Friday, February 10, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 3

அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2


பௌர்ணமி முழு நிலவு வானதில் பிரகாசமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

இரவு எஸ்.எஸ்.எல்.சி பாடம் படித்து முடித்து விட்டு நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். உணவகத்தில் வேலை முடித்து விட்டு அம்மா நடந்தே வீட்டுக்கு வந்து விட்டார். தனக்கு உணவகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதால் முடித்து பிறகு தன் நண்பன் மாணிக்கத்தை பார்த்து விட்டு வருவதாக மாமா சொன்னார். நடு ஜாமத்தை நெருங்கியும் மாமா வீட்டுக்கு வரவில்லை.

அம்மா பயந்து போய் என்னை எழுப்பினார்.

"டேய் சந்திரு...! மாமா இவ்வளவு நேரம்மாகியும் வீட்டுக்கு வரல. போய் என்னனு பாருடா...." என்று பயம் கலந்த குரலில் சொன்னார்.

அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வேறு மாதிரி இடத்துக்கு சென்று இருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அதே சமயம் இவ்வளவு நேரம் வீட்டு வராமல் இருந்ததுமில்லை. ஒரு வேலை நான் வளர்ந்து விட்டேன் என்ற தைரியத்தில் வீட்டுக்கு காலதாமதமாக வருகிறாரோ என்று நினைக்க தோன்றியது.

"என்னடா....யோசிக்கிற...! போய் பாருடா..." என்று அதட்டி அம்மா கூறினாள்.

தூக்கக்கலக்கத்தில் சட்டையை மாட்டிக் கொண்டு இருந்தேன். சைக்கிளை நான் எடுத்து வந்து விட்டதால் நடந்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ என்று யோசித்தேன். நடந்தே வந்திருந்தாலும் நடு ஜாமத்துக்கு முன் வந்திருக்கலாம். எனக்கு எதோ நடந்திருக்கும் என்று தோன்றியது.

திடீர் என்று கதவு "பட...பட...." தட்டும் சத்தம் கேட்டது. மாமா இவ்வளவு வேகமாக கதவு தட்டமாட்டார். அம்மாவுக்கு மேலும் பயம் அதிகமானது. பேய்யைப் பார்த்தது போல் அரண்டு போய் இருந்தார்.

" டேய் சந்திரு... கதவ திறக்காத... திருடனா இருக்க போறான்..." என்ற நடுங்கிய குரலில் அம்மா கூறினாள்.

" எம்மா நீ ஒண்ணு...! திருடன் கதவ தட்டி திருட வருவானா... சும்மா இரு...!!" என்று பேசியப்படி கதவை திறந்தேன். மாமாவின் நண்பர் மாணிக்கம் நின்றுக் கொண்டு இருந்தார். முகம் முழுக்க வேர்வை வழிய நின்று இருந்தார். மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். மாமாவுக்கு உணவகம் வைப்பதற்கு அவர் தான் உதவி செய்தார்.

அவரை நான் மாணிக்கம் மாமா என்று அழைத்தாலும் 'புதிர் மாமா' என்று தான் என் மனதில் அழைப்பேன். எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். அவர் பேசினால் அதில் இருந்து கேள்வி கேட்காமல் இருக்காமல் இருக்க முடியாது. அவர் வந்து சென்றால், பல புதிர் கேள்விகள் நம் மனதில் தோன்றும். எதற்காக இந்த நேரத்தில் வந்தார் என்று புரியாமல் அம்மாவை அழைத்தேன்.

" அம்மா..! மாணிக்கம் மாமா வந்திருக்காரு. உள்ள வாங்க.....! அவரு எங்க...? உங்கள பார்க்க தானே வந்தாரு...."

எதுவும் பேசாமல் மூச்சு வாங்கி கொண்டு இருந்தார். அம்மா மெதுவாக நடந்து என் பக்கத்தில் வந்து நின்றார்.

" என்ன அண்ணே....! என்ன ஆச்சு....?" என்றார் அம்மா.

" உங்க அண்ணன... போலீஸ் புடிச்சிட்டு போச்சு....!" என்றார்.

எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. மாமா எந்த வம்பு தும்புக்கு போகாதவர். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாராவது அதட்டி பேசினாலும், மிகவும் அமைதியாக பேச கூடியவர். சண்டை நடக்கும் இடத்தை பார்த்தால் ஒதுங்கி செல்பவர். அவரை எதற்காக கைது செய்ய வேண்டும். நான் நினைத்தது போல் அந்த மாதிரி இடத்துக்கு போய் இருப்பாறோ என்று தோன்றியது. நான் நினைத்து முடிப்பதற்குள் மாணிக்கம் மாமாவே பதில் கூறினார்.

" மொழி போராட்டத்துல ஈடுப்பட்டதா சொல்லி புடிச்சிருக்காங்க...." என்றார்.

எங்களால் நம்பவே முடியவில்லை. நாளிதழில் அரசியல் படிப்பாரே தவிர அரசியலில் ஈடுப்படுபவரில்லை. அரசியலை பற்றி பேசுவாரே தவிர, போராட்டங்களில் கலந்துக் கொள்பவரில்லை. அரசியலில் ஈடுப்படும் நண்பர்களும் இல்லை.

அம்மாவும், நானும் அவசர அவசர நடு ஜாமத்தில் காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்பா இறந்த போது அவர் உடலை ஒப்படைக்கும் போது ஒரு காவல் அதிகாரி அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் காவல் அதிகாரியை அம்மா சந்திக்கிறார். மாணிக்கம் மாமாவும் எங்களும் துணைக்கு வந்திருந்தார்.

காவல் நிலையத்தில் மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்திருந்தார்கள். அம்மா அருவருப்பாக கண்ணை முடியப்படி நடந்தார்.

மாணிக்கம் மாமா அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம்...."ஸார்...." என்றார்.

