விளம்பரம்

Thursday, July 16, 2009

எஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்

மனுஷன் கட்டுரையில் கொள்ளுரார்னா சிறுகதையிலும் மனதை கசிய வைக்கிறார். சமிபத்தில் அவருடைய இரண்டு சிறுகதை நூலை படிக்கும் நேரம் கிடைத்தது.

பால்ய நதி

முதல் கதை " கானகப்புலியின் மனைவி". கதையை படித்து முடித்த பிறகு மாயாஜால கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ என்று நினைத்தேன். அடுத்த கதையான " ஒளியை வாசிக்கின்றவன்" கதையில் பழைய டாக்கிஸ்ல் வேலை செய்த 'டாக்கி' வேலையை நினைவு படுத்தும் கதையாக எழுதியிருக்கிறார்.

"மினர்வா சலூன்" - ரங்கூன் புலம் பெயர்ந்த தமிழனின் கதை என்று நினைத்தால், கிரைம் கதையாக முடிகிறது.

'இரு குரல்' - எதோ தற்கால கதை நிகழு என்று வாசித்தால், கடைசியில் கண்ணகி கதை என்று முடித்திருக்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவை யூகிக்க முடியாமல் இருந்தால் பரவாயில்லை. இவர் காலத்தையே யூகிக்க முடிக்காமல் இறுதியில் அந்த முடிச்சை அவிழ்ப்பது மிகவும் அருமை.

எஸ்.ராமகிருஷ்ணின் ஐந்தாவது சிறுகதை தொகுப்பு இது !

விலை.60. பக்கங்கள் : 120, உயிர்மை பதிப்பகம்.


நடந்து செல்லும் நீருற்று



‘பிழை திருத்துபவடின் மனைவி’ நிலைமை சொல்லி முதல் கதையிலே நம்மை நெகிழவைக்கிறார். பிழை திருத்துபவரின் மனைவி நிலைமையே இப்படி என்றால் எழுத்தாளரின் மனைவி நிலைமை பற்றி யோசிக்க கூட முடியவில்லை. 'சேர்ந்திசைப்பவர்கள்' கதையில் சத்பாலை இசை குழு பெயரில் மௌனத்தை இசையாக உணர வைத்திருக்கிறார்.

'பனாரஸ்' திகிலான கதை.

'பதினைந்து வயதில் ஒருவன்' கதையில் ஆத்தியப்பன் கதாபாத்திரம் மூலம் நம் பாலியத்தை கொஞ்சம் எட்டிபார்க்க வைத்திருக்கிறார்.

'ஒரு நகரம், சில பகல்கனவுகள்' கதை ஆங்கிலத்தில் வந்த vantage point படத்தை ஞாபகம் படுத்துகிறது. ஏற தாழ நம் 'ஆயுத எழுத்து' படம் போல தான். இருந்தாலும் 'பயோனியர் லாட்ஜ்' வரலாற்று சுருக்கம் மிகவும் அருமை.

அதிக வர்ணனைகளும், சம்பாஷைகளும் கதையை ஒரே இடத்தில் இருப்பது போல பிம்பத்தை தோற்றுவிக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணின் ஆறாவது சிறுகதை தொகுப்பு இது !

விலை.70. பக்.120, உயிர்மை பதிப்பகம்.

சிறுகதை பெயரில் ஏன் கதையை இவ்வளவு பெரிதாக எழுதுகிறார் என்ற சந்தேகம் மட்டும் இருந்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு வேளை இதை தான் பின் நவீனத்துவம் சொல்லுறாங்களோ...!

Wednesday, July 15, 2009

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.



நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Tuesday, July 14, 2009

தேக்வாண்டோ

விளையாட்டுத்துறையில் முன்னேறி வரும் வீரர்களில் மிக முக்கியமானவர் இருபது வயதான தேக்வாண்டோ வீரர் 'ராம்போ' ரவி. தேசிய அளவில் நடந்த 'தேக்வாண்டோ' போட்டியில் தமிழ சார்பில் தங்கப்பதக்கம் வென்றவர். சமிபத்தில் 'தின சூரியன்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி.

