வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 23, 2015

உளவு ராணிகள் - புதிய தொடர் !!

உலகில் மிக ஆபத்தான ஆயுதம் எது ?

கத்தி. துப்பாக்கி. அணுகுண்டு. ரசாயனம். இன்னும் பிற ஆயுதங்கள் என்று பட்டியலிட்டு சொல்லலாம். உயிரை குடிக்க, துன்புருத்த எத்தனையோ ஆயுதங்கள் இருக்கிறது. பல நாடுகளுக்குள் இருக்கும் போட்டிகளில் இன்னும் பல ஆயுதங்களை கண்டு பிட்டிக்கத்தான் போகிறார்கள். மனித குலம் அழியும் வரை ஆயுத கண்டுப்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வரப்போவதில்லை. 

ஆனால், இத்தனை ஆயுதங்களை விட மிக பெரிய ஆயுதம் ஒன்று இருக்கிறது. எல்லா ஆயுதங்களை விட மிக ஆபத்தாக ஆயுதம். உலகின் முதல் ஆயுதம். கடவுள் சொல்லுக்கு எதிராக ஆதாமை ஆப்பிள் பழத்தை உண்ண வைத்தது. மிக பெரிய ரோம் சாம்ராஜ்ஜியம் சரிய செய்தது. ராமன் இராவணன் மீது போர் தொடுக்க வைத்தது. இன்றைக்கும் பல சாமியார்களின் லட்சனம் வெளியே தெரியவருவது அந்த ஆயுதத்தால் தான். 

அந்த ஆயுதத்தின் பெயர்.... "பெண்". 

பெண் எப்போது தென்றலாக இருப்பாள். புயலாக இருப்பால் என்பது அவளுக்கு தான் தெரியும் என்று கவிதை நடையில் சொல்லலாம். பெண் எப்போது ஆயுதமாக இருப்பாள், ஆபத்தாக இருப்பாள் என்று அவளுக்கு தான் தெரியும் என்பதை எதார்த்த உண்மை நடையில் சொல்லலாம். அவள் மிக பெரிய சக்தி என்பது எல்லா மெகா சீரியலில் காட்டு உண்மை. நாம் அனைவரும் உணர்ந்த உண்மையும் அதுதான்.


அதேப் போல் உளவுத்துறையில் மிகப் பெரிய ஆயுதம் ‘பெண்’ தான். 

பத்து பேர் அடித்து துவைத்து கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையில் கொண்டு வந்துவிடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெற வேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையில் பெற்றுவிடுவாள். பணத்தில் மயங்காதவன் கூட அவள் அழகில் மயங்கிவிடுவான். 

பத்து எதிரிகளை கூட அடித்து வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம். பல ஆண்களில் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். 

நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை உளவு பார்ப்பது மிக அவசியமானது. அவர்களின் ரசகசியத்தை தெரிந்துக் கொள்வது நல்லது. இதில் நேர்மை, நியாயம், தர்மம் என்பது கிடையாது. எதிரியின் ஜாதகம் நமது கையில் இருந்தால் தான் நமது ஆயுள் ரேகை நீண்ட நாள் இருக்கும். எதிரிக்கு சுக்ர யோகம் அடித்தால், நமக்கு ராகு, கேது சேர்ந்து நம் நாட்டின் மீது மானாட மயிலாட ஆடிவிடுவான். 

தர்மத்தை நிலை நாட்ட மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரும் அதர்மத்தை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது. இன்றைய உலக அரசியலும் நம் நாட்டின் பாதுகாப்புக்கு சில அதர்ம வழியில் செல்ல வேண்டியதாக தான் இருக்கிறது. 

இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லமால், கற்பு, மொழி, உறவு போன்ற விஷயங்களை கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நரக கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவல் சேகரித்து வெற்றிக்கரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். 

இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும்.

தகவலுக்காக சில தருதலைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று திருமணம் செய்துக் கொள்ள நேரிடும். காதல், கணிவு, கருணை அனைத்தும் மறக்க வேண்டியதாக இருக்கும். பெண்ணுக்கு உண்டான அனைத்து மேன்மை குணங்களை இழக்கும் சூழ்நிலை உருவாகும். அனைத்தையும் தைரியமாக எதிர்க் கொண்டு நாட்டுக்காக தகவல் சேகரித்தவர்கள். 

அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ உளவு ராணிகள் பற்றிய தொடர் இது.