முறைத்தவாரு மாணிக்கத்தை பார்த்தார். மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அடித்த வெறியில் இருந்தார். எங்களுடன் அம்மா வந்திருப்பதை கவனித்த அந்த அதிகாரி " கொஞ்சம் இருங்க... " என்றார்.

தன் சகாக்களிடம் கைது செய்யப்பட்டவர்களை செல்லில் அடைக்க சொன்னார். அவரிடம் அடிப்படு, செல்லுக்கு அழைத்து சென்றவர்களில் ராமா மாமா இல்லை. நான் அவர்கள் அழைத்து சென்ற போராளிகளையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அந்த அதிகாரி பார்ப்பதற்கு கறுப்பாக இருந்தார். மொழி போராட்டக்காரர்களை அடித்த வெறியில் இருந்து மீளவில்லை என்று அவர் கண்ணில் தெரிந்தது. மூக்கால் காக்கி பேன்ட் போட்டு கொண்டு கோபமான விழிகளுடன் எங்களிடம் பேச வந்தார்.

" என்ன விஷயம் சொல்லுங்க...." என்று கட்டை குரலில் அதிகாரி பேசினார்.

" எங்க அண்ணன... மொழி போராட்டத்துல கைது செஞ்சதா சொன்னாங்க. அவர கூப்பிட்டு போலாம்னு..." என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் அந்த அதிகாரி " இது என்ன உங்க சொந்தக்கார வீடு நினைச்சியா.." என்று அதட்டியப்படி பேசினார்.

" எங்க அண்ணன அந்த மாதிரி போராட்டத்துக்கு போர ஆளு இல்லைங்க.... நீங்க வேணும் அவர கூப்பிட்டு விசாரிங்க..." என்றார்.

ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும் சொல்வதை நினைத்து அவருக்கு கோபம் அதிகரித்தது. ஆனால், அம்மாவின் விதவை கோலம், அரும்பு மீசை நின்ற என்னையும் ஒரு முறை உற்று பார்த்தார். எங்கள் வீட்டு பெரியவர் என் மாமாவாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமலே புரிந்துக் கொண்டார்.

" பேரு என்ன....?" என்று கேட்டார்.

"ரகுராமன்.....!" என்றாள்.

ஒரு காவல் அதிகாரியிடம் சொல்லி எங்க மாமாவை அழைத்து வர சொன்னார். தலையில் இரத்த காயமும், காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து வந்தார்.

" யோவ்..! வீட்டுல நீ ஒருத்தன் தான் ஆம்பலையா... எதுக்கு இந்த மாதிரி போராட்டத்துல கலந்துக்கர....?" என்று அந்த அதிகாரி கேட்டார்.

" நான் போராட்டத்துல கலந்துக்கலைங்க. அவங்க பத்து பேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தாங்க. அத கொடுக்க போகும் போது நானும் போராட்ட ஆளு நினைச்சு கைது பண்ணிட்டாங்க...."

" என்னது போராட்டத்துல கலந்துக்கலையா..." என்று வியந்தார்.

தன் அதிகாரிகளை அழைத்து பேசினார். மாமாவை கைது செய்யும் போது அவர் கையில் சாப்பாடு இருந்தை கூறினர். அவ்வளவு பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பொது மக்கள், போராட்டக்காரர்கள் என்று தனியாக எப்படி பார்ப்பது. எங்கோ தவறு நடந்துவிட்டது.

"எங்க கடை வச்சிருக்க " என்று கம்பீர குரலில் அந்த போலீஸ் அதிகாரி கேட்டார். தவறு செய்து விட்டோம் என்ற எந்த குற்றவுணர்வும் அந்த குரலில் தெரியவில்லை.

" நா பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தான் கட வச்சிருக்கேன் " என்று பேசமுடியாமல் மாமா பேசினார்.

" சரி...! எங்கோ தப்பு நடந்திருக்கு. இதுல கையெழுத்து போட்டுட்டு போ " என்றார். இது போல் நடக்கும் போராட்ட இடங்களில் பார்த்தால் மீண்டும் கைது செய்வதாக மாமாவை அவர் எச்சரித்தார்.

அவர்கள் அடித்த அடியால் மாமாவால் நடக்கமுடியவில்லை. இந்த காயங்கள் சரியாகி மாமா இயல்பாக மாறுவதற்கு மூன்று மாதங்கள் மேல் ஆகும். மாமாவை மாணிக்கம் மாமா சைக்கிலில் வைத்து மிதித்து வந்தார். நான் அம்மாவை அழைத்து சைக்கிலில் வந்தேன்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மா மாமாவுக்கு வெண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுத்தார். மாமா வலியில் கத்தினார். அவரால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாணிக்கம் மாமா காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மூன்று மாதம் கடைக்கு விடுமுறை விட்டால் வாடிக்கையாளர்கள் எல்லாம் வேறு இடம் பார்க்க சென்று விடுவார்கள் என்ற பயம் மாமாவுக்கு இருந்தது. அம்மாவால் தனியாக அந்த உணவகத்தை கவனிக்க முடியாது. நான் தான் அம்மாவுக்கு துணையாக இருக்க வேண்டும். பள்ளி, உணவகம் என்று இரண்டும் மாற்றி மாற்றி கவனிக்க வேண்டும் வேறு யாருமில்லை.

" கவலப்படாத மாமா... நான் அம்மாவுக்கு துணையா எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..." என்றேன்.

" டேய் மருமகனே..! எப்படி என் மனசுல நினைச்சத அப்படியே சொல்லுற...." வாயை மெதுவாக திறந்தப்படி பேசினார்.

" உங்கள பத்தி எனக்கு தெரியாதா. கொஞ்சம் நாள் தானே. நானும், அம்மாவும் பார்த்துக்குறோம். நீங்க நல்ல ஓய்வு எடுத்துக்கொங்க. " என்று சொல்லி மீண்டும் எதோ பேச வாயெடுத்தேன்.

