வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 14, 2010

சாப்பாட்டு பிரியன்



எனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது. எதை சாப்பிட்டாலும் மறு நிமிடமே பசி வந்துவிடும். 'உனக்கு யானையை விட பெரிய வயிறு' என்று அப்பா அடிக்கடி கேலி செய்வார். அம்மாவுக்கு என் மேல் அதிகம் பிரியம். எனக்கு பிடித்தது எல்லாம் சமைத்துக் கொடுப்பார். இல்லை என்றால் வாங்கி வந்து கொண்டுப்பார். நானும் ஏதாவது தின்றுக் கொண்டே இருப்பேன்.

இன்று எனக்கு பிறந்த நாள். பத்து வயதாகிறது. எனக்கு பிடித்ததை எல்லாம் அம்மா சமைத்தார். பொதுவாக ‘பிறந்த நாள் அன்று மாமிச உணவுகள் சாப்பிட கூடாது’ என்று அப்பா சொல்லுவார். ஆனால், அம்மா எனக்காக சிக்கன் பிரியானி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65 என்று எல்லா சிக்கன் வகைகளையும் சமைத்திருந்தார். மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்ததால், தெருவில் நடந்து செல்பவர்களுக்கு கூட வாசனை மூக்கை துழைக்கும். என் அம்மா கையில் சிக்கன் 65 ஆனவுடன் அந்த கோழி தன் ஜென்ம பயன் அடைந்திருப்பதை பார்த்தேன்.

என் அம்மா பார்க்க சுமாராக இருந்தாலும், சமையலுக்காகவே கல்யாணம் செய்துக் கொண்டதை அப்பா அடிக்கடி அம்மாவை மெச்சுவார்.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். பெயர் ராமு. என்னை விட மூன்று வயது சிறியவன். அப்பா செல்லம். அவன் எது செய்தாலும் அப்பா கோபப்பட மாட்டார். ஒரு முறை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்து போட்டு மாட்டிக் கொண்டான். அப்பாவே வியக்கும் அளவிற்கு கையெழுத்து அவ்வளவு கச்சிதமாக அப்பா கையெழுத்து போல் இருந்தது. ஆனால், ஆர்வ கோழாரில் கையெழுத்தை பென்சிலில் போட்டு மாட்டிக் கொண்டான். அப்பா அவனை அடிக்காமல் கண்டித்ததோடு விட்டுவிட்டார். இதையே நான் செய்திருந்தால் அவ்வளவு தான். அடி பின்னியெடுத்திருப்பார்.

நான் அம்மா செல்லம். அம்மா எது சமைத்தாலும் முதலில் அண்ணாவுக்கு தான் என்று தம்பி ராமுவிடம் சொல்லுவார். ராமுவின் வாலுதனம் அம்மாவிடம் பலிக்கவே பலிக்காது. எங்களுக்குள் ஒத்துவராத ஒரே விஷயம் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் எங்கள் இருவருக்குள் பாரத யுத்தமே வரும்.

போன வருடம் என் ஒன்பதாவது பிறந்த நாளில் அப்படி தான் எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது. எனக்காக அப்பா வாங்கி வந்த ஜிலேபியை தம்பி எடுத்துக் கொண்டான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தம்பி மேல் கோபம் கோபமாக வந்தது. அவனிடம் இருக்கும் ஜிலேபியை வாங்கி ஓடினேன். அவன் என்னை விடுவதாக இல்லை. என்னையே துறத்தி வந்தான். எப்படியோ சமாளித்து மாடி படியில் ஏறினேன். அவனும் வந்தான். அவனுக்கு தெரியாமல் மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் சென்றேன். அங்கு இருந்த பெட்டியில் ஒழிந்துக் கொண்டேன். ராமு ஏமாற்றத்துடன் ரூம் கதவை சாத்திவிட்டு சென்றான். காத்து வராமல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அப்பா, அம்மா வந்து பார்த்தார்கள். முதல் முறையாக அப்பா தம்பியை அடிப்பதை பார்த்தேன்.

இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு அப்பா என் பக்கம் சேர்ந்துக் கொண்டார். சிக்கன் வகைகள், ஜிலேபி, மைசூர் பாக் என்று சில இனிப்பு வகைகள் எனக்காக வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அம்மா முதலில் அண்ணாவுக்கு தான் என்று அம்மா தம்பியிடம் சொன்னார். தம்பி வாடிப் போயிருந்தான்.

சென்ற வருடம் என் பிறந்த நாளில் இருந்த சந்தோஷம் அம்மா, அப்பா முகத்தில் இல்லை. கண்ணீர் தழும்ப சமைத்ததையும், வாங்கி வந்ததையும் என் படத்திற்கு முன் வைத்து வணங்கினர். எனக்கு பிடித்தது எல்லாம் கண் முன் இருந்தும் என்னால் எதையும் தொடமுடியவில்லை.

எனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது.

2 comments:

நிலாமதி said...

ஒரு ஆன்மாவின் கதையா ? ஏன் இறந்து போனார்...........கதவை சாத்தியதாலா? ...சோகமாய் இருக்கிறது....
..உண்மையா? .

angel said...

so sad

LinkWithin

Related Posts with Thumbnails