
கருவில் சுமக்காத குழந்தையை
கையில் சுமந்து
யாசகம் கேட்ட பிச்சைக்காரி !
குமரியாக இருந்தாலும்
அன்னை வேடத்தில்
அனுதாபத்தை காசாக்க
காரின் ஜன்னல் வெளியே
கைய்யேந்தினாள் !
பெண் என்றதும்
காற்றடித்த காகிதம் போல்
சீமானின் சட்டை பையில்
தெரிந்தே விழுந்தது
ஐந்நூறு ரூபாய் காகிதம் !
இரவில்
அதுவே அவள் அடையானது !
காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவுவை கடப்பதற்கு... !
Monday, December 14, 2009
பிச்சைக்காரி !?
Sunday, December 13, 2009
அப்தூல் கலாமும், சுஜாதாவும்
'கலாம்' என்ற மந்திர சொல் எத்தனை காலம் கடந்தாலும் இளைஞர்களால் உச்சரிக்கப்படும். அதிபர் பதவி அவருக்கு அலங்காரமாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் அதிபர் பதிவிக்கு பெருமை சேர்த்தார் என்று சொல்லலாம். அப்படிப் பட்ட 'அப்தூல் காலம்' பற்றி இரண்டு சுவையான நிகழ்ச்சி. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன்.
*
1.
ஒரு சமயம் சில ரஷ்ய விஞ்ஞானிகள் ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அதில், கலாமும், சுஜாதாவும் கலந்து கொண்டனர். முக்கிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு அதை அருந்துமாறு வற்புற்த்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்லல் எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். விளக்கிச் சொன்னாலும் ரஷ்யருக்கு ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
கலாம் தர்ம சங்கட நிலையில் சுஜாதாவிடம் வந்து, " இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு. நீ நேரா போய், இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்திரு. என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்து மாத்திரு" என்றார். சுஜாதா அவர்களும் அவ்வாறே செய்து விட, கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி 'சியர்ஸ்' என்றார்.
***
2.
கலாமும், சுஜாதாவும் திருச்சியில் இருந்த காலத்திலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இந்திய ராக்கெட்ட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து, ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டனர். சுஜாதா அவர்கள் கலாமை எப்போதும் விமானத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பார்த்தாலும், " கலாம் என்னாச்சு புத்தகம்" என்பார்.
"இதோ ! அடுத்த மாசம் லீவு எடுத்திட்டுப் பத்து நாள் வரேன்யா ! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் ! " என்பார்.
அந்தப் புத்தகம் கலாமின் கனவை போல மாற்றிவிட்டது 'சுஜாதாவின் மரணம்.
Saturday, December 12, 2009
உலக சினிமா : Life is beautiful
1998 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம்.
வன்மம், குரோதம், கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை.
வாழ்க்கை அழகாக ரசித்து வாழும் யூத இளைஞன் குய்டூ. அவனால் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சிரிக்க வைக்க முடியும். அப்படிப்பட்டவன் ஒரு நாள் சைக்கிலில் செல்லும் போது இத்தாலி பெண்ணான டோராவை பார்த்ததும் காதல் கொள்கிறான். டோரா வேறு ஒருவனுடன் நிச்சயமாகியிருந்தாலும், குய்டூ வேடிக்கை செயல்களால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் அவனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறாள். அவர்களுக்கு 'ஜோஷூவா' என்ற மகன் பிறக்கிறான்.
சந்தோஷமாக ரசித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் ஹிட்லரின் நாஜி படைகள் நுழைகிறது.பல யூதர்கள் நாஜி படையினர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அதில், குய்டூ, அவன் மகனும் அவர்களால் இழுத்து செல்லப்படுகிறார்கள். நாஜி படையினர் டோராவை அழைத்து செல்ல மறுக்கின்றனர். ஆனால், அவள் தன் கணவன், மகனை விட்டு பிரிய முடியாமல் யூத கைதியாக அவளும் செல்கிறாள்.
ஆண்கள் பிரிவு சிறையில் குய்டுவும், அவன் மகன் ஜோஷ்வாவும், பெண்கள் பிரிவு சிறையில் டோராவும் அடைத்து வைக்கப்படுகின்றனர். நாஜி படை கொடுமையின் நடுவில் தன் பயப்படாமல் இருக்க, " நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, நாம் அனைவரும் டாங்க் வண்டிக்காக போட்டி பொடுகிறோம்" என்று சொல்லி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான். ரஷ்யப் படை முன்னேறிவரும் சமயத்தில், குய்டூ தன் மகனோடு தப்பி செல்ல முயற்சி செய்கிறான். மகனை ஒரு பெட்டியில் இருக்க சொல்லி விட்டு, அவன் நாஜி படையினரிடம் மாட்டி கொள்கிறான். மகனிடம், "பெட்டியில் இருந்து வெளியே வந்தால், விளையாட்டில் தோல்வியடைந்து விடுவோம்" என்று சொன்னதால், அந்த சிறுவன் தந்தை இழுத்து செல்வதை அரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
குய்டூவை சுட்டு கொள்ள, ரஷ்ய படை வரவால் டோரா தன் மகனோடு சேருகிறாள்.