மாமா என்னை பார்த்தப்படி படுத்திருந்தார்.

"ஒரு விஷயம். போலீஸ் உங்கள் புடிச்சதும் சொன்னவுடனே உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்திச்சு....." என்றேன்.

"என்ன...??". புரியாமல் என்னை பார்த்தார்.

" நீங்க அந்த மாதிரி இடத்து போய் தான் உங்கள போலீஸ் புடிச்சிடுச்சோ நினைச்சேன். நல்ல வேலை அப்படி எதுவுமில்ல..."

"அடி... சின்ன பையன் மாதிரியா பேசுற...." என்று அந்த வலியிலும் சிரித்தப்படி என்னை செல்லமாக அடிக்க வந்தார்.

" எனக்கும் பதினஞ்சு வயசு ஆகுது. சின்ன பையன் இல்ல மாமா..." என்று சொல்லிவிட்டு தூங்க சென்றேன்.

காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. சிறுவயதில் என்னை வைத்து சைக்கிலில் சென்றவர், இன்று இன்று அவருடன் சரிக்கு சமமாக பேசுகிறேன். நான் சின்ன பையன் இல்லை. எனக்கும் நல்லது, கெட்டது தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று மாமா புரிந்துக் கொண்டார். என் மேல் இருந்த நம்பிக்கையில் நிம்மதியாக கண் மூடி தூங்கினார்.

இவ்வளவு பாசமான இருக்கும் மனிதரிடம் நான் சண்டை போடும் சந்தர்ப்பம் வர போகிறது என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

Thursday, February 9, 2012

சுட்டும் விழி : கவிஞர் இரா.ரவி

கவிதை விரும்பாத வாசகன் கூட தன்னையும் அறியாமல் வாசிக்கும் கவிதை ஹைக்கூ கவிதையாக தான் இருக்கும். ஐந்து நோடிக்கு மேல் எடுத்துக் கொள்ளாத வாசிப்பு. ஒரு பக்க கட்டுரை ஏற்ப்படுத்தும் பாதிப்பு, நருக்கென்று கருத்து என்ற போன்ற பெருமை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. இன்று, ட்விட்டரில் பலர் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிள் இரண்டடியில் சொல்லியிருக்கிறார். ஜப்பானில் மூன்றடியில் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.



ஜப்பானில் தோன்றிய 'ஹைக்கூ' தமிழ் கவிதை சூழலில் பலர் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் என்று பட்டியலிட்டால் அதில் கவிஞர் இரா.ரவி அவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் ஹைக்கூ கவிதையாக இருக்கும். அல்லது ஹைக்கூ பற்றிய கட்டுரை, விமர்சன நூலாக இருக்கும். ஹைக்கூ கவிதையில் தன் முழு கவனத்தை செலுத்தி வருபவர். அவர் எழுதிய 11வது நூல் தான் “சுட்டும் விழி”.

போதுவாக, நான் நூல் விமர்சனம் செலுத்தினால் அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன். ஆனால், இந்த நூலில் எனக்கு பிடித்த கவிதையை குறிப்பிட சொன்னால் 64 பக்கங்கள் கொண்ட கவிதையில் 40 பக்கங்களுக்கான கவிதையை குறிப்பிட வேண்டியதாக இருக்கும். அந்த அளவுக்கு பல கவிதைகளில் நருக்கென்ற கருத்தோடு முடித்திருக்கிறார்.


உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மார்க்
*
பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளை போனது
பச்சை வயல்
*
வேகமாக விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
*
இயற்கையை அழித்து
செயற்கை மரங்கள்
நகரங்கள்


மேல் குறிப்பிட்ட கவிதைகளில், மூன்றாவது வரியில் இதயத்தை துழைக்கும் அம்பை ஒழித்து வைத்திருக்கிறதா அல்லது நம்மை குத்தும் குற்றவுணர்வா என்ற யோசிக்க வைக்கும் வரிகள்.

சமக்கால அரசியலை கேலி செய்யும் நாவலோ, சிறுகதையோ வருவது மிகவும் குறைவு. ஆனால், சமக்கால அரசியலை பகடி செய்யும் கவிதைகள் ஏராளமாக வந்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழ் காணும் கவிதைகளை படித்து பாருங்கள்.

எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையால் இன்று
கூட்டனி !
*
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
*
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி
*
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்.
**

இந்த புத்தகத்திற்கு “சுட்டும் விழி” என்ற தலைப்பு மிக பொருத்தாமாத அமைந்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதையும் நாம் படித்த முடித்த பின் நம்மை சுடாமல் இருப்பதில்லை.

மருத்துவ குறிப்பு சொல்லும் கவிதை,
மூளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம்


ஈழ தமிழர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் கவிதை,
அணையப்போகும் விளக்கு
சுடர்விட்டெரியும்
இலங்கைக் கொடூரன்.


வரலாற்றை பதிய வைக்கும் கவிதை,
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.


ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு கவிதை நம்மை தாக்க தயாராக உள்ளது.

ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தேவையில்லை என்ற மரபில் இந்த புத்தகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கவிதைகள் சமூகத்தைப் பற்றியதாக இருந்தால், அடுத்த கவிதை 'ஈழம்' பற்றியதாக உள்ளது. இல்லை என்றால் 'காதல்' பற்றியதாக உள்ளது. சமூகம், அரசியல், காதல் என்று வகைப்படுத்தி கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கலாம்.


கவிதை வாசிப்பு ஆர்வம் இல்லாத வாசகர்கள் வாசிக்க வைக்கும் கவிதை நூலாக இருக்கிறது "சுட்டும் விழி".