வணக்கம் திரு.ரவி ! தமிழக சாற்பில தங்கப்பதக்கம் வாங்கின உங்களுக்கு... தேக்வாண்டோ மேல எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது ?

என் பிரெண்ட்ஸ் நிறைய பேரு கிரிக்கெட், டென்னிஸ்னு அதில ஆர்வமா விளையாடுனாங்க. எனக்கு யாரும் ஆர்வம் செலுத்தாத விளையாட்ட விளையாடி என் மூலம் அந்த விளையாட்ட தமிழ் நாட்டுல நிறைய வேரு விளையாடனும். அதான் என் ஆசை. அதனால தான் நான் தேக்வாண்டோ மேல ஆர்வம் செலுத்தினேன்.



எங்க வாசகர் பல பேருக்கு தேக்வாண்டோ பத்தி தெரியாது. அத பத்தி கொஞ்சம் விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும் ?

1965ல் கொரியன் ஒட்டப் பந்தய அமைப்புடன் சேர்ந்த கொரியன் தேக்வாண்டோ அமைப்பு உருவாச்சு. தேக்வாண்டோனா 'கடினமான' அல்லது 'வெளிப்புற' நடை கொண்ட ஒரு வீரமிக்க கலைனு சொல்வோம். தசைச் சக்திய வர்ணிக்க இப்படி சொல்லுவாங்க ! எதிரே வரும் சக்தி நம் மேல தாக்காமல் அதன் திசையை மாற்று செய்வது இந்த கலையோட முக்கிய பண்பு !

தேக்வாண்டோ சண்டையில எது ரொம்ப முக்கியம் ?

ஸ்டான்ஸ் ரொம்ப முக்கியம். அடிக்கும் போது சரி. தடுக்கும் போது சரி. நாம வேண்டிய விளைவுகள உண்டாக்கனும்னா எதிரி கிட்டயிருந்து சரியான தூரத்துல இருக்கனும். தாமதம் இல்லாம பதிலடி கொடுக்கவும் ஸ்டான்ஸ் உதவும்.

எத்தன விதமானா ஸ்டான்ஸ் இருக்குனு தெரிஞ்சிக்கலாமா ?

அட்டென்சன் ஸ்டான்ஸ், பேரலல் ரெடி ஸ்டான்ஸ்னு இப்படி பல ஸ்டான்ஸ் இருக்கு. எல்லாருக்கும் சீரான ஒரே மாதிரி உயரம் கிடையாது. சிலரு உயரமா. ஒரு சிலரு குட்டையா இருப்பாங்க. ஸ்டான்ஸ்வோட தன்ம எடை பகிரது, உயரம், நீளம், அகலம் இதவச்சு தான் சரியா சொல்ல முடியும்.

உங்க விளக்கத்துக்கு நன்றி ரவி ! எங்களுக்காக தேக்வாண்டோ இருக்குற போஸ் கொடுத்தா... பத்திரிக்கையில படம் போட உதவியா இருக்கும்.

மலர்ந்த முகத்தோடு 'ராம்போ' ரவி தன் இருக்கையில் இருந்து எழுந்தார். இரு கால்களையும் இரு பக்கமும் நீளமாக அகற்றி முட்டிகளை மடங்காதவாறு நின்றார்.

புகைப்படக்காரர் ஒரு படம் எடுத்துக் கொண்டார்.

இருகால்களை பக்கவாட்டில் விரித்துத் தரையைத் தொடும்படி அமர்ந்தார்.

புகைப்படக்காரர் இன்னொரு படம் எடுத்துக் கொண்டார்.

செங்குத்தான உடம்பை முன் புறமாக வளைத்து இடது காலைத் தொடுமாறு காலைக் கைகளால் பிடித்தப்படி அழுத்தினார்.

ஸார் ! உங்களோட வருங்கால லட்சியம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ?

இந்தியா சார்பில ஒலிம்பிக் போட்டியில கலந்திட்டு பதக்கம் வாங்குறது தான் என் லட்சியம். நல்ல ஸ்பான்ஸர் கிடைச்சா சிங்கப்பூர் போய் ட்ரெய்னிங் எடுத்துப்பேன்.

