வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 30, 2011

உலக சினிமா : Dr.Babasaheb Ambedkar

ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.



காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.

‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.

அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.

தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.

மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.

காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்‌ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

“He is not Mahatma. He is an moderm politican"

" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"


காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."

இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.

காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.

தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.

தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.

புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.

இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.

இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.

இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..

இந்த படத்தை முழுமையாக பார்க்க...

Thursday, December 29, 2011

ஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்பு பெண்மணி

தாழ்த்தப்பட்டவன் ஆயுதம் எடுத்தால் நக்ஸலைட். தமிழன் ஆயுதம் எடுத்தால் விடுதலை புலி. இன்று தேசிய அளவில் இப்படி பலரது எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை அறிமுகப்படுதிய இந்தியாவில் மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? என்று காந்தி ஆதரவாளர்கள் வக்கனையாக பேச தெரியும். அன்னா ஹசாரே உண்ணா விரதத்திற்கு கூட்டமாக சென்று ஆதரவு அளிக்க தெரியும். ஊடகத்தில் அகிம்சையை பற்றி பேச தெரியும். ஆனால், இவர்களுக்கு முன்பு பதினொரு வருடங்களாக தன் இளமையை தொலைத்து ஒரு பெண்மணி தன் மாநிலத்திற்காக போராடி வருகிறாள். அவளுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ யாருமில்லை. வருடத்துக்கு ஒரு முறை, ஷர்மிளா பத்து வருடம் உண்ணாவிரதம் முடித்துவிட்டார், பதினொரு வருடம் முடித்துவிட்டார் என்று செய்தி வெளியீடுவது சடங்காகவே இருக்கிறது. அவர் போராட்டத்திற்கு பெரிய முன்னேற்றமில்லை.

மணிப்பூர். இந்தியாவின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஓரமான மாநிலம் மட்டுமல்ல. இந்திய அரசு ஓரம் கட்டிய மாநிலம். இயற்கை வளம். அழகான தேயிலை தோட்டம். வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. இப்படி பல வர்ணனை வார்த்தைகள் மணிப்பூரை சொல்கிறார்கள். ஆனால், அந்த மாநிலம் பிரிவினைவாதிகளிடமும், இந்திய இராணுவத்திடமும் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் மணிப்பூர் கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்கு தேவையான உணவு, பணம் வாங்கிவருகிறார்கள். அவர்களை பிடிக்க முடியாத இந்திய இராணுவம் உதவி செய்த மக்களை வன்கொடுமை செய்திருக்கிறது. உள்ளூர் காவல்துறையினரும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக நிற்கின்றனர்.



அப்பாவி மக்களை சுட்டு, அவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லி ஒவ்வொரு பிணத்தையும் இந்திய இராணுவம் கணக்கு சொல்லியது. பெண்களை கற்பழித்து, பிறகு தங்கள் தோட்டாக்கள் மூலம் பெண்ணுறுப்பை அழித்தனர். இந்திய சட்டமும் அதற்கு உதவியாகவே இருந்தது. தட்டிக் கேட்கவும் முடியாது. கேட்டாலும், தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவார்கள். கிட்டதட்ட, ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கும் மாநிலமாக மணிப்பூர் இன்று வரையும் இருந்து வருகிறது.

இந்திய இராணுவம் நடந்த பல தாக்குததில் ஒரு தாக்குதல் மலோம் கிராமத்தை அதிர வைத்தது. பஸ்க்காக காத்திருந்த பத்து கிராமத்தினரை பிரிவினைவாதிகள் என்று சொல்லி இந்திய இராணுவம் சுட்டு தள்ளியுள்ளது. இறந்த பத்து அப்பாவினர் குடும்பத்திற்கும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு நியாயம் கிடைக்க, இது போல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசு மணிப்பூரில் இருக்கும் இராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும். விராசனை இல்லாமல் கொல்லப்படுவதை திருத்த வேண்டும் என்று துடித்து எழுந்து தனி பெண்ணாக களத்தில் குதித்தார் ஐரோம் ஷர்மிளா.

மனித வெடி குண்டாக மாறவில்லை. துப்பாக்கி எடுத்து யாரையும் சுடவில்லை. தன் உடல் தான் ஆயுதம். காந்தி வழி தான் சிறந்த வழி. நவம்பர் 2, 2000 இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்க் கொண்டார். ’தற்கொலை முயற்சி’ என்று அவரை அரசு கைது செய்தது. காவலில் இருக்கும் போது இறந்து விடக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக உணவு குழாய் பொருத்தினர்.

தான் இறந்து போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது அவரும் ஏற்றுக் கொண்டார். இன்றளவும், உணவு, தண்ணீர் இல்லாமல் உணவு குழாய் மூலம் வாழ்ந்து வருகிறார்.

ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த பதினொரு ஆண்டுகள் பல முறை தற்கொலை முயற்சி (IPC 309) சட்டத்தில் கைது செய்து உள்ளது. ஆனால், இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற யோசித்ததுக் கூட இல்லை. காந்தி வழியில் நியாயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்துகிறார்.

பல மாதர் சங்கங்கள் ஷர்மிளா போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஷர்மிளா பெயர் பரிசிலனை செய்யப்பட்டது. மணிப்பூரின் ”இரும்பு பெண்மணி” என்று பலராலும் போன்றபடுகிறார்.

ஊடகங்கள் அண்ணா ஹசாரேவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐரோம் ஷர்மிளாவுக்கு கொடுக்கப்படவில்லை. ஹசாரே கேட்கும் லோக் பால் மசோதாவை விட ஷர்மிளாவின் கோரிக்கை மிகவும் மலிவானது. இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ஆனால், அதற்காக அவர் பதினொரு வருங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் தோழர்கள் இவருக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

Wednesday, December 28, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் புது வெளியீடுகள் !

சென்னை புத்தக கண்காட்சி நெருங்க நெருங்க, எல்லா பதிப்பகங்களும் மண்டை உடைத்துக் கொள்வது “அடுத்து நாம் என்ன புத்தகம் போட வேண்டும்?” என்பது தான். பதிப்பாளரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, “ என்ன புத்தகங்கள் வெளியீட போறீங்க?” என்பது தான்.

நான் அதிகம் மண்டை உடைத்துக் கொள்ளவில்லை. காரணம், பதிப்பகத்தை தொழிலாக நினைக்கவில்லை. பதிப்பகத்தில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டு புத்தகம். இரண்டுமே கவிதை.

விழிப்பறிக் கொள்ளை - உமா சௌந்தர்யா
பக். 80, விலை. ரூ.40



ஒரு பதிப்பகம் கவிதை நூல் வெளியீட முடிவு செய்ய பிறகு, கண்டிப்பாக ஒரு காதல் கவிதை தொகுப்பு நூல் அவர்கள் வெளியீட்டு பட்டியலில் இருப்பது நல்லது. புத்தக கண்காட்சிக்கு காதல் கவிதைக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் வருகிறது. யார் எழுத்தாளர்கள் என்று பார்ப்பதில்லை. காதல் கவிதை புத்தகங்களை வாங்கிவிடுகிறார்கள் அல்லது அங்கேயே முழுமையாக படித்து வைத்து விடுகிறார்கள்.

அப்படி காதல் கவிதை வெளியீடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது நண்பரும் குறும்படம் இயக்குனருமான பொன்.சுதா மூலம் அறிமுகமானவர் உமா சௌந்தர்யா அவர்கள். “காதல் கவிதை” நூல் என்றது பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதியிருக்கிறார்கள். பெண்கள் பார்வையில் காதல் கவிதை நூல்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.

காதல் கவிதை பெண் பார்வையில் படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக தொகுப்பில் என்னை கவிர்ந்த கவிதை.

எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை
எல்லாம்
எனக்காகவே செய்தாய்
என்பதைத் தவிர.

**

நுணலும் தன்
வாயால் கெடும்
நானும்தான் உன்
காதலை சம்மதித்து


ஆண் பார்வையில் வெற்றி பெறும் காதல் கதை, பெண் பார்வையில் வெற்றி பெறுவதில்லை. (உதாரணம், அழகி, பூ படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்). காதல் ஆண் கோணத்தில் வாசித்த வாசகர்களுக்கு பெண் கோணத்தில் இருந்து வாசிக்க இந்த கவிதை புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்
பக். 80, விலை. ரூ.40



ஈழப் போர் முடிந்து விட்டது என்று எதிரிகள் குரல் எழுப்பினாலும் இன்னும் முடியவில்லை என்று தமிழகத்தின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஈழ தொடர்பான கட்டுரை நூல் அல்லது விமர்சன நூல் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய போது, தம்பி கனியம் செல்வராஜ் மூலம் அறிமுகமானவர் கருவை சு.சண்முகசுந்தரம்.

கவிதை நூல் என்று சண்முகசுந்தரம் சொல்லும் போது நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். அவர் எழுதியதை வாங்கும் போது கூட எனக்கு ஆர்வமில்லை. படித்தவுடன் கண்டிப்பாக இந்த நூலை நான் தான் வெளியீட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன். பல பக்கங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை விட, இவரின் ஐந்து வரி கவிதைகள் இதயத்தை பதம் பார்த்துவிடுகிறது.

குறிப்பாக கீழ் காணும் கவிதைகள்...

மனைவியைப் பிரிந்து
துறவு பூண்டான்
புத்தன்
பூட்டிய வீட்டிற்குள்
அத்துமீறும்
புத்தனின் பிள்ளைகள்

**

பசி வந்தால்
பத்தும் மறக்குமாம்
மறக்கவில்லை
நாங்கள்
தனிநாடு.