பக்.64, விலை. ரூ.40
ஜெயசித்ரா
21, வன்னியக் கோனார் சந்து,
வடக்கு மாசி வீதி, மதுரை – 625 001
செல் : 98421 93103

Wednesday, February 8, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 2

அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1

அப்பாவை தூக்கியப்படி நான்கு பேர் நடக்க.... நான் மாமாவுடன் முன்னே சென்றுக் கொண்டு இருந்தேன். அப்பாவின் உடல் கட்டை, வரட்டி, கற்புறம் என்று ஒவ்வொன்றாக போட்டு மறைத்தனர். என் கையில் எரியும் கட்டையை கொடுத்து அப்பா உடல் மீது எறிக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன். இனி சைக்கிள் முன் உட்கார வைத்து என்னை யார் ஓட்டி செல்ல போகிறார்....?? இரவில் எனக்கு யார் கதை சொல்ல போகிறார் என்ற கவலையுடன் சுடுக்காட்டில் இருந்து வீட்டுக்கு வந்தேன்.

அப்பா இறந்துமூன்று மாதங்கள் ஆகிவிட்டது...

நான் பிடிவாதம் பிடிப்பதை விட்டு விட்டேன். பிடிவாதம் பிடித்தாலும் எனக்கு வாங்கி தர அப்பா தான் இல்லையே !

" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." என்று ஆறுதல் கூறியவர் அம்மாவின் அண்ணன் ரகுராமன். எல்லோரும் அவரை 'ராமா' என்று அழைப்பார்கள். நான் அவரை 'ராம மாமா' என்று அழைப்பேன்.

அம்மாவுக்கு அப்பா பிரிவை மறந்து என்னை பற்றின கவலை தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அன்பும், பாசம் எத்தனை உண்ணதமானது என்று என் மாமா ராமாவை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன்.

அம்மாவுக்கு ஏழு வயது இருக்கும் போது என் பாட்டி இறந்துவிட்டார். அன்று முதல் அம்மா தான் அவர் அப்பாவுக்கும், மாமாவுக்கும் சமைத்து போடுவார். அம்மாவிடம் இருந்து மாமா சமையல் கற்றுக் கொண்டார். அம்மாவிடம் கற்றுக் கொண்ட சமையல் தான் மாமாவுக்கு உதவியது.

ஒரு முறை மாமாவின் சமையலை சுவைத்த வெள்ளைக்கார துரை மாமாவை தன் ஆஸ்தான சமையல்காரனாக வைத்துக் கொண்டார். மாமாவும் அவருடன் வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார துரை வெளியூர் செல்லும் போதெல்லாம் மாமாவும் அவருடன் செல்ல வேண்டியதாக இருந்தது. விடுமுறை கிடைக்கும் போது தான் வீட்டுக்கு வருவார். வெள்ளைக்கார துரை நல்ல சம்பளம் தந்ததால் அம்மாவுக்கு நல்லப்படியாக திருமணம் செய்து வைத்தார். அம்மாவிடம் கற்ற சமையல் தான் தனக்கு சோறு போடுகிறது என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவார்.

அம்மாவின் நிலைமையை கேட்டவுடன் தன் வேலையை விட்டு தான் சிதம்பரத்திற்கு வந்தார் என்று எங்களுக்கு பிறகு தான் தெரிந்தது. அம்மாவிடம் கற்ற சமையல், அவள் மேல் வைத்திருக்கும் பாசம் என்று எங்களுக்காக திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். பட்டினத்தில் இருந்து எங்களுடன் சிதம்பரத்தில் தங்கிவிட்டார்.

மாமா வாடி போயிருந்த அம்மாவிடம், " இந்திரா.... இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படியே இருப்ப...." என்றார்.

"இல்லண்ணா... என் பயமே... எப்படி இவன படிக்கவச்சி வளர்க்க போறேனு தான்...?"

" கவலப்படதாம்மா... நான் உன் கூடவே இருக்கேன்ல...."

" என்னக்காக எவ்வளவு நாள் நீ கஷ்ட படுவேண்ணே... என் கல்யாணத்துக்காக கடன் வாங்கி இப்ப வேலை செஞ்சு அடைச்ச. நீயும், கல்யாணம் காச்சி பார்க்குற நேரம் பார்த்து இப்படி அயிடுச்சு. எனக்காக கல்யாணம் வேண்டாம் சொன்னா என்னால தாங்க முடியலைண்ணே..."

"விடும்மா... என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்....". அம்மாவிடம் மாமா கற்ற சமையல் பாசம், நன்றியுணர்ச்சியாக வெளிப்பட்டது.

" என்னண்ணே இப்படி.. சொல்லுற.. ? உனக்கு இப்பவே முப்பது வயசு மேல ஆகுது.... எப்ப நீ கல்யாணம் பண்ணி குழந்த குட்டி எல்லாம்...." என்று இந்திரா இழுத்து சொன்னாள்.

" இப்ப அது முக்கியமில்ல. நான் பட்டினத்துல வேலைய விட்டேன். இங்க வேலைக்கு ஏதாச்சு பண்ணனும்." என்று நிருத்தி விட்டு என்னையே பார்த்தார்.

"என்ன சொல்லவந்து பாதியில நிருத்திட்ட...."

"ம்ம்ம்... ஒண்ணுமில்ல. இந்த காலேஜ் பக்கம் சாப்பாடு கட வைக்கலாம் இருக்கேன். அது விஷயமா ஒருத்தர பார்த்திட்டு வரேன்."

" கேக்றேன் தப்ப நினைக்காத... சாப்பாடு கட வைக்கிற அளவுக்கு பணம் இருக்கா..?"