குய்டூவாக நடித்தவர் ராபர்டோ பெனிங்னி. அவரே கதை, இயக்கம் செய்திருக்கிறார். கொடூரம் நிறைந்த இடத்தில் ஒருவனால் சிரிக்க வைக்க முடியும் என்பதை காட்டி நம் மனதை ஆள்கிறான். இந்த வித்தியாசமான சிந்தனைக்கே அவரை எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
முதல் பாதியில் அழகான தேவதையாகவும், இரண்டாவது கைதியுடையிலும் 'Nicoletta Braschi'. கணவன், மகன் பிரிந்த சோகத்தை கண்களே காட்டி நடித்திருக்கிறார்.
ஜோஷ்வா வரும் சிறுவன் அழகாகவும் இருக்கிறான். தந்தை சொல்லும் எல்லாம் பொய்யையும் அப்படியே நம்பும் போது நம் கண்கள் நம்மை அறியாமல் கலங்குகிறது.
அழகான முதல் பாதியை 'யூத்' படத்தில் இவ்வளவு கேவலமாக எடுதிருக்கிறார்களா என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா எந்த நல்ல படத்தை விட்டு வைத்திருகிறது.
இத்தாலி மொழியில் வெளிவந்து பல உலக மொழிகளிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட படம்.
ஹிட்லர் நாஜி படையெடுப்பை வைத்து எத்தனையோ படங்கள் வந்து விட்டது. ஆனால், இந்திய சுதந்திர காலத்தை மையமாக வைத்து ஏன் ஒரு நல்ல படம் தமிழ் சினிமா எடுத்தால் தான் என்ன...??
Friday, December 11, 2009
80/20 - ஒரு புதிய ஆட்டம்
9 மணிக்கு ராமேஷ் அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, 8மணிக்கு சென்றால் தான் முடியும். உடல் அசதியில் 7 மணி வரை தூங்கிவிடுகிறான். அவசர அவசரமாக குளித்து பாத்ரூம் விட்டு வெளியே வரும் போது காலில் அடிப்பட்டு விடுகிறது. எப்போதும் பொறுமையாக இருப்பவன், அன்று மனைவி சமையல் சரியில்லை என்று கரித்து கொட்டினான். வண்டியை வேகமாக ஓட்டும் போது ஒருவர் மீது மோதி சாலையில் சிறு பிரச்சனை யாகிறது. கடைசியில் ஒரு வழியாக அலுவகத்திற்கு 9.30 மணிக்கு வந்து சேருகிறான். அரை மணி நேரம் காலதாமதமாக வந்ததிற்கு, மேலாளரிடம் ‘அர்ச்சனை’ வாங்குகிறான். அன்று முழு அவன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
ரமேஷ்யின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் ? காலையில் சரியான நேரத்தில் எழுந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஒரு இடத்தில் தவறு நடந்ததால், பல இடங்களில் அதனின் பாதிப்பு தெரிகிறது. இதே சூழ்நிலையை எதிர்மறையாக சிந்திக்காமல், நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்.
ரமேஷ் சரியான நேரத்தில் எழுந்து சீக்கிரம் அலுவலகத்துக்கு தயாராகுகிறான். மனைவியின் சமையலில் குறை இருந்தாலும் சிரித்தப்படி சொல்லுகிறான். நேரம் அதிகமாக இருப்பதால் பொறுமையாக வண்டி ஓட்டி மேலாளருக்கு முன் செல்கிறான். மேலாளர் எதுவும் சொல்லலாததால் அன்றைய தினம் தன் வேலையில் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டான்.
சிறு புள்ளி தான். அதில் இருந்து சரியாக போனால் நேரான கோடு வரும். இல்லை என்றால் அது கிறுக்கல் தான். இதை தான், " முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். 80/20 தத்துவம் என்னவென்றால், முதல் புள்ளி சரியாக இருந்தால் போதும். கோடு என்ன… ஒரு பெரிய வீடே கட்டி விடலாம்.
"குறைந்த ஆட்களை வைத்து, அதிகமாக உற்பத்தி செய்தல்.
சிறிய நட்பு வட்டத்தில் இருந்து, பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குதல்.
குறைவாக முதலீடு செய்து பெரிதாக லாபம் பார்ப்பது"
- 80/20 அடிப்படை தத்துவம் இது தான்.
80/20 என்பது வியாபார தத்துவம் அல்ல.... நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சந்திப்பது. சந்தித்துக் கொண்டு இருப்பது. சந்திக்க போவது....
20/20. 50/50 என்று எத்தனையோ ஆட்டம் பார்த்துவிட்டோம். இதுவும் ஒரு ஆட்டம் தான். ஆடி பார்த்துவிடுவோம்.
சினிமா, வியாபாரம், கல்வி, எழுத்து என்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தத்துவத்தை தெரிந்துக் கொண்டால்.... சிகரத்தை தொட்டுவிடலாம்.
இதற்கு உதாரணம் அடுத்த பதிவில்........