**

தமிழன் என்பதால் தாக்கப்பட்டோம்
அதைக்கண்டு
நாங்கள் வளர்த்த மாடுகள்
”அம்மா!” வென்று கத்தி
கண்ணீர் வடித்தன.

மாடுகளையும்
அவர்கள்
விட்டபாடில்லை.

**

இன்னும் பல கவிதைகள் தொட்டாக்களாக வரவிருக்கிறது.

“ஓயாத அலை” என்ற தலைப்பில் வந்த கவிதை தொகுப்பை, “பிணம் தின்னும் தேசம்” என்று தலைப்பை மாற்றினேன். நெல்லை ஜெய்ந்தா, அப்துல் காதர் அவர்கள் அணிந்துரையை பக்கத்தின் காரணமாக குறைக்க வேண்டியதாக இருந்தது. மற்றப்படி, சண்முகசுந்தரத்தின் படைப்பில் பதிப்பாளராக நான் கை வைக்க மனம் வரவில்லை. நாகரத்னா பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் எனக்கு மிகவும் மன நிறைவு கொடுத்த நூல் "பிணம் தின்னும் தேசம்” தான். கண்டிப்பாக இந்த நூலுக்கு ஒரு விருது உண்டு என்று என் உள்மனம் சொல்கிறது.

***

இரண்டு கவிதை நூலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. நூல் வெளியீட்டு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நூல் வாங்க விரும்புபவர்கள் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Monday, December 26, 2011

காதல் பயணங்களில்.... – கு.சுரேஷ்

அன்புள்ள கு.சுரேஷ் அவர்களுக்கு,

தங்கள் அனுப்பிய கடிதமும், கவிதை புத்தகமும் கிடைத்தது. நூல் அனுப்பியதற்கு நன்றி.

கல்லூரி படிப்பு முடித்ததும் குறுகிய காலத்தில் புத்தகம் வெளியீட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பல இடங்களில் உங்களின் கல்லூரி காதல் அழகாய் தெரிகிறது.

குறிப்பாக சில கவிதைகள்...

சந்திப்பு சலனமாகிறது (பக்.21)

முழுமையாய்க் காதலைச் சொன்னவள்
முதன் முதலாக என் காதலுக்கு
முடிவுரை எழுதிவிட்டாள்...

Pg.22
திருமணப் பத்திரிக்கையுடன்
என்னைப் பார்க்க வந்தவள்
என் காதல் பத்திரத்தைத் திருப்பி தந்துவிட்டாள்...
ஒரு இடைவேளையில் இந்தச்
சந்திப்பு சலமாகிறது

ஒரு செவ்விதழ் (pg. 30)

வேஸ்ட் பேப்பருக்குள்
ஒரு வேட்பு மனு
அவள் காதல் கையொப்பத்துடன்...

வார்த்தைகள் நடுவில் வண்ணங்கள்
சிதறிக்கிடந்தன என் இதயத்தின்
குப்பைத் தொட்டியில்...

நானும் – அவளும் (பக்.41)

அவள் தோன்றி – அவளுடன்
இன்னொரு காதலும் தோன்றியது
நான் இல்லாமல்...

மேல் சொன்ன கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ஒரு சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். நூல் வடிவ அமைப்பு மிக சுமாராக உள்ளது (முன் அட்டையில் உங்கள் பெயர் இருப்பது கூட தெரியவில்லை). போதுவாக இதுப் போன்ற காதல் கவிதை நூல்களுக்கு கவிதைக்கு தகுந்தால் போல் படங்கள் இருப்பது நல்லது. வாசகனை வாங்க இது போன்ற படங்கள் மிகவும் உதவும்.

நெடுங்கவிதைகளை விட நான்கு வரி கவிதைகள் தான் அதிகம் வாசகர்கள் விரும்புவார்கள். நான் மேற்கோள் காட்டிய கவிதையே அதற்கு உதாரணம்.

எல்லா கவிதைகளும் ஆண் பார்வையில் இருந்த கவிதை, “கல்லறை பதிவு” கவிதை மட்டும் ஏன் திடீர் என்று பெண் வடிவில் மாறியது என்று தெரியவில்லை. நூல் தொகுக்கும் போது ஒத்த கருத்துள்ள கவிதைகளை தேர்வு செய்யுங்கள்.