"பணத்துக்கு என்ன கஷ்டம். பட்டினத்துல எத்தன ச்நேகிதங்க இருக்காங்க தெரியுமா... கவல படதா. நான் இருக்கேன். மனச தைரியமா வச்சிக்கோ..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

ராமா மாமா அம்மாவுக்கு கடவுள் போல் தெரிந்தார். அவர் இல்லை என்றால் அம்மா நிச்சயமாக தற்கொலை தான் செய்துக் கொண்டு இருப்பாள். அப்பாவை தவிர இந்த உலகம் தெரியாதவர். 'கடவுள் மனித உருவத்தில் வரும்' என்று அம்மாவிடம் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதை 'மாமா' உருவில் இன்று தான் பார்த்தேன்.

உணவகம் வைப்பதற்காக ஒரு மாதம் மேல் அலைந்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பொறியியல் வளாகத்தில் உணவகம் வைக்க அனுமதிக்கிடைக்கவில்லை. பெரிய பெரிய மனிதர்களிடம் சென்று அனுமதி, உத்தரவு வாங்க அங்கு இங்கும் சென்று பார்த்தார். கையில் இருந்த பணம் தான் கரைந்தது. பலனேதுமில்லை.

நீண்ட நாள் பொருத்திருந்தார். கடைசியில் அவர் நண்பர் மாணிக்கத்தின் ஆலோசனை படி சிதம்பரம் பஸ் நிலையத்தில் அருகே உணவகம் தொடங்கினார். வீட்டில் இருந்து உணவகம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. சைக்கிள் மீதித்து செல்லும் தொலைவில் இருந்ததால் நாங்கள் கீழ வீதியிலே தங்கிவிட்டோம்.

என்னையும், அம்மாவையும் வைத்துக் கொண்டு சைக்கிள் மிதித்து ஓட்டுவார். என்னை பள்ளியில் விட்டு விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கு செல்வார். இதுவரை வீட்டிலேயே இருந்த அம்மா, உணவகத்தில் சமைப்பதும், எச்சில் இலை எடுப்பதும் என்று மாமாவுக்கு உதவியாக இருந்தார். மாமா பல தடவை சொல்லியும் அம்மா கேட்கவில்லை.

"யாரோ இந்த வேலை செய்யுறதுக்கு நீ சம்பளம் தரத்துக்கு நா இந்த வேலைய செய்யுறேன்...." என்று அம்மா இந்த வேலை எல்லாம் செய்தார். இந்த வேலை செய்வதிலும் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம். அப்பா பிரிந்த சோகத்தை இயல்பாக திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்பாவை எனக்கு ராமா மாமாவை மிகவும் பிடிக்க தொடங்கியது. அம்மாவிடம் கேட்பதை விட மாமாவிடம் கேட்டால் கேட்டதை வாங்கி தருவார். அவர் சந்தோஷத்தில் இருந்தாலும் சரி, என்னை கேலி செய்வதாக இருந்தாலும் சரி, என்னை வார்த்தைக்கு வார்த்தை "மருமகனே.... " என்று அழைப்பார். என் மீது கோபமோ வருத்தமோ இருந்தால் ' வாங்க... போங்க..." என்று மரியாதையாக பேசுவார். அவர் என்னை அழைப்பதை வைத்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று கணித்து விடுவேன்.

அவரிடம் பிடித்தது உடலை பராமரிப்பது. குண்டும் இல்லாமல், மிகவும் ஒல்லியாக இல்லாமல் தன் உடலை சரியாக வைத்துக் கொள்வார்.

எனக்கு அவரிடம் பிடிக்காதது அதிகம் வெத்தலை போடுவார். ஆனால், மற்றவர்கள் போல் கண்ட இடத்தில் துப்ப மாட்டார். அதற்கு என்று தனி பாத்திரம் கடையிலும், வீட்டிலும் இருக்கும். காய்கறி கடையில் பொருட்கள் வாங்கும் போது வெத்தலை போடமாட்டார்.

அப்பா இறந்த ஏழு வருடங்களில் மாமாவின் உலகம் உணவகம், காய்கறி கடை, சமையல், வீடு என்றே இயங்கிக் கொண்டு இருந்தது.

நாளிதழில் எதோ கட்டுரை படித்துக் கொண்டு இருந்தார்.

"என்ன படிக்குற மாமா...?"

"வாடா மருமகனே...! பள்ளிகூடம் முடிஞ்சிருசா...."

" முடிஞ்சதுனால தானே வீட்டுக்கு வந்தேன். என்ன படிக்குறேனு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லவே இல்ல..."

" சரிடா...பெரிய மனுஷா. அண்ணாதுரை எழுதின கட்டுரை ஒண்ணு படிச்சிட்டு இருக்கேன்..."

" எங்க கொடு... பார்ப்போம்..." என்று சொல்லி அந்த நாளிதழை வாங்கி படித்தேன்.

" இவரு கடவுள கிண்டல் பண்ணி எழுதியிருக்காரு. தப்பில்ல..." என்று வியப்புடன் கேட்டேன்.

"இவரு கடவுள் இல்லனு சொல்லுறவரு. அது தான் இவங்க பொழப்பு...".

" கடவுள் இல்லனும் சொல்லுறது பொழப்பு சொல்லுறீங்க. பாவம் அவங்க...! கடவுள் அவங்களுக்கு உதவலைனு தானே இல்லனு சொல்லுறாங்க. கடவுள் அவங்களுக்கு உதவி பண்ணா நம்ப போறாங்க..."

"வர... வர.. நீயும் அண்ணாதுரை மாதிரி பேசுற..."

" சும்மா சும்மா அவர் பேர சொல்லு றீங்க.. அவரு யாரு...??"

மாமா "ஏன்டா பேசினோம்? " என்று இருந்தார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலும் எனக்கு கேள்வியாக தான் பிறந்தது. ஒரு வேலை அண்ணாதுரை இப்படி தானோ...? மற்றவர் பதிலிருந்து கேள்வி கேட்பாரோ...? மாமா அண்ணாதுரை மாதிரி என்று சொன்னவுடன் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோண்றியது.