Monday, December 7, 2009
பேனா திருடன்
மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிர்களும் திருடர்கள் தான். ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது திருட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். சிலர் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பார்கள். ஒரு சிலர் பயத்தில் முயற்சிக்காமல் விட்டு இருப்பார்கள். அப்படி ஒரு 'ஆசை'. தப்பு.... 'ஆசை' என்று சொல்ல கூடாது. 'வேகம்' என்று தான் சொல்ல வேண்டும். 'பேனா' திட வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது. 
சனிக்கிழமை (5.12.09) அன்று அவரமாக திருச்சி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதனால், தக்கலில் டிக்கெட் வாங்கி அரை மணி நேரம் முன்பாகவே ஏழும்பூர் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டேன். பயண சமயத்தில் என்னிடம் எப்போது மூன்று புத்தகங்களாவது இருக்கும். ராமேஸ்வர எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் என் சீட்டை தேடி கண்டு பிடித்து அமர்ந்தேன். பையில் இருக்கும் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய 'சில நேரங்களில் சில அனுபவங்கள்' புத்தகத்தை படிக்க எடுத்தேன்.
புத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு குறித்துக் கொள்வேன். முடிந்தவரை கோடு, கட்டம், வீடு எல்லாம் கட்டி அடுத்தவர் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் செய்துவிடுவேன். அப்படி அந்த புத்தகத்தை படிக்கும் போது கோடு போட சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்தேன். எழுதவில்லை.
தட்டி பார்த்தேன். கிறுக்கினேன். ஹூம். ஒன்றும் பலனில்லை. கடைசியில், பலூனை உதுவது போல் பேனாவை திறந்து ரிப்பில்லை எடுத்தேன். அப்போது தான் கவநித்தேன். பேனா இங்க் ரிப்பில் பின் வழியாக வழிந்து இருக்கிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அதை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்.
வெளியே வந்து புது பேனா வாங்கலாம் என்று பெட்டியுடன் இறங்கினேன் ( அந்த கம்பார்ட் மெட்டில் நான் தான் முதலில் ஏறியிருந்தேன். பெட்டியை தனியாக விட்டு வர பயமாக இருந்தது.) பிளாட் பாரம் கடை முழுக்க முழுக்க டீ, காபி, கூல் டிரிக்ஸ், பேப்பர் என்று இருந்தது. ஆனால், எந்த கடையிலும் பேனா இல்லை. ட்ரெயின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இருக்கும் கடைகளை அலசிவிட்டேன். பேனாயில்லை. அந்த நேரம் பார்த்து பலர் சட்டை பையில் பேனாவுடன் அலைந்து எனக்கு எரிச்சல் மூட்டினர். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்து. கோபம் கூட வந்தது.
ஐந்து மணி நேர பயணத்தில் புத்தகத்தை எப்படி கோடு போடாமல் படிப்பது ? கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் ? எந்த ஒரு கடையிலும் பேனா விற்பனைக்கு இல்லை. இப்போது ரயில் புரப்பட இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. வெளியே சென்று வாங்கி வருவதும் சாத்தியமில்லை.
வேறு வழி இல்லை. பேனாவை திருட வேண்டியது தான். யாரிடமாவது பேனாவை வாங்கி அப்படியே ஒடிவிடலாம் என்று முடிவு செய்தேன். என் கெட்ட நேரம் அவர்களின் நல்ல நேரம். என் கண் முன்னே இந்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேனாவை ஆட்டைய போட்டால், 'தமிழன்' பேனா எடுத்து ஓடிவிட்டான் என்பார்கள். அதனால் வேண்டாம். தமிழ் பேச தெரிந்தவர்களிடம் சுடலாம் என்று இருந்தால் அவர்கள் சட்டை பையில் பேனா இல்லை. யாராவது ஏமாளி கிடைக்க மாட்டானா திரும்பி வந்தேன்.
'S2' கம்பார்ட்மென்ட். நான் பயணம் செய்ய வேண்டிய கம்பார்ட்மென்ட். ஏமாற்றத்தோடு என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் படிக்க தொடங்கினேன். அப்போது ஒரு முதிய தம்பதியர்களை ஏற்றிவிட சபரிமலை மாலை போட்ட ஒருவர் வந்தார். பாக்கெட்டில் 'செல்லோ' பேனா. அவரிடம் திருட மணமில்லை. ஆனால், எனக்கு பேனா வேண்டும். ஐந்து மணி நேரம் கிறுக்காமல் புத்தகம் எப்படி படிப்பது.
கடைசியில் துணிந்து விட்டேன். செய்து விட வேண்டியது தான். தப்பாக இருந்தாலும் வெட்கத்தை விட்டு செய்து விட்டேன். ஆம்.... !
"ஸார் ! உங்க பேனா கொடுக்க முடியாமா !" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா ??) அவரிடம் சொன்னேன். "நீங்களே பேனாவ வச்சிக்கோங்க" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ ??)
அப்பாடா ஒரு வழியாக பேனா கிடைத்துவிட்டது ! இது எப்படி பேனா திருட்டாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் எழுதவில்லை என்று தூக்கி போட்டேனே அது திருட்டு பேனா தான்.