எழுத்துக்களில் மிகவும் கடினமானது எழுத்துக்களை கோர்த்து கவிதை வடிவம் தருவது தான். ஆனால், பலர் முதல் நூலாக கவிதை நூல் எழுத தான் ஆசைப்படுகிறார்கள். அதையே தான் நீங்களும் முயற்சித்துள்ளீர்கள். உங்கள் முயற்சித்துக்கு என் வாழ்த்துக்கள்.
கவிதை என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல், சிறுகதை, கட்டுரை என்று உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

அன்புடன்,
குகன்

**

வெளியீடு
கு.சுரேஷ்
சேனை தலைவர் மண்டபம்,
கட்த்தூர் (அஞ்சல்)
பாப்பிரெட்டிபட்டி (வட்டம்),
தருமபுரி மாவட்டம்.
பேசி : 04348 - 241169
விலை. ரூ.30/- பக் : 48

Friday, December 23, 2011

போராளிகளின் துப்பாக்கி வரிகள் - செந்தமிழன் சீமான்

தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.

நான் சிறுவயதில் என் சொந்த மண்ணிலிருந்து என் ஈழ உறவுகளை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வையில் என் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த கவிதை வரிகள் அமைந்துள்ளது.
முகவை மண்ணின் உப்புக்கலந்த காற்று என் உறவுகளின் உணர்வை பிரதிபலிக்கும். அந்த உப்புக்கான உணர்ச்சியோடு தம்பியின் கவித்துவம் அமைந்துள்ளது.

ஓயாத அலைகளென ஆரம்பித்து ‘சங்கார நிசமென சங்கே முழங்கு’ என்று என் மூத்தவன் பாரதிதாசன் சொல்லுவதைப் போல் ஈழ மக்களின் போராட்டங்களின் நியாயங்களையும் தீர்வையும் அழகாய் சொல்லியுள்ளார்.

”எத்தனை உயிர்களை கொடுத்தோம்
இன்னும்
எத்தனை உயிர்களை வேண்டுமென்றாலும்
கொடுப்போம்
ஒருபோதும் நிற்காது
ஓயாத அலைகள்”


என்று தமிழரின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார்.

காந்தி தேசம் கொடுத்த ஆயுதத்தில் புத்த தேசம் குண்டு போட்டு கொன்றது காந்தியும், புத்தனும் குற்றவாளிகளாய், தமிழ் மக்களின் நீதிமன்றத்தில், காந்தியும் புத்தனும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் தான் பகத்சிங்கை துணைக்கு அழைத்தோம் என்று நம் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காந்தி தேசத்திலிருந்து புத்த தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.

சிங்களவின் இனப்பசிக்கு எங்களின் உரிமைகளை இழிந்தோம், உடமைகளை இழந்தோம், உயிரையும் கொடுத்தோம். ஆனால், இன்னும் இந்த தேசங்களின் தனி நாடு கேட்பது தவறென்கிறது என்பதை தம்பியின் வரிகள் அழகாய் சொல்லுகிறது.

“தனிநாடு கேட்பது தவறா ?
அப்படியானால்
உலக நாடுகளே ஒன்றினையுங்கள்”


தம்பியின் இந்த வரிகளில் எங்களின் கோபமும் எங்களின் நியாயமும் தென்படுக்கின்றது.

தம்பி உன் உணர்வுகளோடு இறுதியாய் எங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் போல் அழகாய் இந்த கவிதைகளுக்கு முடிவுரை கொடுத்துள்ளாய்.

”இன்று
நாளை
நாளை மறுநாளென்று
என்றேனும்
ஒரு நாள்
நடைமுறைக்கு வரும்
தனி நாடென்னும்
நேற்றைய தீர்மானம்”


என்று தம்பி சண்முக சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் அன்பு உடன்பிறப்பாய்,
சீமான்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய "பிணம் தின்னும் தேசம்" - ஈழ கவிதை நூலுக்காக செந்தமிழன் சீமான் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Thursday, December 22, 2011

"மழைக்கால துளசி போல...." - வித்தகக் கவிஞர் பா.விஜய்

குளிர் காலத்தின் அதிகாலையில், ஜன்னல் திறந்தும் உள்ளே அனுமதி கேட்காமல் நுழையும் பனிக்காற்று போல, கவிதையும் எழுதுபவரின் அனுமதி கேட்காமல்தான் படைப்பாய் பரவும்.

கவிதையின் சௌகரியமே இஷ்டத்திற்கு வளைத்து நெளித்துக் கொள்ள து சம்மதிப்பது தான். கவிதையைப் போல சொன்னபடி கேட்கும் குழந்தையும் இருக்க முடியாது. கவிதையைப் போல சொல் பேச்சு கேட்காத குழந்தையும் இருக்க முடியாது.

விழிப்பறிகொள்ளை புத்தகத்தை எழுதிய உமா சௌந்தர்யா, அவருடைய கணவர் மூலமாக பற்பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். எனது தந்தையுடன் நூற்பாலையில் சேர்ந்து பணிபுரிந்த இனிய நண்பர் தான் உமா சௌந்தர்யாவின் கவிதைகளுக்கும் இன்று நண்பராய் இருக்கின்ற அவரது கணவர் திரு. முருகேசன்.

