வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 23, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 1

“சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முறையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையென்றிருந்தனவென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர் தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கொண்டேன்”


– காந்திஜி ( 15.1.47)


**
ஆகஸ்ட் 28, 1945

மேயர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கலந்த முகத்தில் கல்கத்தா முனிசபல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். சில ஐரோப்பிய உறுப்பினர்களும் இருந்தனர்.

தேபேந்திராத் துக்கம் கலந்த குரலில், “சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டுக்காக போராடியவர். அவருடைய மரணம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்காக மௌனமாக அஞ்சலி செலுத்துவோம்”

யாரும் மேயர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் இறந்தவரையா ? தன்னையா ?

“ஒரு நிமிடம் போஸ் மரணத்திற்காக அஞ்சலி செலுத்துவோம்” என்று திரும்ப கூறினார்.

காதில் வாங்கிக் கொள்ளாதவாறு அனைவரும் இருந்தனர். யாரும் அசையவில்லை.

“என்ன ஆனது. நமக்காக போராடியவருக்கு மௌன அஞ்சலி ஏன் செலுத்த தயங்குகிறீர்கள் ?”

 “போஸ் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் யாரும் நம்பவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார்.”

”என் உத்தரவை மதிக்காதவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டாம்.”

அரங்கத்தில் மேயரை தவிர்த்து யாருமில்லை.

**



செப்டம்பர் 21, 1945

1942ல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், பல தலைவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அன்றைய தினத்தில் 1942ல் இருந்து 1945 வரை காலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. இறந்த தலைவர்களின் பட்டியலில் ’நேதாஜி’ பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு காங்கிரஸ் தலைவரான அபுல் கலாம் ஆசாத், “சுபாஷ்யின் மரண செய்தி எத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஏட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். செய்தி வெளியிட்டவர்கள் மீது நமக்கு சந்தேகம் இருப்பதாலும், அவருடைய மரணம் உறுதி செய்ய முடியாத நிலையில் இரங்கல் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

 இன்று வரை, இந்திய தேசிய காங்கிரஸ்யோ அல்லது வேறு அரசியல் கட்சியோ நேதாஜி மறைவிற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

**
ஜப்பான் ரென்கோலி என்ற ஆலயத்தில் போஸ் புகைப்படத்திற்கு புக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தினர். ஜப்பானிய இராணுவத்தினர் முன்னிலையில் மொஜிசுகி என்பவர் அவரது இறுதி சடங்கை நடத்தினார் என்று கூறப்பட்டது.

இந்த செய்தி ஜப்பானில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. பலர் கண்டித்தனர். இன்னும் போஸ் மரணச் செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவது யாரும் ஏற்ற்க் கொள்ள முடியாத ஒன்று.

இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. போஸ் அஸ்தியா ? இறுதி சடங்கா ? யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள் என்று கண்டித்தது.

**
”செய்தி பொய்யாக இருக்கலாம்; போய் உயிரோடு தலைமறைவாக இருக்கலாம். எந்த தருணத்திலும் அவர் வெளிவருவார் நம்புகிறேன்” என்று ஆரம்பத்தில் கூறி வந்த காந்திஜி, பிறகு நேதாஜி மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

அதேப் போல் நேதாஜி மரணத்தைப் பற்றி நேரு, “ஆரம்பத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பார் என்று தோன்றியது. நானும் அதை தான் நம்பினேன். விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியை வைத்து பார்க்கும் போது அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக என்பதை நாம் நம்ப வேண்டியதாக தான் இருக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்லை” என்றார்.

நேதாஜி இறந்ததாக யார் சொன்னது ? யார் யார் சாட்சியம் அளித்தனர் ? எதை வைத்து நேதாஜியின் மரணத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள் ? எதனால். அளித்த சாட்சியங்கள் மீது அவநம்பிக்கை.... விவரங்கள் அடுத்த பதிவில் !!


Tuesday, September 15, 2015

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 5 : இரண்டாம் கெய்சரின் மரணம்

1941. 

இரண்டாம் உலகப் போர் பரப்பரப்பாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். நாலாகப் பக்கமும் ஜெர்மனியின் நாஜி கொடி வெற்றிக் கரமாக பரந்துக் கொண்டிருந்த நேரம். ஹிட்லர் சாதாரண மனிதரில்லை. நிஜமாகவே ஜெர்மனியை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் குவிந்தது அல்லது அதற்கான அறிகுறியாவது தெரிந்துக் கொண்டு இருந்தது. 

