Thursday, January 19, 2012

வீர விளையாட்டு !

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

**

இந்த மாதம் 'பொதிகை மின்னல்' (ஜனவரி 2012) மாத இதழுக்காக நான் எழுதிய ஒரு பக்க கதை.

0 comments:

Related Posts with Thumbnails