ஒரு பெண் குடும்பத்தின் பணைப்புகளுக்குள் மூழ்கி கிடக்கும் போது, தளக்குள் இருந்து ஏதோ ஒரு தனித்துவத்தை உலகின் பார்வைக்கு பதிவுசெய்வதற்காக வெளியே வருவது மிக மிக ஆரோக்கியமாக, விழி அரங்கங்கள் நிரம்ப, கைதட்டல்களால் வரவேற்கக் கூடிய ஒன்று.

அலுவலகங்களோ, குடும்பங்களோ சம்பாத்தியம் இல்லாத அல்லது சமாத்தியத்துடன் கூடிய கை விலங்குகள்தான் பெண்களுக்கு. அதையும் மீறி, ஆத்மாவின் பாடலை படைப்புகளாய் வெளிவரச் செய்யும் பெண்மைகள் போற்றப் பட வேண்டியவை.

இந்த கவிதை தொகுப்பிற்குள்,

"என் வானம்
திரண்டு கிடக்கிறது
உன் நினைவுகள்
எப்போது வேண்டுமானாலும்
பெய்யாலாம்
விழிகளில் மழையாய்..."


என்ற கவிதையில் இதயமும் சேர்ந்து நனைந்தது.

"சிதைந்து போன
இதயத்தை தூக்கிக் கொண்டு
ஒடோடி வருகிறேன்

உடைந்த உன் மனதை
அள்ளிக்கொண்டு அப்போது தான்
சென்றதாய்
அக்கம் பக்கம் தகவல்

திரும்பும் வழியில்
கிடைக்கலாம்
இன்னொரு இதயம்
உனக்கோ எனக்கோ
"

இந்த தொகுப்பில் பளிச்சென்று மனதில் பதியம் போட்டுவிட்டு ஒடிப்போன ஒரு ஆழமான நிகழ்ச்சியின் ததும்பல் இந்த கவிதை.

"குவளையில் தேநீர்
அருந்தும் சாக்கில்
விழிகளால் என்னை
உறுஞ்சும் உன் உயிர்"


இந்த கவிதையில் சொற்களுக்குள் உணர்ச்சியை பிசைந்து தருகிற கலப்பியல், உமா சௌந்தர்யாவிற்கு கை வந்திருக்கிறது. அத்னால்தான் தலைப்பிலே கூட, வழிப்பறிக் கொள்ளை என்ற வழக்கு வார்த்தையை உடைத்து, விழிப்பறிக் கொள்ளை என்ற பெயரை உருவாக்க முடிந்திருக்கிறது.

வார்த்தைகளில் புதிது செய்வது ஒரு படைப்பாளனுக்கு மிக மிக அவசியம். அப்படி அழகான திரிபுகள் பல, இத்தொப்பிலே வாசல் கோலத்தின் புள்ளிகளை போல, மிக நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

மழைக்காலத்தில் சில்லென்று ஆடிக்கொண்டிருக்கும் துளசி இலைகள் மாதிரிதான் நல்ல கவிதைகளை படிக்கும்போது மனதிற்குள் ஒரு கம கம வாசமும், சில்லென்ற மனோநிலையும் பதமாக உருவாகும். விழிப்பறிக் கொள்ளையில் அப்படி ஒரு மனோநிலை உருவாகிறது.

தொடர்ந்த எழுத்து முயற்சி இன்னும் அழகான படைப்புகளை நோக்கி உமா சௌந்தர்யாவை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். அவருடைய முதல் படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நம்பிக்கையுடன்,
பா.விஜய்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் உமா சௌந்தர்யா எழுதிய "விழிப்பறிக் கொள்ளை" - காதல் கவிதை நூலுக்காக வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Monday, December 19, 2011

தினமணியில் பாரதியாரின் 130வது பிறந்தநாள் !

உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் மகாகவி பாரதியின் 130வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி , எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் 11.12.11 அன்று நடைப்பெற்றது.அதைப் பற்றிய செய்தி தொகுப்பு 16.12.11 தினமணியில் வந்துள்ளது.

நான் எழுதி படித்த " நான் பாரதியானால் " கவிதைப் பற்றி செய்தியும் இடம் பெற்றுள்ளது. நண்பர்களின் பார்வைக்கு....

Friday, December 16, 2011

உலக சினிமா : Shadow of Time

மனிதன் வாழ்க்கையில் காதல் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. பதின் வயதில் வரும் காதல் சந்தோஷத்தை கொடுக்கும். வாலிய வயதில் வரும் காதல் சுகத்தை தரும். நடுத்தர வயதில் வரும் காதல் ஆறுதலை தரும். முதுமையில் வரும் காதல் இறப்புக்கு முன் நிம்மதி தரும். ஒவ்வொரு காலத்திலும் மற்றவர் மீது வைத்திருக்கும் காதல் தான் நம் வாழ்க்கையில் நம்மை பயணிக்க வைக்கும். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த காதல் ஒரு பெண்ணின்/ஆண்ணின் மீது மட்டும் இருக்கிறதா என்பது தான் சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் வரும் இந்த நான்கு காலகட்டத்திலும் காதலர்களுக்குள் பயணமாகும் அன்பை காட்டியிருக்கும் படம் தான் ‘Shadow of Time’.