உங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள் !!

'தின சூரியன்' பத்திரிக்கையில் பத்து ஆண்டு முன் தான் அளித்த பேட்டியை பார்த்தான் ரவி. பத்து வருடங்களாக அவன் பேட்டி வந்த பத்திரிக்கை அவனுடைய கண்ணீரை பார்த்துள்ளது. பழைய ஞாபகம் வரும் போதெல்லாம் பெட்டியில் இருந்து தன் பேட்டி வந்த பத்திரிக்கையை பார்ப்பான். படித்து முடித்த பிறகு கண்ணீர் சிந்துவான்.

அவனோடு விளையாட்டு துறையில் ஈடுப்பட்ட அவனது நண்பர்கள் கிரிக்கெட்டில் ஐ.சி.எல்., ஐ.பி.எல் என்று உலகம் சுற்றி சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இவனுக்கு சரியான ஊக்கமும், உதவியும் கிடைக்காததால் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்.

Monday, July 13, 2009

விகடனில் நான் எழுதிய நகைச்சுவை

இந்த வார விகடனில் (15.7.09) நான் எழுதிய நகைச்சுவை வெளிவந்துள்ளது.

பக். 19.

"ஐ.டி. ஆபீஸ்ல வேலை பார்த்தவரை நம்ம ஹோட்டல்ல சூபர்வைஸரா போட்டது தப்பாப் போச்சு"

" ஏன் என்ன ஆச்சு ?"

" சாம்பார்ல உப்பு அதிகம் ஆயிட்டா என்ன பண்ணணும்னு கூகுள்ல தேடிக்கிட்டு இருக்காரு..."


ஒரு சிறு வருத்தம் என்னவென்றால் அந்த நகைச்சுவை வேறு ஒருவரின் பெயரில் (டி.பெருமாள்) வெளிவந்துள்ளது.

இந்த நகைச்சுவை என் அலுவலக நாடகத்திற்காக நான் எழுதியது. இதை "ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? " (ஜனவரி.30,09) என்ற தலைப்பில் நான் முன்பே பதிவு போட்டுயிருக்கிறேன். பதிவை மிகவும் ரசித்த நண்பர் ஒருவர் தான் இதை செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

எப்படியோ நான் எழுதிய நகைச்சுவை விகடனின் வந்தது சந்தோஷம் தான். நண்பர் டி.பெருமாளுக்கு நன்றி !!

[ விகடனை பார்த்த என் அலுவக நண்பர் ( நாடகத்தில் கூகுள் தேடும் நபராக நடித்தவர்) எனக்கு போன் போட்டு தெரிவித்தார். அவருக்கு என் நன்றிகள் பல....]

Sunday, July 12, 2009

அப்துல் ரகுமானே இது நியாயம் தானா...?

அது ஒரு 'பெண்கள் தினம்'. பெண்களை பற்றி பெருமையாக கவிதை எழுதி தர வேண்டும் என்று ஒரு அழகிய யூவதி கேட்டிருந்தாள். கட்டிளம் காளை சும்மா இருப்பானா... உடனே பேனா எடுத்து கவிதை எழுதிக் கொடுத்தான். கொடுத்தவன் தனியாக கொடுக்க கூடாதா.... நண்பன் முன் கொடுத்தது தான் வந்தது பிரச்சனை. அந்த கட்டிளம் காளை கொடுத்தது அப்துல் ரகுமான் எழுதிய 'ஆலாபனை' நூலில் இருக்கும் முதல் கவிதை. அந்த நண்பன் உண்மையை போட்டு உடைத்துவிட்டான். அந்த யூவதி கோபித்துக் கொண்டு சென்று விட்டாள். அதன் பின் கட்டிளம் காளை உண்மையான கவிதை எழுதினாலும் யாரும் நம்புவதில்லை.