Friday, July 17, 2015

‘மாரி’ போனாலும், ‘மாறாமல்’ தொடரட்டும் !!

உண்மையில் தனுஷ் வீட்டில் அதிஷ்ட தேவதை ரூம் போட்டு தங்குகிறாள் என்று நினைக்கிறேன்.

அழகில்லாத முகம், ஒல்லியான உடல்... ஆனால், முன்னனி நாயகனாக இருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளை.

பாடத் தெரியாத குரல்... ஆனால், அவர் பாடினால் பாடல்கள் ஹிட்டாகிறது.

சில சமயம் பிரபல பாடலாசிரியர்கள் எழுதிய பாடல் கூட மொக்கையாக அமைவந்துண்டு. இவர் எழுதிய ‘கொலைவெறி’ பாடல் உலகமே பாடியது.

பணம் இருக்கிறதே என்று படம் தயாரித்தார்... தேசிய விருதோடு வசூல் குவிந்துக் கொண்டு இருக்கிறது.

அவருக்காக வேலை செய்ய ஒரு டீம் உருவாக்கியிருக்கிறார்.

நண்பர்கள் விமர்சனத்தை பார்க்கும் போது ‘மாரி’ சுமார் படமாகத் தான் தெரிகிறது. ஆனால், அடுத்த மூன்று நாட்களில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல்.

எல்லாவற்றை கற்றுக் கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் கமலஹாசன் என்றால், சினிமாக்குள் வந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவர் தனுஷ் !!

தனுஷூக்கு  ‘மாரி’ போனாலும், ‘மாறாமல்’ வெற்றி தொடரட்டும்.

Thursday, July 16, 2015

பாகுபலி - திரை விமர்சனம்

பிரமிக்க வைக்கும் பிரமாண்டம். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியளவில் தன்னை முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு படத்தை இரண்டு பாகமாக வெளியீட்டு லாபம் சம்பாதிக்கும் உத்தியில் வெற்றிப் பெற்றுயிருக்கிறார். ( ரத்த சரித்திரம் 1, 2ல் ராம்கோபால் வர்மா சறுக்கிய இடம்). 

அடிமைப் பெண் + மஹாபாரதம் சேர்ந்த கலவை தான் கதை. சொதப்பல் திரைக்கதையான ‘மித்’ படத்தை அபாரமான ’ மஹதீரா’ வாக எடுத்தவருக்கு, அடிமைப் பெண் படத்தை ‘பாகுபலியாக’ எடுப்பதில் பெரிய விஷயமில்லை. 

இரண்டாம் பாகம் வரும் வரை இது முழுமையான திரைக்கதை இல்லை என்பதால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை. 

படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் காட்சிகள். தூதுவன் ஒருவனை தேடும் இடத்தில் பாட்டு, பல இடங்கள் வசனங்கள் உதடு ஒட்டாமல் இருப்பது, கதாநாயகனை போர் வீரனாக காட்டுவதை விட சூப்பர் ஹீரோவாக காட்டும் முயற்சி... எல்லாம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படம் தான். இந்த படத்தை தெலுங்கில் பார்த்திருந்தால் அதிக பாதிப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பாகுபலி-2 தெலுங்கில் தான் பார்க்க வேண்டும்.

‘நான் ஈ’யில் சந்தானத்துக்கு இரண்டு காட்சிகள் வைத்து, ’தமிழ் படம்’ என்று நம்ப வைத்த்திருப்பார். அந்தளவுக்கு அடிப்படை வித்தியாசத்தை கூட இதில் கொடுக்கவில்லை. சத்யராஜ் இருப்பதால் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் இரு மொழி நடிகனாகி நீண்ட நாட்களாகிறது. 

’மஹதீரா’வில் ராம் சரண் சண்டையின் போது இருக்கும் வீரம் பிரபாஸிடம் இல்லை என்றோ தோன்றுகிறது. ராம்சரண் ‘மஹதீரா’வில் நூறு பேரை வீழ்த்தும் போது ஏற்படுத்திய பிரமிப்பு பிரபாஸ் ஆயிரம் பேர் வீழ்த்தும் போது வரவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் இரண்டு பாத்திரத்திற்கும் பிரபாஸ் வித்தியாசமில்லை. 