1940 ல், கல்கத்தாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யும் நெசவு தொழிற்சாலையில் தந்தையால் ரூ.25க்கு விற்கப்படுகிறாள் சிறுமி மாஷா. அங்கு ரவி என்ற சிறுவனின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. பிஞ்சு மலர்களை கசப்பதற்காக பிரத்தேயமாக தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை வேலை அவர்களை நசுக்கிறது. அந்த வேலை பலுவிலும் இருவருக்குள் இருக்கும் ஒரே சந்தோஷம் அவர்களுடைய நட்பு தான். தன் தந்தை பணம் சம்பாதித்து தன் தந்தை திருப்பி அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாஷாவிடம், ரவி அவர் வரமாட்டார் என்று சொல்கிறான். இருவருக்குள் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் நெசவு தொழிற்சாலை மேலாளர் மாஷாவை ஒரு சீமானுக்கு விற்றுவிடுகிறார். அவளை காப்பாற்ற ரவி தன் கையில் இருக்கும் ரூ.35 யை கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 2 பைசா என்று தன் சம்பளத்தில் பிடித்து மாஷாவை மேலாளரிடம் விடுவிக்கிறான்.



மாஷா தன் தந்தையை தேடி நகரத்துக்கு செல்லும் போது, ஒவ்வொரு பௌர்நமி அன்றும் சிவன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள். பெரியவர்களானதும் நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தன் தந்தையை தேடி செல்கிறாள் மாஷா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்ள, அவள் அங்கு வளர்கிறாள்.

காலம் கடக்கிறது. மாஷா விபச்சார விடுதியில் நடனக்காரியாக இருக்கிறாள். வாலிப வயதில் இருக்கும் ரவி தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தை தன் மேலாளரிடம் கொடுத்து தன்னை தானே விடுவித்துக் கொள்கிறான். தன் சம்பளத்தை இரண்டு மடங்காக மாற்றுவதாக சொல்லியும், ரவி அங்கிருந்து வெளியே வருகிறான். சம்பளமில்லாமல் உணவுக்காகவும், தங்க இடத்திற்காகவும் பழைய கம்பளக் கடையில் வேலைக்கு சேர்கிறான். அந்த கடையின் உரிமையாளர் ஒரு முதியவர். அவர் பேத்தி தீபா ரவியை விரும்புகிறாள். ஆனால், ரவி இரவு நேரங்களில் மாஷாவை தேடி கல்கத்தா முழுக்க அழைகிறான். விபச்சார விடுதி பெண்களிடம், தரகர்களிடம் என்று மாஷாவைப் பற்றி விசாரிக்கிறான். ஒரு கட்டத்தில் மாஷா ரவியை அடையாளம் கண்டு அருகே வர நினைக்கும் போது, சிவன் கோயிலில் ரவி தீபாவிடம் பேசுவதை பார்க்கிறாள். ரவி திருமணமானதாக நினைத்துக் கொண்டு, மாஷா ஒதுங்கிக் கொள்கிறாள். கம்பளக்கடை உரிமையாளர் இறக்க, ரவி தீபாவை திருமணம் செய்துக் கொள்கிறான். ரவி கம்பளக்கடை பெரிய கம்பள நிறுவனமாக மாறுகிறது. வெளிநாடுகளுக்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் முன்னேறுகிறான்.

ஒரு சமயம், ரவியின் 200 கம்பளம் வெளிநாட்டுக்கு போகாமல் தடைப்பட சுங்க அதிகாரி அலுவலகத்துக்கு செல்கிறான். அங்கு தனது பழைய வாடிக்கையாளர் மிஷ்ரா சுங்க அதிகாரியாக இருப்பதை பார்க்கிறான். மிஷ்ரா ரவி உதவி செய்ததோடு இல்லாமல், இரவு விருந்துக்கு அழைக்கிறான். மிஷ்ரா ரவியிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைக்க, அது தன் பாலிய காதலி மாஷா என்று புரிந்துக் கொள்கிறான். விருந்தில் தனியாக இருந்த ரவியிடம் மாஷா கோயிலில் அவனை மனைவியுடன் பார்த்ததை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபப்படுகிறாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்கு சென்று "அன்று மட்டும் அவள் தன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது" என்கிறான். மாஷா ரவியை தேடி அவன் நிறுவனத்திற்கு செல்கிறாள். மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விடுகிறது. மாஷா தன் கணவனுக்கு தெரியாமல் ரவியுடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.