சினிமா துறை சாராத கவிஞர்கள் பற்றி கேட்டால் யோசிக்காமல் பலர் சொல்லுவது 'அப்துல் ரகுமான்'. கல்லூரி நாட்களில் ‘ஆலாபனை’, இரண்டு வருடம் முன்பு 'இது சிறகுகளின் நேரம்' என்று இவரின் இரண்டு புத்தகத்தை வாசித்திருக்கிறேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் எழுதிய நூல் படிக்க இப்போது தான் சந்தர்ப்பம். நூலின் பெயர் ' மரணம் முற்றுப்புள்ளி அல்ல....!'

'இமைகளைக் காப்போம்' தலைப்பில்

நெற்றிக்கண்
கண்டதும் காதல் எரிந்தது

சாம்பலின் கௌரவப் பெயர் திருநீறு

பெற்றோர்களை கொன்றுவிட்டுப்
பிள்ளைகளுக்கு அனாதை ஆஸ்ரமம்
கட்டிக் கொடுப்பது போல், தூக்கத்தைக் கொன்றுவிட்டுத்
தூக்க மாத்திரைகளைத் தயாரித்துத் தருகிறது
அறிவியல்


‘இறந்த நான்’ தலைப்பில்

இறந்த காலத்தின் ஏதோ ஒரு கணத்து நான்.
ஆம், இறந்துவிட்ட நான் !
கணத்திற்குக் கணம்
நான் மாறிக் கொண்டிருக்கிறேன் !

இதோ ! இந்த புகைப்படம்
என் பிணந்தான்
கண்ணாடிச் சமாதியில் புதைக்கப்பட்ட பிணம்.


'மலட்டு தாய்' தலைப்பில்

பிறப்பில்லாமல் இறப்பா ?
முதலில் இறப்பென்றால்
என்ன அர்த்தம் ?
பிறப்பென்றால்
உயிர்ப் படைப்பு அல்லவா ? உயிரற்றதைப்
பிறப்பு என்று எப்படிச் சொல்வது ?


நான் கல்லூரியில் படித்த அதே அப்துல் ரகுமான் தான். அவர் எழுத்துக்களில் இளமைக் குறையாமல் இருக்கிறது.

இந்த புத்தகம் படித்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கட்டுரையில் விடுப்படு கொஞ்சம் கவிதை பக்கம் ஒதுங்கலாம் என்று புத்தகத்தை எடுத்தேன். ஆனால், இந்த நூல் அவர் எழுதிய 'பால் வீதி' நூலுக்கு உரையாக எழுதியிருக்கிறார். அவர் கவிதைக்கு அவரே உரையெழுதிய காரணத்தை தன் முன்னுரையில் சொல்லியிருந்தார்.

'டைட்டில்' கார்ட்டை forward செய்து படம் பார்ப்பது போல் விளத்தை படிக்காமல் புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் கட்டுரையா என்று என்னை முகம் சுலிக்க வைத்தாலும் இடை இடையே அவரின் கவிதை குளிர வைத்தது. இருந்தாலும் புத்தகம் படித்து முடித்ததும் 'முழு கவிதை' நூலை படித்த திருப்த்தியில்லை. ( இது கவிதை நூல் அல்ல....அவர் கவிதைக்கு உரைநடை என்று விளத்தை படித்த பிறகு என் புத்திக்கு எட்டியது.)

நான் ஏமாந்ததற்கு மூன்று பேர் காரணம்.

கட்டுரையை கவிதைப் போல் (வரிக்கு நான்கு வார்த்தை) அச்சடித்த ‘National’ பதிப்பகம்.

'உரைநடையை' கூட கவிதைப் போல் அழகாய் எழுதிய அப்துல் ரகுமான்.

‘அப்துல் ரகுமான்’ பெயரை மட்டும் பார்த்து எதையும் கவனிக்காமல் நூலை எடுத்த நான்.

இந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள் முதலில் 'பால் வீதி' நூலை வாசித்து விட்டு வாசிங்கள். :)

மரணம் முற்றுப்புள்ளி அல்ல
அப்துல் ரகுமான்
விலை.35, பக் : 88
நேஷனல் பப்ளிஷர்ஸ்
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராய நகர், சென்னை - 17.
Ph:- 2834 3385

Loading...
 
stats counter
வந்தவர்கள்