மிர்ச்சி, ரேபுல், பில்லா போன்ற படங்களில் நடித்தது போலவே சாதாரனமாகவே நடித்துவிட்டார். 2.5 வருடம் தனது கால்ஷிட் கொடுத்து, உடலை மெருக்கேற்றியளவிற்கு ராஜாக் காலத்துக்கு கதைக்கு பிரபாஸ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 



பாகுபலிக்கு சரியான தேர்வு ராம்சரண் தான். ஒரு வேளை தமிழ், தெலுங்கு (இரு மொழி) படமாக முன்பே திட்டமிட்டிருந்தால் ‘நாகர்ஜூனா’ அல்லது ’சூர்யா’ சரியான தேர்வு. இவர்களில் 2.5 வருட கால்ஷிட் கிடைப்பது சிரமம் என்பது வேறு விஷயம். தெலுங்கில் எடுத்து முடித்த பிறகு இரு மொழிப்படம் என்று வணிகத்திற்காக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. 

போர்க்களத்தில் இருக்கும் வில்லனின் நடிப்பும் அப்படி தான். ’மஹதீரா’வில் ஸ்ரீஹரி ராம்சரண்னை கொல்ல நூறு பேரை அனுப்புவார். ஒரு கட்டத்தில் ராம்சரண் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பார். தனது படை வீரர்கள் இறப்பதை விட ராம்சரணின் வீரத்தை ரசிப்பார். கண்ணிலும், குரலிலும் மனுஷன் பின்னியிருப்பார். இதில் முகத்தில் சாயம் பூசப்பட்ட எதிரி (சாய்குமார் என்ற நினைக்கிறேன்). ஒரே மாதிரியான முகபாவனை. தனது படை எதிரி படைகளை தும்சம் செய்யும் போது சரி, இரண்டு இளவரசர்கள் தன்னை தாக்க வரும் போது சரி ஒரே மாதிரியான முகப்பாவனை. கோபம், ஆவேசம், அச்சம் காட்ட வேண்டிய எதிரி பாத்திரத்தை முகத்தில் சாயம் பூசி நடிக்க வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். 

டெக்கினிக்கலான விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பற்றி தனி பதிவாக சொல்ல வேண்டும். இந்த படத்தை முழுமையாக நடித்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். 

அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மிரட்டுவார் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முன் ’ருத்ரமாதேவி’ வந்துவிட்டால், ரசிகர் அனுஷ்காவை அந்த படத்தோடு தான் ஒப்பிடுவார்கள். ராஜமௌலிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். 

எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் (நாவல்), பானிபட் யுத்தம், வீர சிவாஜி போன்ற கதைகளை திரைப்படமாக எடுக்கும் நம்பிக்கையை ‘பாகுபலி’ கொடுத்திருக்கிறது. பல சரித்திரக்கதைகளுக்கு திரைக்கதை அமைக்கப்படலாம். அதற்கான வணிகமும் இருக்கிறது என்பதை ராஜமௌலி சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

Tuesday, July 7, 2015

பெரியார் ரசிகன் – வசீகரனின் எதிர்வினை

அன்புக்குரிய குகனுக்கு வணக்கம்,

தங்களது “பெரியார் ரசிகன்” என்ற 160 பக்க புதின நூலை படித்து மகிழ்ந்தேன். இது தங்களின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தவித சிந்தனைத் தடுமாற்றமும் இன்றி கதையை சொல்லிக் கொண்டு போகும் கலை தங்களுக்கு கைவந்து இருக்கிறது. எழுத்தாளன், கவிஞன் ஆவதற்கென்றே தமிழ்மொழி மீது ‘ஈர்ப்பு’ கொண்டு குறுகிய காலத்தில் கற்று தேறி உள்ளீர்கள் என்பதை எண்ணி வியந்து பாராட்டுகிறேன்.


கதை நூலுக்கு “பெரியார் ரசிகன்” என்ற பெயர் பொருத்தமில்லை என்பது என் கருத்து. பெரியாரை நேசிக்கும் ஒரு மனிதரின் எண்ண மன ஓட்டத்தை கதையாகப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இதுவும் நல்ல உத்தி தான். அவனுடைய பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கி தந்தையை இழந்து மாமாவின் ஆதரவோடு வாழ்க்கைப் போராட்டத்தில் குதித்து நீந்திச் சென்று கொண்டிருக்கும் காட்சிகளில் ஆரம்ப அத்தியாயங்கள் கடந்து செல்கின்றன. ஒன்றாவது அத்தியாயத்துக்கு ‘முன்னதாக முன்னுரைப் போன்று சுழியம் அத்தியாயமாக ஒர் அத்தியாயத்தை இணைத்து இருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த அத்தியாயம் தேவையற்றது. நீக்கி இருக்கலாம்.