மிஷ்ரா கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு வேலை மாற்றல் கிடைத்ததால், தன் மனைவி மாஷாவை அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். மாஷா ரவி இழக்க விரும்பவில்லை. ஆனால், ரவி தன் மனைவிக்கும், தன்னை நம்பும் மிஷ்ராவையும் ஏமாற்ற முடியாமல் தடுமாறுகிறான். மிஷ்ரா, மாஷா வை ரயிலில் ஏற்றி விடும்போது, மாஷா கர்ப்பமாக இருப்பதை மிஷ்ரா சொல்லி சந்தோஷப்படுகிறான். ரவி தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து முடிப்பதற்குள் ரயில் அங்கிருந்து செல்கிறது.

மீண்டும் காலம் பயணிக்கிறது. நடுத்தர வயதில் ரவி, தீபா இரண்டு குழந்தைகளோடு இருக்க அவனை பார்க்க மிஷ்ரா வருகிறான். மிஷ்ரா தனக்கு மகன் பிறந்தான் என்றும், ஆனால் அந்த தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறுகிறான். தன் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளை விரட்டிட்டதாக கூறுகிறான். இவ்வளவு வருடம் கலித்து, தன்னை சந்திக்க வந்து “ஏதற்காக இதை சொல்ல வேண்டும்?” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ?” என்கிறான். மிஷ்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்கிறது அந்த வார்த்தைகளிலே தெரிந்துக் கொள்கிறான் ரவி. மீண்டும் மாஷாவை தேடி சிவன் கோயில், விபச்சார பகுதிகளுக்கு செல்கிறான். ஒரு வீட்டில் மாஷா, தன் மகனுடன் இருப்பதை பார்க்கிறான் ரவி. மாஷா ரவியை திட்டி அனுப்புகிறாள். தன் கையில் இருக்கும் பணத்தை மாஷாவின் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு ரவி செல்கிறான். மாஷா ரவி தேடி வருவதற்குள், ரவி சென்று விடுகிறான்.

கதை தற்காலத்திற்கு வருகிறது. முதியவனான ரவி தான் சிறுவயதில் வேலை செய்த நெசவு தொழிற்சாலைக்கு வருகிறான். அங்கு ஒரு சிறுமியை பார்க்கிறான். அவள் சிறுவயதில் பார்த்த மாஷாப் போல் இருக்கிறாள். அந்த சிறுமி தன் பாட்டிக்கு தண்ணீர் தருவதை பார்த்து, அந்த பாட்டி மாஷா என்று அடையாளம் கண்டுக் கொள்கிறான். கண்ணிழந்த முதிய வயதில் தன் மகன் இறந்ததையும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்ட கதைகளை ரவியிடம் சொல்கிறாள். “நான் தான் ரவி” என்று சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சியில் ரவி அங்கு விட்டு செல்கிறான். சிறுமி தன் பாட்டி வந்தது யார் என்று கேட்க, “அவர் தான் ரவி” என்கிறாள். ரவி செல்வதை சிறுமி பார்த்த மாதிரி படம் முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டங்களும் ஒவ்வொரு பகுதியை சிறுகதைகளாகவும், அதற்கு ஒரு முடிவும் வைத்து படத்தை அழகாக காட்சி அமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னனி கல்கத்தாவில் நிகழ்வதால், ஆறுபது வருடங்கள் நகரத்தில் நிகழும் மாற்றங்கள் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளோரின் கல்லேன்பெர்கர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர் ஒரு ஆய்வுக்காக 2001ல் இந்தியா வந்தார். ஒன்றரை வருடம் கல்கத்தாவில் தங்கியிருந்த ப்ளோரின் அதன் பின்னனியில் இந்த காதல் கதையை எழுதினார். மற்றவர்கள் போல் இந்த கதையை ஆங்கிலத்தில் அவர் எடுக்க விரும்பவில்லை. பெங்காளி மற்றும் ஜெர்மன் மொழியில் எடுத்தார்.

2004ல் வெளியான இப்படம் பல ஐரோப்பா திரைப்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. ஜெர்மன் திரைப்பட விருதுதான பெவேரியன் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

Tuesday, December 13, 2011

நான் பாரதியானால் !!

நான் பாரதியானால்
நடிகன் பிறந்தநாள் கொண்டாடும் இத்தினத்தில்
ஒரு நாள் தமிழுக்காக உழைக்கச் சொல்வேன் !

நான் பாரதியானால்
நெய்வேலி மின்சாரம் போல்
கடனாய் கொடுத்த வீரத்தை
மீண்டும் உடம்பில் பாய்ச்சிடுவேன் !