" பதில் பேசாம இருக்கீங்க...." என்று நச்சரித்தேன்.

" எனக்கு தெரிஞ்ச சொல்லுறேன். முன்னாடி பெரியார் கிட்ட இருந்தாரு. இப்போ தனியா தி.மு.கனு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு.ஏதோ அப்பபோ பத்திரிக்கையில இந்த மாதிரி எழுதுறாரு..." என்று ரத்தின சுருக்கமாக ஒரு சகாப்தம் படைக்க போவரைப் பற்றி சொன்னார்.

" என்ன மாமா...? இது கதையா...?" என்று இன்னொரு கேள்வியை கேட்டேன். மாமா முன் தலை கொஞ்சம் வழுக்கையாக இருக்கும். நான் கேட்கும் கேள்விகளில் முழு வழுக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதிறக்கில்லை.

"இல்ல ! இது கட்டுரை. ஏன் கேக்குற....?" கேட்டார்.

" ஒண்ணுமில்ல... முன்னுரை, விளக்கம், முடிவரை தலைப்பு போடாம எழுதியிருக்காரு. கட்டுரை எப்படி எழுதனும் அவருக்கு தெரியாதா... எங்க பள்ளிக்கூடத்துல இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க... " என்றேன்.

"அம்மா இந்திரா...கொஞ்சம் இங்க வாம்மா. இவன் கிட்ட என்னால பேசமுடியல்ல..." என்று அம்மாவை அழைத்தார். அம்மாவுக்கு பயந்து நான் உள்ளே ஒடிப்போய் எஸ்.எஸ்.எல்.சி பாட புத்தகத்தை எடுத்துப்படிக்க தொடங்கினேன்.

அடுத்த நாள் அவருக்கு ஒரு பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெரியாமல் சிரித்தப்படி மீண்டும் நாளிதழ் படிக்க தொடங்கினார்.

(தொடரும்..)

Tuesday, February 7, 2012

இரண்டு வாசகர் கடிதங்கள் !

தேதி : 28.1.12

பேரன்பின் நல்வீர் !

வணக்கம். தமிழினியன் வெளியிட்ட பொங்கல் மலரில் யோசனை மட்டுமல்ல, அறிவுக் கூர்மையான எண்ணங்களை கூறியதை அறிந்து மகிழ்ந்தேன். ”புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை” என்ற தலைப்பில் எழுதியவைப் பாராட்டிற்குறியது. சீர்காழி வட்ட நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் என்ற முறையில் தாங்கள் கூறிய கருத்துகளையே யான் வலியுறுத்திப் பேசுவேன்.

தொலைக்காட்சி ஊடகங்களால் புத்தகங்களைப் படிப்போர் குறைந்து வருகின்றனர். நல்ல எழுத்தாளர் படைப்புகளை வரவேற்று வணங்கிப் படிக்க வேண்டும். “உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்றத்திற்கும் நல்வழிக்கும் புத்தகமே அளிக்கும் என்பதும் கடவுள் தீர்த்து வைக்க முடியாதத் தீர்வுகளுக்குப் புத்தகங்கள் தீரு உண்டு என்பது உண்மையின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள் !!

நன்றி,

அன்புடன்,
ஜெ.சண்முகம்
தென்பாதி – 609111
சீர்காழி.

**

தேதி : 24.1.12

மதிப்பிற்குரிய கவிஞர் மற்றும் பதிப்பாளர் குகன் அவர்களுக்கு,

என் புத்தகம் ஒன்றினை அனுப்பி உங்களது கருத்துக்களை கேட்டு இருந்தேன். எவ்வித தயக்கமின்றி உண்மையான விமர்சனத்தை என் கவிதைக்கும், எனக்கும் தந்தீர்கள். அதற்காக ஓர் மிகப் பெரிய நன்றி ! நன்றி !!

அதன் பின்னர், கைப்பேசியில் உரையாடும் போது ஓர் எழுத்தாளன் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும். எவ்வாறு எழுத வேண்டும், எந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென கூறினீர்கள். அது மட்டுமின்றி, எனக்காக தனிப்பட்ட குறிப்புகளை தந்தீர்கள். ஒரு நல்ல கவிஞனாய், பதிப்பாளனாய் உங்களைப் போன்று ஒரு சிறந்த மனிதரை பார்ப்பது மிகவும் அரிது. எனினும், நீங்கள் கூறிய அறிவுரைகள், சில அனுபவங்கள் உங்களின் உண்மையான மனதை மிகவும் அழகாக வெளிகாட்டுகிறது.

இதுமட்டுமின்றி, எனது கவிதையில் ஒரு கவிதை மட்டும் பெண்ணை குறிப்பிடுவதாக கூறினீர்கள். அது என் தவறல்ல பதிப்பதித்தாரின் தவறு, ஒரேயொரு எழுத்து மட்டும் மாறிவிட்டது.

உங்களிடம் உங்களது பதிப்பக புத்தகம் இரண்டை கேட்டேன். கூடிய விரையில் M.O. அனுப்பி பெற்றுக் கொள்கிறேன்.

”நமது நட்பு எப்போதும் தொடரட்டும்
வாழையடி வாழையாய்”


தோழமையுடன்,
”தாய்” சுரேஷ்
கடத்தூர்.

****

எனக்கு வந்த இரண்டு வாசகர் கடிதங்களை இங்கு குறிப்பிட்டதற்கு இரண்டு காரணம் உள்ளது. கடைசி காரணம் சுய விளம்பரம். முதல் காரணம், மின்னஞ்சல், செல்பேசி வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் இன்னும் கடிதம் எழுதும் கலாச்சாரம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது என்பது தான்.

அதுவும்”தாய்” சுரேஷ்யின் கடிதம் சொல்லியாக வேண்டும். என் விமர்சன பதிவுக்கு பிறகு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு மூன்று முறை போனில் பேசியிருப்போம்.

