிடம் உதவிக் கேட்போம்” என்றது. 

 ஆனால், 30 பறவைகள் அந்த கருத்தை ஏற்கவில்லை. சிங்கத்தின் உதவி பெறலாம் என்பதில் முடிவாக இருந்தார்கள். தங்கள் கருத்துக்கு அதிக பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், அவர்களின் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள். 

நேரமாக ஒவ்வொரு பறவைகளின் காலில் வலு குறைந்துக் கொண்டே வந்தது. “தறையில் இறங்கிய பிறகு, யாருடைய உதவிப் பெறலாம்” என்று தலைமை பறவை கூறியது. 

 “முடிவெடுத்த பிறகு தரையில் இறங்கலாம்” என்று இன்னொரு 20 பறவைகள் கூறியது. 

இப்படியே பறந்தப்படி பேசிக் கொண்டு வரும் போது கடல் மத்தியில் பறந்துக் கொண்டு இருந்தது. ஒரு சில பறவையால் பறக்க முடியவில்லை. வலையில் இருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்கி கடலில் விழுந்தது. 

தப்பிக்கும் போது இருந்த ஒற்றுமை தங்களை விடுவித்துக் கொள்ளும் போது இல்லாததால் எல்லா பறவைகளும் மடிந்தது. 

 Management நீதி : 

 ஒரு குழு (Team) ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை. அந்த ஒற்றுமையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொண்டால் தான் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியும்.

Tuesday, December 8, 2015

பலரின் உழைப்பை உரிந்த சென்னை மழை !

நேற்று மாலை, மழையில் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் வீட்டு செல்லும் போது அவருக்கு உதவியாக ஏதாவது பொருள் வாங்க நினைத்தேன். ஐந்து நாட்களாக தனது வீட்டில் மின்சாரம் இல்லை என்று சொன்னதால், ஒரு Emergency Lamp வாங்கலாம் என்று ஒரு எலக்ட்ரானிக் கடைக்கு சென்றேன்.

அங்கும் மின்சாரம் இல்லை. 

மாலை 6 மணி என்றாலும் இரவு 8 மணிக்காக இருள் இருந்தது. ஒரு சிறிய விளக்கில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். Emergency Lamp கேட்டப் போது, மூன்று, நான்கு விளக்குகளை எடுத்துக்காட்டினார். ஒன்று பார்ப்பதற்காக நன்றாக இருந்தது, விலையை கேட்டேன்.

“ரூ.500” என்றார். 

ரூ.300 இருக்கும் என்று நினைத்தேன். அதிகப்படியாக ரூ.400 கொடுக்கலாம்.


“இந்த விலை மழைக்கும் சேர்த்தா ?” என்றேன். 


“சார் ! இது முப்பது வருஷம் கடை. அதிக லாபம் வச்சு வீக்கிறதில்ல.” என்று சொல்லி மழையில் அழிந்த எலக்டிரிக் பொருட்களை தூக்கி வீசிக் கொண்டு இருந்தார். இந்த இருட்டில் தன் உழைப்பை தொலைத்தவரின் குரல் என்னை எதோ செய்தது. 

நான் பேரம் பேசினால் ரூ.100 குறைக்கலாம். ஏனோ ரூ.500 கொடுத்து பொருளை வாங்கி, பலர் உழைத்து வாங்கிய பொருட்கள் குப்பையாக கொட்டி வைத்த தெருவில் நடந்து வந்தேன். 



இறந்தவர்களின் உயிரை எப்படி மீட்டுத்தர முடியாதோ, அதேப் போல் இழந்த அவர்களின் உழைப்பை திருப்பி கொடுக்க முடியாது. 

இந்த மழை… 
எத்தனை பேரை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திற்கு தள்ளியிருக்கிறதோ ? எத்தனைப் பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்தார்களோ ? 
இதில் இருந்து எத்தனை பேர் மீண்டு வரப்போகிறார்களோ ? 
தெரியவில்லை. 

உணவு, பொருள், உடை என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். அன்பு காட்டலாம். இழந்த அவர்களின் உழைப்பை எப்படி கொடுப்பது ? விடையில்லை. 

இந்த மழை… பல பணக்காரர்களை ஒரு பாட்டில் தண்ணீரை கையேந்தி வாங்க வைத்தது. எதுவும் நிறந்தரம்மல்ல என்ற உண்மை உணர்த்தியது. மனித நேயத்துக்கு உயிர் கொடுத்தது. அதேப் போல் பலரின் உழைப்பை உரிந்திருக்கிறது. 

’எல்லாம் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில், எல்லாவற்றையும் மனதில் சுமந்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை தான் நாம் வாழ வேண்டியதாக இருக்கிறது.

Monday, December 7, 2015

காமராசர்

லட்சக்கணக்கான
புகழ்ப் பெற்ற பணக்காரர்கள் 
வாழும் நாட்டில்
புகழ்ப் பெற்ற ஏழை
காமராசர் ! 

சமான்யனாக பிறந்து
சாம்ராஜ்ஜியத்தை அமைத்த 
முதல்வர்களுக்கு மத்தியில்
ஏழையாக பிறந்து
ஏழையாக இறந்தவர் !


வரும் தலைமுறையினருக்கு
வழிக் காட்டியாய் இருந்து
வழி வகுத்து
முதல் அமைச்சர் பதவியில்
விளகியவர் !

எடுத்த காரியங்களை
கர்மமென முடித்ததால்
“கர்மவீரர்”
என்ற பெயருக்கு
சொந்தக்காரர் !

காந்தியின் பிறந்த நாள் அன்று
காந்தியின் திருவடி அடைந்தவர் !

முதல்வர்கள்
எப்படி இருக்க வேண்டும் 
என்பதற்கு
பல்கலைக்கழகமாக
வாழ்ந்த
எங்கள் காமராசர் !

LinkWithin

Related Posts with Thumbnails