நான் பாரதியானால்
ஆறு ரீட்டர் பூகம்பம் தாங்காத கட்டிட நடுவில்
அணு உலை எழுப்புவதை தடுத்திடுவேன் !
தமிழன் அராய்ச்சி பொருளாய் மாறுவதை
வேடிக்கை பார்க்க மாட்டேன் !

நான் பாரதியானால்
நினைவுச் சின்னங்களாக இருக்கும் இடங்களை
மக்கள் நினைவலையில் பதியவைத்திருப்பேன் !

நான் பாரதியானால்
மக்கள் புரட்சி
ரஷ்ய, அரபு நாடுகளில் மட்டுமல்ல
தமிழனுக்கும் பொதுவென்று
உணர்த்தியிருப்பேன் !

நான் பாரதியானால்
தமிழனை தமிழனே வஞ்சிக்கும் சூழலில்
தமிழனுக்கு ஒரு நாட்டை உருவாக்கி தந்திருப்பேன் !

நான் பாரதியானால்
ஆடை குறைப்பில் போட்டிகள் நிறுத்தி
அறிவை வளர்க்கும் போட்டிகள் நட்த்துவேன் !
பொருட்காட்சியில் இருக்கும் தமிழ் பாரம்பரியத்தை
இன்று வரை வாழ வழி வகுத்திருப்பேன் !!

நான் பாரதியானால்
டாஸ்மார்க் அரசு நடத்துவதை நிறுத்தி
விவசாயத்தை அரசு நடத்தச் சொல்வேன் !
மூடு விழா மட்டும் அரங்கேரும் வேளையில்
திறப்பு விழா செய்ய அரசுக்கு கட்டளையிடுவேன் !

நான் பாரதியானால்
தமிழனை ‘தமிழன்’ என்று உணர வைப்பேன் !!

”நான் பாரதியானால்”
என்ற கற்பனைக்கு இங்கு முற்றுபுள்ளி வைக்கிறேன்
என் வீட்டுக்கு
ஆட்டோ அடியாட்கள் வரவிரும்பவில்லை
பைத்தியக்காரன் என்று
பகடி வார்த்தைகளை கேட்ட விரும்பவில்லை
இறுதியாக,
என் மரணத்திற்கு
பதினொரு பேர் வர விரும்பவில்லை

நான் நானாக இருக்கிறேன்
பாரதி என்றும் சரித்திரமாக இருக்கட்டும் !!



11.12.11 அன்று கன்னிமாரா நூலகத்தில் நம் உரத்தசிந்தனை அமைப்பு பாரதியார் பிறந்தநாளுக்காக நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவிதைக்கு ரூ.200/- பரிசு கிடைத்தது.

Thursday, December 8, 2011

கவிதை : தாலாட்டு

பிறந்த தினத்தில்
அம்மாவின் ஸ்பரிசத்தில்
கிடைத்தது முதல் தாலாட்டு !

நடைபயின்று
ஓடி விளையாடிய பிறகு
தாலாட்டு கேட்கவோ நேரமில்லை
தாலாட்டு பாடவோ தாயில்லை !

அழகான இயற்கைக்கு
ப்ளாஸ்டிக் ஆடை வேண்டாம் என்றேன்
வணிகர்கள் காதுக்கு தாலாட்டாய் கேட்டது !

உணர்ச்சிகள் பீரிட்டு
ஊழலுக்கு எதிராக குரல் ஏழிப்பேன்
ஊழல்வாதிகளுக்கு தாலாட்டாய் ஒலித்தது !

போபாலாக கூடாங்குளமாகி
விட கூடாது என்றேன்
விஞ்ஞானிகளின் காதுக்கு தாலாட்டாய் கேட்கிறது !

வெளிநாட்டில் வேலை செய்ய
விருப்பமில்லை என்றேன்
மேலாளருக்கு தாலாட்டாய் இருந்தது !

என் உணர்வுகள்
என் ஆதங்கம்
என் கோபம்
என் எண்ணம்
எல்லோருக்கும் தாலாட்டாய் கேட்கிறது !

என் இறுதி துக்கத்திற்கு
தாலாட்டு
யார் பாட போகிறார் ?

Monday, December 5, 2011

மரம் : ஹைக்கூ கவிதைகள் - 10

காடுகள் அழித்து
குடி வர வீடு கட்டினோம்
மழை வரவில்லை !

**

காகித கப்பல் செய்யும்
குழந்தைகளுக்கு தெரிவதில்லை
அது மரத்தின் எச்சமென்று !!

**

பணத்தை திங்க முடியாது
என்று உரைத்தது
பாலைவனத்தில் !

**

மரங்கள் வெட்டப்படுவது
நிறுத்தப்படும்
அதற்கு வாக்குரிமை அளித்தால் !

**

மரத்தின் மரணம்
பல உயிர்களை காத்தது
ஈழப்படகு !

LinkWithin

Related Posts with Thumbnails