வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 13, 2017

May 18 ( 2007 - Korean film )

அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்திற்கான விதையாக அமைந்துவிடும். இது போராட்டக்காரர்களுக்கு தெரியும். அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். அதனால், பெரும்பாலான போராட்டத்தை ஒடுக்கும் போது போராட்டக்காரர்களோடு, பொது மக்களையும் சேர்த்து தாக்குவது அதிகார வர்க்கத்தின் வழக்கம். அப்போது தான் பொது மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வர மாட்டான் என்பது அதிகார வர்க்கம் நினைப்பது தான் காரணம்.

இந்த ஒடுக்குமுறையை தாண்டிப் போராடிய போராட்டங்கள் பல நூற்றாண்டு காலமானாலும் தனித்து நிற்கும். அப்படி, தென் கொரிய நாட்டில் தன்னெழுச்சி கண்ட க்வான்ஜு மக்கள் இராணுவ வீரர்களுக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்த உண்மை சம்பவத்தை உணர்வு பூர்வமாக காட்டியப்படம் தான் ”May 18”. 



க்வான்ஜுவில் கல்லூரியில் படிக்கும் தனது சகோதரனோடு அமைதியான வாழ்க்கை வாழ்பவன் மின் – வூ. சகோதரனின் தோழியான நர்ஸ் மீது ஒரு தலைக்காதல். அவளை கவர்வதற்காக அவள் மருத்துவப் பயணம் செல்லும் இடத்திற்கு செல்கிறான். தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கும் மின் – வூவுக்கு பிடிக்க இருவரும் திரைப்படத்திற்கு செல்கிறார்கள். படம் பார்க்கும் போது அவளிடம் தனது காதலை சொல்லலாம் என்று மின் – வூ நினைக்க, அரசியல் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை திசைமாற்றுகிறது. அவனது வாழ்க்கையை மட்டுமல்ல க்வான்ஜு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. ஒரு சிலரது வாழ்க்கையை முடித்துவிடுகிறது. 

அப்படி என்ன க்வான்ஜு நகரத்தின் நடந்தது ? அதற்கு, தென் கொரிய அரசியல் பின்னனியை தெரிந்துகொள்ள வேண்டும். 

அக்டோபர் 29, 1979 அன்று அரசியல் விருந்தில் கலந்துக்கொண்ட தென் கொரிய அதிபர் பார்க் ச்ஹூங் கொரிய உளவுத்துறை அமைப்பால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த கிம் ஜெ-க்யூவும் கைது செய்யப்படவில்லை. பல குழப்பத்திற்கு பிறகு ச்யோய் க்யூ என்பவர் தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், புதிய அதிபரின் ஆணையில்லாமல் கொரிய உளவுத்துறையில் இருக்கும் முக்கியமான நான்கு உளவு அதிகாரிகள் இராணுவத்தினர் கைது செய்கிறார்கள். அதற்கு பின் இருந்தவர் ச்ஹுன்-டூ-வான் என்ற இராணுவ தளபதி. 

கொரிய உளவுத்துறை தனித்து இயங்கவும் தடை விதிக்கப்படுகிறது, அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் ச்ஹுன்-டூ-வான். தென் கொரியாவின் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திய வட கொரியா மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பார்க்கிறது என்ற வதந்திப்பரவியது. அதை தடுப்பதற்கு முன் ஏற்பாடாக பல பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ச்ஹுன்-டூ-வான் நினைத்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படுபவர்கள் இராணுவம் கைது செய்வதும் மட்டுமல்ல, மரணத் தண்டனை கொடுக்கவும் ஆணையிட்டார். 

மே 17 அதிகாரத்தை கைப்பற்றிய ச்ஹுன்-டூ-வான், மே 18 இராணுவத்தை க்வான்ஜு நகரத்திற்கு அனுப்புகிறார். இராணுவத்தினர் பொது மக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்த பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இராணுவத்தினர் கற்களும், பாட்டிலும் வீசி தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தனர். ஆரம்பத்தில் சில நூறு பேராக இருந்தப் போராட்டம், மே 20 அன்று 10,000 கொண்ட போராட்டமாக மாறுகிறது. 