முதல் அத்தியாயத்தில் தன் கதையை கூறும் துவங்கிச் செல்கிறது. 1950 குடியரசு தின தொடக்க நாளன்று நாயகன் பிறப்பதாக அமைத்து இருப்பது அதைத்தொடர்ந்து காலக்கட்டத்தை நிறுவும் வகையில், அண்ணாவின் வெற்றி, மரணம், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆர் மறைவு என்று அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். போற்றுகிறேன். ‘இந்த உலகத்தில் இன்று நான் சிறைப்பட்டேன்’ என்று தன் பிறப்பைச் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்க வரி. 

ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்கி எதையோ சுவையாகச் சொல்லிக் கொண்டே போனாலும் கூட கதை எதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நெடுநேரம் யூகிக்கவே முடியவில்லை என்பது புதினத்தின் குறையாகவே தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாத்தையும் போரடிக்காமல் கொண்டு சென்ற காரணத்தினால் வாசகன் சலிப்படைவதில் தப்பிக்கிறான். ஒரு புதினத்துக்கு குறைந்த பட்ட கால்பங்கு நகர்வுக்கு பின்பாவது அதன் மைய இழை கோடிட்டுக் காட்டப்பட்டால், அதன் விறுவிறுப்பு மேலோங்கி நிற்கும். அந்த உத்தியை தாங்கள் பின்பற்றாத காரணத்தினால் சற்று உப்பு உறைப்பு குறைகிறது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது. 

ஒரு சராசரி மனிதனின் சமாளிப்புகளுடான சம்பவங்களே இந்தக் கதையின் மையம் என்று தாங்கள் நேரில் விளக்கம் தந்து இருந்தீர்கள். அதை ஏற்கிறேன். எந்த ஒரு மனிதனும் திரைப்பட நாயகன் மாதிரி எல்லா விசயங்களிலும் அசகாய சுரனாக இருந்து விட முடியாது என்ற கண்ணோட்டத்தில் படிக்கிற போது ஒரு வாசகன் நிச்சயம் இந்தப் புதினத்தைப் போற்றி ஓரிடத்தில் தருவான். 

ஆங்காங்கே பகுத்தறிவுக் கேள்விகளை, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பதிவு செய்து கொண்டு செல்கிறீர்கள். நாயகன் பெரியாரின் ரசிகனாக மாறுகிறான் என்பதை பதிவு செய்யப்படுவதற்குள்ளேயே பாதிக்கதை கடந்தோடிவிடுகிறது. துணிச்சலாக நிமிர்ந்து நின்று தாலிகட்டாமல் பகுத்தறிவு திருமணம் செய்து கொள்வதும், அதையே பின்பற்றி தன் மகனது திருமணத்தை நடத்தி வைப்பதுமாக சென்ற நாயகன், மகள் திருமணத்தில் ஒரு தந்தையாக மட்டும் நின்று தடுக்கிவிழுந்து விடுகிறார் என்பதையே உச்சக்காட்சியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். அதையே கதையில் போக்கில் அந்த உயர்குல சம்மந்தி சொல்கிற நிபந்தனைகளுக்கெல்லாம் சிறு திருத்தமும் கூட சொல்லாமல், எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏன் என்பது புரியவில்லை. தன் சொந்தக்கருத்தை பதிவு செய்யாமல் ஒரு பகுத்தறிவாளனால் விட்டுக் கொடுக்க முடியும் என்பதும் பகுத்தறிவுக் கேள்வி தான். 

மாண்டவர் மீண்டும் வந்து தனக்கே மகனாக மகளாக பிறப்பார் என்பது ஒரு பகுத்தறிவாளனின் நம்பிக்கையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ’பெரியார் ரசிகன்’ தானே அதை நம்பிக்கையுடன் கூறி ஏற்கிறார். அம்மாவே மகளாக வந்து பிறந்து இருப்பதாகச் கூறுகிறார். அது ஆன்மிக நம்பிக்கை என்பதே உண்மை. நிறைவு வரியில் கூட, “அப்பா எனக்கு மகனாகப் பிறப்பார்” என்று நாயகரின் மகள் கூறுவதாக நிறைவு பெறுவதும் பகுத்தறிவுக்குப் பொருந்துவது எப்படியோ தெரியவில்லை. ஆனால், தன் கொள்கைகளை தன் மகளுக்காக விட்டுக் கொடுத்து அடக்கி வைத்திருந்த ஆத்திரமே அவரது மரணமாக வெளிப்பட்டுள்ளது என்பது கதைக்கு சரியான நிறைவு தான். 

மாமா, தமிழாசிரியர், இஸ்லாமிய நண்பன், கிறிஸ்துவ நண்பன், பிராமண காதலி என்று பல்வேறு பாத்திரப் படைப்புகள் கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கின்றன. பல சூழல்களில் திறமையான வாதங்களால் கதையை அழகாக நகர்த்திச் செல்லும் உத்தி உங்களுக்கு கைவசம் வந்து இருக்கிறது. 

பெரியாரின் கொள்கைகளை பதிவு செய்து ஒரு புதினம் எழுதுவது என்பது ஒரு கடினமான செயல். அதை சுலபமாகவும், துணிச்சலாகவும் செய்து இருக்கின்றீர்கள். பாராட்டிப் போற்றுகிறேன். 

தங்களது அடுத்த புதினம் இதனினும் சுவை கூடி அமையும் என்பது திண்ணம். இந்நூல் பல பதிப்புகள் காண்ட்டும். 


நன்றி. 
வாழ வளர்க வெல்க, 

வசீகரன்
பொதிகை மின்னல், ஆசிரியர் 
30.6.2015




Monday, July 6, 2015

பாபநாசம் - அசலை மிஞ்சும் நகல் !!

நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலிடம் ஒரு ஹிட் படம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பலர் சொல்லும் அளவிற்கு கமலின் 'Comeback movie' என்று சொல்வதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

கமல் என்ற நடிகர் எப்போது விழுந்தார் ? அவர் விழுந்தால் தானே மீண்டு எழுவதற்கு. கமல் வெற்றி, தோல்வி எல்லாம் கடந்த ஒரு கலைஞன். படத்தின் வணிக வெற்றி வைத்து கமலை எடைப்போடுவது நம்முடைய பேதமைத்தனத்தை காட்டுகிறது. 

நேற்று வந்த நடிகர், இயக்குனர்களால் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கும் போது 50 வருடங்களாக சினிமாவுக்காக உழைத்தவருக்கு தெரியாதா வெற்றிப்படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பது ? அவர் நினைத்தால் ஒரு படத்தை ஹிட்டாக முடியும். தோல்வி அடையும் என்று தெரிந்து ஒரு படத்தை உருவாக்க முடியும். தமிழ் சினிமா அவரை வைத்து தான் பல சோதனை முயற்சிகள் செய்துகிறது. (சூப்பர் ஸ்டார்கள், தளபதிகள் எல்லாம் அரசியலில் வர சினிமாவில் சோதனை முயற்சி செய்பவர்கள்). 

இன்று சினிமாவில் பலர் கண்ட வெற்றிகள் அவர் காட்டிய பாதை என்பது நாம் மறக்க முடியவில்லை.



திரிஷ்யத்தை அப்படியே பாபநாசமாக எடுத்தாக சொல்கிறார்கள். திரைக்கதையில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். ஆனால், நாயகன் நடிப்பில் மாற்றம் இருக்கிறது, அதை யாரும் கவனிக்கவில்லை என்றே தெரிகிறது. 

மலையாளத்தில் மகள் பயத்தில் அழும் போது மோகன்லால் திடமாக நிற்பார். குடும்பத்திற்கு தைரியம் கொடுப்பார். இறுதிக் காட்சியில், இறந்த மகனின் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக்கொள்ளும் போது எந்த வித குற்றவுணர்ச்சியும் முகத்தில் இருக்காது. அதற்கு ஏற்றவாறு இறந்தவனின் அம்மாவின் பார்வையில் கோபம் கலந்த இயலாமை தெரியும். 

ஆனால், தமிழில் அப்படியில்லை. 

மகள் பயத்தில் அழும் போது கமல் கண்ணில் நீர்ப்பட ஆறுதல் கூறுவார். மகள் அழும்போது ஒரு தந்தையால் திடமாக இருக்க முடியாது என்பதை கமல் உணர்ந்து சரி செய்திருப்பார். அதேப் போல், இறந்த மகன் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ளும் போது குற்றவுணர்வில் கூனி குறுகி பேசுகிறார்.