ஏற்கனவே நன்றி சொல்லிய பிறகு எதற்கு கடிதத்தில் இன்னொரு நன்றி என்று கேட்ட போது, " நான் உங்களிடம் பேசிய எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு நினைவில் இருக்க போவதில்லை. ஆனால்,பல வருடம் கழித்து கடிதத்தை நீங்கள் பாதுகாத்து படித்தாலும் நான் உங்களிடம் புதிதாக பேசியது போல் இருக்கும்" என்றார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வாசகர் கடிதம் எழுத தொடங்கி எழுத்தாளனாக மாறியதை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எழுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியாக இருந்த வாசகர் கடிதம் நாற்பது வயது தாண்டியவர்கள் மட்டுமே பயன்ப்படுத்தி வருகிறார்கள். வலைப்பதிவுகளில் மட்டுமே "எதிர்வினை", ”பின்னூட்டம்” என்ற பெயரில் இளைய வாசகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

எழுத்தாளனுக்கு பின்னூட்டம், எதிர்வினை மின்னஞ்சலை விட ”வாசகர் கடிதம்” வாசகனை நேரில் சந்துக்கும் பிம்பத்தை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இரண்டு வாசகர் கடிதம் படித்த பிறகு, எனக்கு வந்த வாசகர் மின்னஞ்சலையும் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Monday, February 6, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 1

அறிமுக அத்தியாயம்

நீங்கள் இதுவரை என்னை ஆகாஷின் தாத்தாவாக, சிவகாமியின் கணவனாக, ரகுவின் தந்தையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள். மனைவி, மகன், பேரன் எல்லாம் வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் வருபவர்கள். ஆனால், எல்லோருடைய வாழ்கையிலும் முதல் பாதியில் வருபவர்கள் முக்கியமான இருவர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா. என்னை மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த காரணமே இந்த இரண்டு பேர் தான்.

என் உள்ளூணர்விடம் பேச வந்த உங்களிடம் என்னை அறிமுகம் செய்யாமல் பேசுகிறேன். என் பெயரை உங்களிடம் சொல்லவில்லையே....!

என் பெயர் சந்திரசேகர். சுருக்கமாக 'சந்திரு' என்று அழைப்பார்கள்.

ஜனவரி 26, 1950 என்று சொன்னவுடன் எல்லோரும் குடியரசு தினம் என்று சொல்வீர்கள். நான் பிறந்த தினமும் இது தான்!! இந்தியாவில் ஜமிந்தார்கள், பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிந்து மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இந்தியாவின் உண்மையான ‘சுதந்திர தினம்’ இது தான் என்று பலர் கருதினர். ஆனால், இந்த உலகத்தில் இன்று தான் நான் சிறைப்பட்டேன். சிவந்த நிறம், மென்மையான தேகம், தூக்கம் வழிந்த கண்கள் என்று என் அம்மா நான் பிறந்த போது இருந்ததை பற்றி என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார்.

என் அப்பா பெயர் நாதன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர். என்னுடைய முதல் கதாநாயகன். சைக்கிளில் முன்னே வைத்துக் கொண்டு அவர் வேகமாக செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். இரவு தூங்கும் போது ராட்ச கதைகள் சொல்லுவார். நான் ரசித்து கேட்பேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கதைகள் சொல்வததாக சொல்லி ஒரே மாதிரியான கதைகள் சொல்லுவார். இருந்தாலும் அதை கேட்டபின் நான் தூங்குவேன்.

என் அம்மா பெயர் இந்திரா ராணி. அப்பா செல்லமாக 'இந்திரா' என்று அழைப்பார். நானும், அப்பாவும் தான் அம்மாவுக்கு உலகம். திடீர் திடீர் என்று கோபம் வரும். மற்றப்படி மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். மனதில் இருப்பதை உடைத்து பேசிவிடுவார். அடுத்தவர்கள் மனம் புண்படுமே என்று நினைத்து பார்க்க மாட்டார். ஆனால், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும் நினைப்பவர்.

அப்பா என்னை இரண்டு கையால் தூக்கி என்னோடு சேர்ந்து சுற்றி கீழே விடுவார். அவர் என்னை கீழே விட்டதும் இந்த உலகமே என்னை சுற்றுவது போல் இருக்கும். இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா என்னை தூக்கி சுத்தும் போது திட்டுவாள். ஆனால், அப்பா பதிலுக்கு அம்மாவை திட்டி நான் பார்த்தில்லை.அம்மாவே கோபப்பட்டாலும் அப்பா பொறுமையுடன் இருப்பார். அப்பா முகம் கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்று நான் பார்த்ததேயில்லை.

நான் எது கேட்டாலும் அப்பா வாங்கி கொடுத்துவிடுவார். அப்படி அவர் மறுத்தால் பிடிவாதம் பிடித்து சுவரில் முட்டிக் கொள்வேன். நான் அப்படி செய்ய கூடாது என்பதற்காகவே கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்.

அப்பா வீட்டில் தேவையில்லாத காகிதங்களை கசக்கி உருண்டை செய்து, அதன் மேல் வெட்டிய பழைய சைக்கிள் ட்யூப்பை வைத்து பந்து செய்து கொடுப்பார். அந்த பந்தில் தான் நான் நண்பர்களோடு விளையாடுவேன். எவ்வளவு வேகமாக அந்த பந்து மேலே பட்டாலும் வலிக்காது. எனக்கு அடிப்பக்கூடாது என்பதற்காக அப்பா பொறுமையாக பந்து செய்துக் கொடுப்பார்.

எங்கள் வீடு சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் இருந்தது. மாதம் ஐந்து ரூபாய் வாடகை. அப்பாவுக்கு ஐபது ரூபாய் சம்பளம்.

" இந்திரா... இந்திரா... பையன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டானா...." என்று பரபரப்புடன் என் அப்பாவின் குரல்.

" இதோ வந்துட்டே இருக்கான்..." என் கை பிடித்து அம்மா அழைத்து வந்தாள்.

என்னை தாமரை பூ போல் சுமப்பது போல் சுமந்து மெதுவாக சைக்கிள் முன் அப்பா அமர வைத்தார். என் அப்பா சைக்கிள் பின்புறம் அம்மா அமர்ந்தப்படி வந்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் வழியாக தான் செல்வோம். அப்பா வண்டியை நிருத்தி விட்டு வெளியே இருந்தப்படி வணங்கி பிறகு தான் செல்வார். பல முறை அப்பா வெளியே இருந்து தான் வணங்கி இருக்கிறார். ஒரு முறை கூட என்னையும், அம்மாவையும் உள்ளே அழைத்து சென்றதில்லை. அவர் உள்ளே போகாததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.

மூச்சு இறைக்க இறைக்க அப்பா வண்டி ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்த அம்மா வீட்டுக்கு வேண்டிய காய்கறி எல்லாம் வாங்குவதற்கு கொஞ்ச தூரத்தில் இறங்கி, நடந்து செல்லுவதாக கூறினார். அப்பாவும் சிரித்தப்படி அம்மாவை இறக்கிவிட்டார்.

"பார்த்து வீட்டுக்கு போம்மா..." என்று அன்புடன் அம்மாவிடம் கூறினார்.

" சரிங்க...." என்றாள். அப்பாவும், அம்மாவும் இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அம்மா இறங்கியவுடன் அப்பாவுக்கு பெரிய பலமே வந்துவிட்டது. அப்பா சைக்கிளை வேகமாக மிதித்தார். அவர் வேகமாக செல்ல செல்ல எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த அப்பா இன்னும் வேகமாக ஓட்டினார். மேடு, பல்லங்களில் வண்டி செல்லும் எனக்கு வலித்தாலும் வேகம் ரொம்பவும் பிடித்திருந்தது. அவரின் வேகம் முன்னே இருந்த பெரிய பல்லத்தை பார்க்கவில்லை. சைக்கிள் சற்று நிலை தடுமாறியது. நான் முன் பக்கம் விழுவது போல் இருந்தேன். ஆனால், அப்பா என்னை தாங்கி பிடித்துக் கொண்டு விழுந்ததால் நான் அவர் மேல் விழுந்தேன்.

எனக்கு கையில் பலமான காயம் பட்டது. நாங்கள் விழுவதை பார்த்தும் இனிப்பை பார்த்த எறும்பு போல் எங்களை சுற்றி கூட்டம் கூடியது.

"பாவம் ! சின்ன பையன்"

"எதுக்கு சைக்கிள வேகம ஓட்டனும். இப்படி அடிப்படனும்..."

"யாராவது போய் உதவுங்கப்பா...?"

இப்படி பலர் பேசுவது என் காதில் கேட்டது. எல்லோரும் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதுமாக தான் இருந்தனர். அப்பாவை தட்டி தட்டி எழுப்பினேன். அவர் எழவில்லை. அப்போது தான் கவனித்தேன். விழும் போது அவர் தலையில் பின் மண்டை கல்லில் அடிப்பட்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நான் அழுதுக் கொண்டு அப்பாவை எழுப்ப பார்த்தேன். அவர் வீட்டில் தூங்குவது போல் அமைதியாக மயங்கி கிடந்தார்.

"பாவம் இரத்தம் எவ்வளவு போகுது பாரு...." என்று அப்பாவை தூக்கி சென்றவர் பரிதாபமாக சொன்னார்.

மருத்துவமனைக்கு சென்றதும், எனக்கு மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்தனர். அப்பாவுக்கு எதுவும் அவர்கள் செய்யவில்லை. எனக்கு பயமாக இருந்தது.

கொஞ்சம் நேரத்தில் கண்ணில் நீர் தழும்ப அம்மா என்னை நோக்கி வருதைவதை பார்த்தேன். என்னை வாரிக்கட்டி அணைத்துக் கொண்டார். உள்ளே அழைத்து சென்ற என் தந்தை வெளியே எடுத்து வந்தனர். அம்மா தன் தலை அப்பா மீது மோதி மோதி இடித்துக் கொண்டு அழுதார்.

அம்மா கத்தியப்படி "இனிமே நமக்கு யாரு இருக்கா..." என்ற சொன்னபோது தான் எனக்கு தெரிந்தது அப்பா விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று !

என் வாழ்க்கையையில் நான் பார்த்த முதல் மரணம் என் அப்பாவுடையது. மூக்கை பஞ்சால் அடைத்து, கை, கால் இரண்டையும் சிறு வெள்ளை துணியால் கட்டி, காதுகளை சுற்று துணியால் மூடி..... இப்படி என் அப்பாவை படுக்க வைத்தனர். அம்மா அழுகையை என்னால் போக்க முடியவில்லை.

இறப்பு என்றால் என்னவென்று தெரியாத வயது. அப்பா எழுப்ப பல முறை தட்டினேன். எனக்கு காகிதத்தில் பந்து செய்து தர சொன்னேன். எதுவும் அவர் காதில் விழவில்லை.

இனி எங்கள் வாழ்வு அவ்வளவு தான் என்ற பயம் அம்மாவை தொற்றிக் கொண்டது.

" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." ஒரு குரல் கேட்டது.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டுக் கொண்டு ஒருவர் அம்மா அருகே நின்றார். தலையில் இரண்டு மூன்று வெள்ளை மூடி தெரிந்தால், பார்ப்பதற்கு கொஞ்ச இளமையாக தான் தெரிந்தார். இவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது.
Related Posts with Thumbnails