அடுத்த நாள் ( மே 21), போராட்டத்தை ஒடுக்குவதற்காக தூப்பாக்கி சுடு நடத்தப்படுகிறது. இராணுவத்தின் எதிர்பாராத தாக்குதலால் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள சிதறி ஓடுகிறார்கள். அன்று மாலை போராட்டம் நடந்த சாலை வெரிச்சோடி காணப்படுகிறது. ஆனால், க்வான்ஜு மக்கள் இராணுவத்திற்கு பயப்படவில்லை. காவலர் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி இராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

தற்காலிகமாக பின்வாங்கிய தென் கொரிய இராணுவம் அடுத்த நாள் எதிரி நாட்டு இராணுவத்தை தாக்குவது போல் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பெரும் இராணுவப்படையினர் நகரத்திற்குள் வருகிறது என்று தெரிந்தும், சில பேர் கைப்பற்றிய இராணுவ கட்டிடத்தின் இருந்து இராணுவத்திடம் போராடி இறந்தார்கள். 

க்வான்ஜுவில் மே 18 அன்று தொடங்கிய எழுச்சியை இராணுவத்தினர் மே 27 அன்று முழுமையாக ஒடுக்கினர். இதில் ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பல பதக்கங்கள் கொடுத்து ச்ஹுன்-டூ-வான் அரசு அழகுப் பார்த்தது. இராணுவ சர்வதிகாரம் நீண்ட நாள் நிலைப்பதில்லை என்பது வரலாறு. 

1988ல் அதிபர் பதவியை இழந்த ச்ஹுன்-டூ-வான் மீது பல ஊழல் புகாரும், வழக்கங்களும் சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் க்வான்ஜு படுகொலை காரணமாக இருந்ததற்காக அவருக்கு மரண தண்டனையும் வழக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அதிபர் அவரது மரணத் தண்டனையை ரத்து செய்தார். 

இராணுவத்திற்கு எதிராக போராடிய க்வான்ஜு மக்களுக்கு ஒரு நினைவு சின்னமாக க்வான்ஜு நகரில் எழுப்பப்பட்டது. க்வான்ஜு படுகொலை ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுத்த பதக்கங்களை தென் கொரிய அரசு திரும்பப் பெற்றது. 

இராணுவ அதிகாரத்தை துணிந்து எதிர்த்து போராடிய க்வான்ஜு மக்களின் போராட்டம் தென் கொரிய வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கிறது.

Tuesday, April 11, 2017

Edge of Seventeen ( 2016 - English Movie)

பதின்ம வயது என்பது ஆபத்தான வயது என்று பலர் சொல்வார்கள். காரணம், அந்த வயதில் தவறாக வழியில் செல்வார்கள், தவறாக பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்பதற்காக மட்டுமல்ல, கற்றுகொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை தவறவிடக்கூடிய வயது என்பதாற்காகவும் தான். அந்த பதின்ம வயதில் உடல் ரிதியான மாற்றங்கள் மட்டுமல்ல, உளவியல் ரிதியான பல மாற்றங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதை எப்படி திறமையாக கையாண்டு, Balance ஆக வாழ்பவர்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முடியும்.

அப்படி, பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண் உளவியல் ரிதியான சந்திக்கும் சிக்கலை மையமாக கொண்ட கதை. 



நைடின், சிறுவயதில் இருந்தே யாருடனும் இனக்கமாக இருக்காதவள். சகோதரன், அம்மா கூட அந்நியமாக பார்ப்பவள். எந்த விஷயத்திலும் உற்சாகமோ, ஆர்வமோ இல்லாதவள். மற்றவர்களை போல் கலகலப்பாக இருக்க நினைத்தும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரே ஆதரவு அப்பாவும், அவளது தோழி கிரிஸ்டா மட்டும் தான். 

அவளின் பதிமூன்று வயதில் அப்பாவும் இறந்துவிட, தோழி கிரிஸ்டா தவிர்த்து அவளுக்கு நெருக்கமாக யாருமில்லை. அவளின் பதின்ம வயது வந்தப் போது கூட அவளது அம்மாவும், சகோதரனும் அவளிடம் அக்கரையோடு நடந்துக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் சுயநலமாக வாழ்கிறார்கள். இதனாலையே நைடினுக்கு தனது சகோதரனை பிடிக்காமல் போகிறது. 

ஒரு கட்டத்தில் அவளது தோழி கிரிஸ்டாவும், சகோதரனும் காதலர்களாக மாற, கிரிஸ்டாவுடன் இருந்த நட்பையும் முறித்துக்கொள்கிறாள். தன் மீது யாரும் அன்பு செலுத்தவில்லை என்ற விரக்தியில் விபரீதமான முடிவு எடுக்கிறாள். அதில் இருந்து எப்படி மீண்டு வந்து, எப்படி மற்றவர்கள் போல் இயல்பானவளாக நடந்துக்கொள்கிறாள் என்பது தான் கதை. 