நான்காவது படித்தவனை கொலையை மறைக்கும் புத்திசாலி தனத்தை சினிமா கொடுக்கும் என்ற லாஜிக்கை ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நடுத்தர வர்க்கத்தில் வந்தவன் இறந்தவர்களின் பெற்றோரை சந்தித்து, கொலையை ஏற்றுக் கொள்ளும் போது எப்படி எந்த வித குற்றவுணர்வு இல்லாமல் நிற்க முடியும் ? இந்த இடத்தில் கமலின் நடிப்பு திறன் வெளிப்படுகிறது. 

மலையாளத்தில் மோகன்லாலின் உடல் மொழி பல கொலைகள் மறைத்த அனுபவசாலியை போன்ற தோன்றத்தை கொடுக்கும். ஆனால், தமிழில் மனைவியை கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாலும் கமல் முகத்தில் கவலை தெரியும். எப்படி மீண்டு வரப் போகிறோம் என்கிற பயம் இருக்கும். 

முதல் முறையாக அசலை மிஞ்சும் அளவிற்கு ஒரு நகல் படத்தை தமிழ் சினிமா எடுத்திருக்கிறது. ‪

Thursday, July 2, 2015

காக்கா முட்டை - விமர்சனம்

Children of Heaven, White Ballon, Turtles Can fly போன்ற படங்களில் குழந்தைகள் பிரதானப் பாத்திரங்கள், அவர்களுடைய மனநிலை என்று இம்மி அளவு கூட பிசராமல் காட்சிப்படுத்தப்பட்ட உலகப்படங்கள். அப்படி ஒரு படத்தை முதல் முறையாக தமிழில் சந்தோஷத்தை தருகிறது. 

நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் ‘பிஸ்சா’ விழும்பு நிலையில் வாழும் சிறுவர்களுக்கு பெரிய கனவாக இருக்கிறது. அந்த கனவை அடைய அவர்கள் உழைப்பதும், அதை நோக்கி செல்வது தான் கதை. ஆனால், அதை அவர்கள் அடையும் போது சந்தோஷத்தில், “இதற்காகவா ஆசைப்பட்டோம்?” என்று அவர்களில் அலட்சிய சிரிப்பில் நமக்கு பல விஷயங்களை சொல்லித் தருகிறார்கள். 



விழும்பு நிலையில் இருக்கும் வாழ்க்கை என்பதால் வசைப்பாடும் அம்மாவை காட்டவில்லை. தன் குழந்தைகள் மீது பாசத்தை காட்டும் தாயை காட்டியிருக்கிறார். ’பிஸ்சா’ சாப்பிடுவது தான் தங்கள் லட்சியமாக இருந்தாலும் அதற்காக தன்மானத்தை இழந்து எச்சில் பிஸ்சாவை சாப்பிடவில்லை. திருடி வாங்கவும் நினைக்கவில்லை. பிஸ்சாவுக்கான பணத்தை உழைத்து சேர்க்கிறார்கள். பிஸ்சா கடைக்கு உள்ளே செல்ல ஆடை தடையாக இருக்கும் போது, புது ஆடை வாங்குவதற்காக உழைக்கிறார்கள். 

இரண்டு சிறுவர்களின் பாத்திரங்களை அதிங்க பிரசங்கி போல் பேசாமல் சிறுவர்களை சிறுவர்களாக காட்டியது மிகப் பெரிய வெற்றி. தமிழ் சினிமா நீண்ட நாட்களுக்கு பிறகு நேர்மறை பாத்திரங்களை பார்க்கிறேன். 

இரண்டு சிறுவர்கள் உழைக்கும் போது இங்கு சட்டம் குழந்தை தொழிலாளிகளுக்கு தான் தடைப் போடுகிறது. குழந்தை முதலாளிகளில்லை என்பதை காட்டுகிறது. 

விழும்பு நிலையில் வாழும் குழந்தைகள் வாழ்க்கை என்றதும் சோகத்தையும், கண்ணீரையும் காட்டாமல் அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டத்தை காட்டி வெகு ஜன ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். 

இதுப் போன்ற படங்களுக்கு மெதுவான செல்லும் திரைக்கதை மரபை மீறி ஸ்வாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, ரமேஷ் திலக்கின் பாத்திரம். ’பிஸ்சா’ சாப்பிடுவதற்காக சேர்த்த பணத்தை அம்மாவிடம் கொடுக்கும் போதே படத்தை முடித்திருக்கலாம். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தை படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துவது ரமேஷ் திலக் தான். 

இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குனர் மணிகண்டனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இந்தியாவின் மஜித் மஜினியாக வர வாழ்த்துவோம் !!

LinkWithin

Related Posts with Thumbnails