ஹிட்லர் தளபதிகளுடன் யுத்தத்தை குறித்து ஆலோசனை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒருவன் ஹிட்லரின் அனுமதிப் பெற்று உள்ளே வந்தார்.

“ஹெயில் ஹிட்லர்” என்று சொன்னப்பிற்கு தனது கையில் இருக்கும் காகிதத்தை ஹிட்லரிடம் கொடுத்தார். அதை திறந்து படிக்கும் போது ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார். 

அந்த செய்தி யுத்தத்தை குறித்து எதாவது இருக்கிறதா என்று ஹிட்லரின் தளபதிகள் கேட்டனர். ஆனால், அவர் அமைதியாக இருந்தார். 

சிறிது நேரம் கழித்து மௌனமாக தனது தளபதிகள், “ஜெர்மனியின் மன்னர் இரண்டாம் கெய்சர் காலமானார்” என்றார். 

ஹிட்லரோடு இருந்த தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை விட வியப்பாக இருந்தது. அதற்கு காரணம்…. கெய்சரின் மரணச் செய்தி அல்ல… ஹிட்லரின் நடவடிக்கை. 



இறந்துப் போன கெய்சருக்கு 81 வயது இருக்கும். முதல் உலகப் போர் முடிந்ததும், ஜெர்மனி முழுவதுமாக சரணந்து, பொருளாதாரத்தில் அதாளப்பாதத்தில் தள்ளி விட்டுவிட்டு நெதர்லாந்தில் குடிபெயர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் ஜெர்மன் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் மாண்டுக் கொண்டு இருந்தனர். அந்த நிலையிலும், பிரான்ஸூக்கு முதல் உலகப்போரில் நஷ்ட ஈடுக் கொடுப்பதை பற்றி ஜெர்மனிக்கு ஆணை வந்துக் கொண்டு இருந்தது. 

தன்னால் ஜெர்மனி பெரிய நஷ்டத்தை சந்தித்தது நினைத்து கெய்சர் கவலைப்படவில்லை. நெதர்லாந்தில் சந்தோஷமாக இருந்தார். எதோ ஹில்டர் தலைத்தூக்கிய பிறகு ஜெர்மனி வேகுண்டு எழுந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. 

முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சர்வக் காலமும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஹிட்லர் கெய்சர் மீது மரியாதை வைத்திருந்தார். 

“அவர் மன்னராக இருக்கும் போது அவர் படையில் இராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். சரணாகதியை எந்த மன்னரும் விரும்ப மாட்டார். ஜெர்மனி சரணடைய வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது அவர் மனம் எவ்வளவு பாடுப்பட்டிருக்கும். பல தலைமுறைகளாக ஆண்டவர்களுக்கு மனம் துவண்டுப் போய்யிருக்கும்” என்று ஹிட்லர் அவருக்காக வருந்தினார்.

ஹிட்லருக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் கோபத்தில் பாதிக் கூட மன்னர் மீது இல்லை. இரக்கமும், அனுதாபம் மட்டுமே இருக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் தானே அவர் போரில் சரணடைய வேண்டியதாக இருந்தது. இல்லையென்றால், மன்னர் இறுதி வரைப் போராடிப்பார் என்று ஹிட்லரின் கருத்தாக இருந்தது. 

அது மட்டுமில்லாமல், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள். மன்னர் யுத்தத்தின் ஒவ்வொரு போக்கையும் தீர்மாணித்தவர்.

 என்ன தான் இருந்தாலும், அவர் ஜெர்மனியில் மன்னர். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் மன்னரின் குடும்பம் அரும்பாடுப்பட்டிருக்கிறது. அதற்கு ஜெர்மனியியும், நாஜி வீரர்கள் என்றும் கடமைப்ப்பட்டிருக்கிறது. 

ஜெர்மனியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், ஜெர்மனைப் பார்த்து பல நாடுகள் அஞ்சினாலும், பெரிய சர்வதிகாரியாக ஹிட்லர் திகழ்ந்தாலும்… அவரை தன் நாட்டின் மன்னராக தான் நினைத்தார். 

”இறந்த மன்னரின் கெய்சரின் உடலை ஜெர்மனுக்கு எடுத்து, தகுந்த அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்று ஹிட்லர் கூறினார். 

 ”யுத்த வேலைகள் ஆயிரம் இருக்கிறது. எவ்வளவு இராணுவப் படை அனுப்ப வேண்டும், எங்கு என்ன ஆயுதம் அனுப்ப வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும், தாக்குதல் பற்றி பேசியாக வேண்டும். இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு, சராசரி அரசியல்வாதிப் போல் ஓடிப்போன மன்னரை ஜெர்மனிக்கு எடுத்து வந்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரே. இது இப்போதைக்கு தேவையா. அவருக்காக ஹிட்லர் மரியாதை செலுத்தினாலும், அவர் மீது இருக்கும் விமர்சனம் மாறிவிடப் போகிறதா” என்பது ஹிட்லரின் தளபதிகள், வேலையாட்கள் நினைத்துக் கொண்டனர். ஒருவருக்கும் ஹிட்லர் முன் நின்று பேச தைரியமில்லை.

ஜெர்மனியில் முதல் உலகப் போரின் தோல்வியின் வஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர் என்று சொல்லி வந்த நிலையில், இரண்டாம் கெய்சர் மீது ஹிட்லருக்கு இருந்த மரியாதையை இதை காட்டுகிறது. 

ஆனால், இரண்டாம் கெய்சர் ஜெர்மனிக்கு செல்வதை விரும்பவில்லை. ஜெர்மன் துருப்புகள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எக்காரணத்திற்காகவும் தனது உடல் ஜெர்மனுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி அவர் இறந்தப் பிற்கு அவரது உடலை ஜெர்மனுக்கு அனுப்பப்பாமல் நெதர்லாந்திலேயே அடக்கம் செய்தனர். இருந்தாலும், நாஜிகள் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை செலுத்தினர். 

ஹிட்லர் ஜெர்மனியை பெரிய வல்லரசாக மாற்றப் போவதை பார்க்காமல் இரண்டாம் கெய்சர் இறந்துவிட்டார் என்ற வருத்ததை போக்க தான், அவரது உடலாவது ஜெர்மனியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதை அவர் விரும்பவில்லை என்ற வருத்தத்தை காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை இரண்டாம் உலக யுத்தம் அவரின் நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஒரு அரசியல் தலைவர் கண்ணீர் சிந்தி அழும் போது, நடிக்கத் தெரியாத மனிதர் என்று இணையதளம் புகழாரம் சூட்டினார்கள். அவர் நல்லவர் என்றால், பல வச்சரசு நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போது தனது பழைய மன்னருக்கு இறுதி மரியாதைக் கொடுக்க நினைப்பது அதை விட பெரிய உயர்ந்த குணம்.

உதவியது :

Inside the Third Reich - Albert Speer
ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம் - முகில்

 https://en.wikipedia.org/wiki/Wilhelm_II,_German_Emperor

Friday, September 4, 2015

It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate ( Pre-Review)

மிகவும் சர்ச்சைக்குரிய புத்தகம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளிவரப் போகிறது.

இது வரை அமெரிக்கர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்கிற பிரச்சாரத்தை உடைத்தெரிவதற்காக வெளிவரவிருக்கும் புத்தகம். 




“அமெரிக்க இஸ்லாமியர்களை அமெரிக்கா தனியாக பார்க்கவில்லை. எங்களில் ஒருவராக பார்க்கிறோம். அதனால், ஷரிய சட்டத்தை அமெரிக்காவில் அமல்ப்படுத்தவில்லை. ஷரிய சட்டம் கொண்டு வந்து இஸ்லாமியர்களை தனியாக பிரித்துக்காட்டவில்லை” என்பது போன்ற வாதத்தை முன் வைக்கிறார் எழுதாளர் Glenn Beck. 

அதே சமயம் பொய் #15, “America is safe from Sharia Law" என்ற அத்தியாயத்தையும் வைத்திருக்கிறார். 


ஆம், இந்த புத்தகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா இஸ்லாமைக் குறித்து முன் மொழியும் பதிமூன்று பொய்களை கூறுகிறார் எழுதாளர் Glenn Beck.


ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் மதத்தை முன் நிறுத்தி நடத்தும் தீவிரவாத தாக்குதலின் முகத்திரையை கிழிக்கும் புத்தகமாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவான புத்தகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான தீர்வை ஒரு அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். 

PROMO வுக்காக ஒரு நண்பரின் மேஜையில் இருந்த புத்தகம் என்பதால் முழுவதுமாக படிக்க முடிக்கவில்லை. கிடைத்த நேரத்தில் நான் வாசித்து புரிந்துக் கொண்டது. நூல் வெளியானதும், முழுவதுமாக வாசித்து எழுத வேண்டும். 

 **
It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate (Pre-order) 

இணையத்தில் முன் பதிவு செய்துக் கொள்ள... ( 12.5% discount + Free Shipping)

 Author Glenn beck Website - http://www.glennbeck.com/

Wednesday, September 2, 2015

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

”பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம்” என்ற சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கும் நிலையில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இத்தருணத்தில் பலர் மரண தண்டனைக்கு ஆதரவாகும், எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றுபவரின் குரல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி யாரும் யோசித்ததில்லை. 

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - 117 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றிய ஒருவனின் மனசாட்சி. 1940ல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டிருக்கிறார். அவரின் பெயர் ஜனார்த்தனன். இவர் ஒரு தமிழர். 



இந்த புத்தகம் புனைவு என்று சொல்லிக் கொண்டாலும், ஒரு பேட்டியை போலவே தோன்றுகிறது. உணர்ச்சியில்லாமல் கொலைச் செய்ய வேண்டும் என்ற மனக் குமுறலை பல இடங்களைப் பார்க்க முடிகிறது. 

”ஒருவனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டு பிறந்த மகளைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார். தன் மகளை தொட யோசிக்கிறார். தன்னால் தூக்கிலிடப்பட்ட மறுபிறவியாக இருக்குமா என்று அஞ்சுகிறார்.”

”அப்பாவிடம் இருந்து இந்த வேலை எடுத்துக் கொண்டார். முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றிய பிறகு அப்பா ஒவ்வொரு தண்டனையை நிறைவேற்றிய அமைதியாக இருந்ததை புரிந்துக் கொள்கிறார்.” 

பல நாடுகளில் மரணத் தண்டனையை நிறைவேற்றும் போது ஒருவனை மட்டும் சார்ந்து தண்டனையை நிறைவேற்றுவதில்லை. எப்படி ஆறு, ஏழுப் பேர் உதவிக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. தூப்பாக்கி சுட்டுக் கொல்வதாக இருந்தாலும், கல்லால் அடித்துக் கொல்வதாக இருந்தாலும், தூக்கிலிடுவதாக இருந்தாலும் உதவியாளர்களை பலர் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், ஒருவரின் மரணத்திற்காக பழியை பலர் பகிர்ந்துக் கொள்வதற்காக செய்கிறோம் என்று சொல்லும் இடம், பல உண்மைகளை விளங்குகிறது. 

மூன்று, நான்கு நாட்கள் அலுவலக வேலை என்றால் உடல் சோர்வு வரும். ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் மூன்று நாட்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருக்கிறார். உடல் சோர்வை விட மனசோர்வு தான் அதிகமாக இருக்கும். அந்த மனநிலையை எந்த வார்த்தையில் சொல்லிப் புரியவைப்பது. 

இந்த புத்தகத்தைப் பற்றி இன்னொரு தகவல் என்னவென்றால், ” புறம்போக்கு” படத்தில் விஜய்சேதுபதியின் பாத்திரம் இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டது தான்.

”புறம்போக்கு” படத்தில் வரும் ஒரு சில வசனங்கள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் சேதுபதி தூக்குப் போட யோசிக்கும் போது, ஒரு நீதிபதி கொடுக்கும் கொடுக்கும் விளக்கம் இந்த புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அச்சு அசல் அதே வாக்கியங்கள். 

மரண தண்டனை நிறைவேற்றியவன் மனதை சோர்வடைச் செய்யும், குற்றவுணர்வில் தள்ளும் என்ற உண்மையை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

மரண தண்டனை குறித்து ஆயிர விவாதங்கள் இருக்கிறது. ஒரு முறையாவது என்னுடன் இருந்து மரண தண்டனையை பாருங்கள், அப்போது புரியும் மரணம் கொடுக்கும் வலியை என்ற உண்மையை ஜனார்த்தனன் நமக்கு காட்டுகிறார். 

தூக்குதண்டனை நிறைவேற்றும் தமிழரின் வாழ்க்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, பின்பு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது தான் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. எனினும், இப்படி ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்த முருகவேலுக்கும் வெளியிட்ட எதிர் வெளியீடு சா.அனுஷுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Tuesday, September 1, 2015

தனி ஒருவன் - திரை விமர்சனம்

நண்பர்களை விட எதிரி தான் நமது உண்மையான ஆற்றலை வெளியே கொண்டு வருகிறான். சின்ன சின்ன க்ரைம் வேலை செய்பவர்களை அழிப்பதை விட அவர்களை எல்லாம் ஆட்டி வைக்கும் ஒரு பெரிய எதிரியை நாயகன் ஜெயம் ரவி தேடுகிறான். அப்படி மூன்று பேரை தேர்வு செய்து, அதில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது அந்த மூன்று பேர்களையும் ஆட்டி வைக்கும் கெட்டவனாக அறிமுகமாகிறார் அரவிந்த்சாமி.  
தனி ஒருவனான ‘ஜெயம்’ ரவி, தனி ஒருவனான சமூகத்தை ஆட்டி வைக்கும் அரவிந்த் சாமிக்கும் நடக்கும் ஆடு-புலி ஆட்டம் தான் படத்தின் கதை.



கதைப்படி அரவிந்த் சாமி தான் நாயகன். வழக்கமான நாயகனுக்கான அறிமுகம், அதிரடி, காதல் என்று பொருத்தி ‘ஜெயம்’ ரவியை நாயகனாக ஏற்க வேண்டியதாக இருக்கிறது. அரவிந்த் சாமி தன்னுடைய திட்டங்களை எப்படி அறிந்துக் கொள்கிறார், எப்படி முறியடிக்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் போது நன்றாகவே நடித்திருக்கிறார். மற்றபடி வழக்கமான நாயகனுரிய பழைய வேலை தான்.

நயந்தாரா ‘ஜெயம்’ ரவியை உத்வேகப்படுத்தும் விதமாக பேசும் வசனத்தை தவிர பெரிய வேலையில்லை. அவருக்கு ஒரு பாடல் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. 

இந்த வருடம் கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாக மாறும் வருடம் என்று நினைக்கிறேன். கார்த்திக், அருண் விஜய், ராணாவை தொடர்ந்து வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும் நாயகன் அரவிந்த்சாமி. சைகோ தனமாக, கொடூரமான, முட்டாள் தனமான வில்லன்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அழகான வில்லனாக வந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அமைதியான வில்லனை திரையில் பார்க்கிறோம். ’ஜெயம்’ ரவியை வைத்து தன்னை அழிக்க நினைப்பவர்களை எல்லாம் அழிக்கும் புத்திசாலி தனம் தொடங்கி இறுதிக் காட்சி வரை அமைதியான நடிப்பை ரசிக்க முடிகிறது.

இன்று நம் செய்திதாளில் படிக்கும் குற்றங்களுக்கு சொல்லப்படும் காரணங்களை உண்மை என்று நம்புகிறோம். உண்மையில் குற்றத்திற்கான பின்புலத்தை மறைக்கப்படுவதற்காகவே குற்றங்கள் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலரை கொலைச் செய்யும் போது செயின் திருட்டு, அறிவியல் பெண்ணை கொலைச் செய்யும் போது கற்பழிப்பு, போலீஸ்க்காரனை கொலைச் செய்யும் போது போதை மருந்து மயக்கம்…. என்று பல விஷயங்களை பார்க்க முடிகிறது. குற்றத்திற்கான காரணத்தை மாற்றிவிட்டால், குற்றவாளி தப்பிவிடுவான் என்பதை இன்றைய ஊடகம் நமக்கு சொல்கிறது.

முதல் முறையாக இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா, ரீ-மேக் செய்யாமல் சொந்தக்கதை, திரைக்கதை எடுத்து இயக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் வெற்றியும் பெற்றிருக்கிறார். (American Gangster, இன்னும் சில ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர் என்று சொல்லலாம்.) 

முதல் முறையாக ’ஜெயம்’ ரவி - ’ஜெயம்’ ராஜா கூட்டணியில் உருவான படம் தெலுங்கில் ரீ-மேக் செய்ய வாழ்த்துவோம்.

LinkWithin

Related Posts with Thumbnails