 பொதுவாக ஆங்கிலப்படத்தில் இதுப் போன்ற சப்ஜெட்டில் படம் வருகிறது என்றால் செக்ஸுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உளவியல் ரிதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் பதின்ம வயதுப் பெண் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் என்பது படமாக எடுத்திருப்பதை பாராட்டியாக வேண்டும். 

குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இரட்டை மடங்காக வியாபாரமானப்படம். அமெரிக்காவில் விருதுகள், நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டோரண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

 கொஞ்சம் பட்டைத்தீட்டி, டிங்கரிங் செய்து தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றினால் தமிழ் படத்திற்கு நல்ல கதையாக அமையும்.

Tuesday, April 4, 2017

The Classified Files ( 2015 – Korean Crime Thriller)

பொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் ? குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக பணத்தை பெற்றோர்களிடம் பெற்று, குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கிறோமோ தங்களுக்கு பாதுகாப்பு என்று கடத்தல்காரர்கள் நினைப்பார்கள். அதே சமயம் பணத்தை கொடுக்க முடியாத பெற்றோர்கள் போலீஸிடம் சென்று, பணம் கொடுக்கும் போது பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கும். 

இந்த அடிப்படை உண்மையை தெரிந்த கடத்தல்காரர்கள் வழக்கமான யுக்தியை மாற்றுகிறார்கள். குழந்தையை கடத்தி, பதினைந்து நாள் வரை குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். போலீஸ் குழந்தை இறந்திருக்கும் என்று தங்களின் அடுத்த வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோரிடம் மிரட்டி பணம் கேட்கலாம் என்று புதிய யுக்தியை கையாள்கிறார்கள். 

கோரியாவில் நடந்த உண்மை கடத்தல் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ” The Classified Files”. 


கோரியாவில் இருக்கும் புசான் நகரத்தில் பள்ளி சிறுவ/சிறுமிகளை கடத்தும் நிஜ கடத்தல்காரர்களிடம் இருந்து 33 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியை மீட்ட உண்மை சம்பவத்தை கொண்டப் படம். 

பள்ளியில் இருந்து ஈன் – ஜூ என்ற சிறுமி கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட சிறுமியைக் குறித்து எந்த விதமான தகவல் இல்லை. போலீஸுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சிறுமியை கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. சிறுமியின் அம்மா தனது மகள் நிஜமாகவே இறந்துவிட்டாளா என்பதை தெரிந்துகொள்ள ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சனிடம் செல்கிறாள். அவளது மகள் உயிரோடு இருப்பதாக ஆரூடன் சொல்கிறான். கடத்தப்பட்ட வழக்கு ஜோங்-கில் என்ற காவலாளியிடம் வருகிறது. 

எந்த துப்பும் இல்லாத சமயத்தில் கடத்தியவர்கள் 15 நாள் கலித்து பெற்றோர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்கிறார்கள். பெற்றோர்களில் போன் கால்களை இடைமறைத்து கேட்கும் ஜோங்-கில், அவனுக்கு உதவியாக ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சன் இருக்கிறான். 

 சக காவலர்கள் அந்த சிறுமி இறந்திருப்பாள் என்று முடிவில் இருக்க, ஆரூடன் கிம் ஜோங்-சன் வார்த்தை மீது இருந்த நம்பிக்கையில் சிறுமியின் தேடலில் ஜோங்-கில் தீவிரமாக இயங்குகிறார். அவர்கள் இருவரும் சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. 

பகுத்தறிவுக்கு ஒப்பாத ஆரூடமும், காவலர்களுக்கு உதவும் பாத்திரமாக வருவது தான் ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டப் படம் என்று சொல்லும் போது ஆரூடம் க்ரைம் இன்வஸ்டிகேஷனுக்கு உதவுமா போன்ற கேள்வி தோன்றுகிறது. 

படம் முடியும் போது நிஜமான ஜோங்-கில் , கிம் ஜோங்-சன் படங்களை காட்டி இறுதி வரையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாக காட்டப்படுகிறது. 

Must Watch Movie என்று சொல்ல மாட்டேன். ஆனால், காவலர்களுக்குள் இருக்கும் உள் அரசியல் விசாரணையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதில் இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜோங்-கில் சிறுமி மீட்பதற்காக போராடும் போது சக காவலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், வெற்றி கிடைக்கும் போது அவனது பெயரை பின்னுக்கு தள்ளி பதக்கங்களை வாங்கிகொள்கிறார்கள். 

எல்லா ஊரிலும், அலட்சியம், ஈகோ, அடுத்தவன் உழைப்பில் குளிர்காய்யும் காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails