வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 21, 2010

கடன் நட்பை வளர்க்கும் !



இனி 'அவசரத்துக்கு யாருக்கும் பணம் தரக் கூடாது' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் சங்கர். கொடுத்த பணம் எப்போ வருமோ என்று பல நாள் காத்திருக்கனும். நம் அவசர தேவைக்கு நம் பணமே உதவ முடியாமல் போகிறது. பொறுத்து பொறுத்து பார்த்தான். சங்கரால் முடியவில்லை.

"டேய் ! எப்படா பணம் தருவ...!" நேரில் கார்த்திக்கிடம் பல முறை கேட்டுவிட்டான்.

"ஸாரி மச்சி ! போன வாரம் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... ஒரு மாசமா பயங்கர டைட்டுடா ",
“வண்டி லோன்”,
“மருந்து வாங்கனும்…!”

இப்படியே, மூன்று மாதங்ளாக கொடுத்த பணத்தை சங்கர் கேட்கும் போது கார்த்திக் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு இருந்தான். பையன் ஸ்கூல் பீஸ்காக பணம் வேண்டும் என்று சங்கரிடம் கேட்டான். படிப்பு விஷயம் என்பதால் சங்கரும் இரக்கப்பட்டு கொடுத்தான். வாங்கும் போது மனதில் இருந்த வேகம் கொடுக்கும் போது இல்லை.

கார்த்திக் சங்கர் பள்ளியில் படித்த நண்பன். ஒரு முறை தன் கல்லூரி நண்பன் ராஜேந்திரனை சந்திக்க சென்ற போது கார்த்திக்கை சந்தித்தான். கார்த்திக், ராஜேந்திரன் சிறுவயதில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்தவனாம். இப்போது கார்த்திக் ராஜேந்திரன் வீட்டு அருகில் இல்லை. ராஜேந்திரனிடம் கேட்டு வாங்கவும் முடியாது.

கார்த்திக்கை ஏதாவது கெட்ட வார்த்தை சொல்லி திட்டலாம் என்று தோன்றும். நட்பு முறிவதை பற்றி கவலையில்லை. கொடுத்த பணம் வராமல் போனால் என்ன செய்வது ? பணம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

தீபாவளி செலவு, வீட்டு செலவு என்று சங்கர் கையை கடிக்க தொடங்க வேறு வழி தெரியாமல் கார்த்திக் வீட்டுக்கே சென்று விட்டான். வழக்கம் போல் அவன் வீட்டில் இல்லை. மனைவி குழந்தையும் வெளியே சென்று இருந்தார்கள். கார்த்திக்கின் அம்மா மட்டும் வீட்டில் இருந்தார்.

சங்கரை பார்த்ததும், " யாரு தம்பி நீங்க..." என்றார். வெளியே இருந்து தன் பெயரை சொன்னான்.

"உள்ள வாப்பா ! உன்ன பத்தி கார்த்திக் நிறைய சொல்லியிருக்கான் " என்று சொல்லி உட்காரு என்று நாற்காலி போட்டார்.

" கார்த்திக் வேல விஷயமா வெளியே பொயிருக்கான். வர இரண்டு மணி நேரம் ஆகுமே !" என்றார். இதை வெளியே இருக்கும் போதே சொல்லியிருக்கலாம் என்று சங்கர் மனதில் நினைத்துக் கொண்டான். இக்கட்டான இந்த சமயத்தில் அவன் அம்மாவிடம் நிலைமையை சொல்லுவது தவறில்லை என்று தோன்றியது.

" கார்த்திக் என் கிட்ட பணம் வாங்குனான். உடனே தரேனு சொன்னான். இன்னும் தர. அவன் கிட்ட பணம் குடுக்க சொல்லுங்க" என்றான்.

" புரியுதுப்பா...! அவ அப்பாவுக்கு போன வாரம் உடம்பு சரியில்ல. எனக்கும் நெத்து முழுக்க காய்ச்சல். இப்படியே செலவுக்கு மேல் செலவு வருதா. ஒண்ணும் முடியல. இப்ப கூட பக்கத்து வீட்டுல ஆயிர் ரூபா கடன் வாங்கி தான் ஓட்டிட்டு இருக்கோம்" என்று ஒரு சோக பட கதையை சொன்னார்.

பொதுவாக சங்கருக்கு சோக படங்களே பிடிக்காது. நண்பர்களுடன் 'அங்காடி தெரு' படத்தை பாதியிலே திரும்பி வந்து விட்டான். அப்படிப்பட்டவனிடம் பணம் கேட்டதற்காக சோக கதை சொல்லுவது பிடிக்கவில்லை. கார்த்திக் அம்மா பேசும் போதே அவசர வேலை இருப்பதாக சொல்லி எழுந்து வெளியே வந்துவிட்டான்.

அடுத்தவர் கஷ்டத்திற்கு பணம் கொடுத்து, நாம் தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் சங்கர் மனதில் ஓடியது. வேறு வழியே இல்லை. கார்த்திக் வழி பின்பற்ற வேண்டியது தான். போன் எடுத்தான். பணம் கேட்போம் என்று நினைத்து துண்டித்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் ஒரு புறம் இருந்தது.

நல்ல வேலை கார்த்திக் எடுத்தான்.

" ஹலோ ! மச்சி வண்டி ஒடிட்டு இருக்கேன். அஞ்சு நிமிஷம் கலிச்சு கால் பண்ணட்டா..." என்று போன்னை துண்டிக்க பார்த்தான்.

பணம் கொடுக்கவே யோச்சிப்பவன் போன் போட்டு பேசவா போகிறான். போன் இப்போது எடுத்ததே பெரிய விஷயம். அவனை விட்டு விட கூடாது.

" ஒரு நிமிஷம் கார்த்திக் ! என் வண்டி ஆக்ஸிடண்ட் அயிடுச்சுடா..." என்றான் சங்கர்.

சற்று பற்றத்துடன், "எப்போ ஆச்சு ! உனக்கு எதுவும் அடிப்படலையே...!" கேட்டான்.

" எனக்கு ஒண்ணுமில்ல.... வண்டிக்கு தான். பெரிய செலவு வெச்சிடுச்சு..." சங்கர் பதிலளித்தான்.

எதிர்முனையில் கார்த்திக் பேசாமல் அமைதியாக இருந்தான். பிறகு, " சரிடா ! இந்த வாரம் வந்து உன்ன வீட்டுல பார்க்குறேன்" என்று சொல்லி போனை துண்டிப்பதிலே குறியாக இருந்தான். ஆனால், சங்கர் விடுவதாக இல்லை.

"ஒரு நிமிஷம் கார்த்திக் ! எனக்கு அவசரமா பணம் வேணும். உன்னால பத்தாயிரம் ரூபா அரேன்ஜ் பண்ணி தர முடியுமா !" என்றான்.

கார்த்திக்க்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. போனை வைத்துவிடலாமா என்று கூட யோசித்தான்.

" நானே எவ்வளவு கஷ்டப்படுறேன் உனக்கு நல்ல தெரியும். உன் கிட்ட கூட அஞ்சாயிரம் வாங்கியிருக்கேன் " என்று கூறினான்.

நல்ல வேலை பணம் வாங்கியதை ஞாபகம் வைத்திருக்கிறான் என்று சங்கருக்கு ஆறுதலாக இருந்தது.

" தெரியும்டா. அதான் அரேன்ஜ் பண்ணி தர முடியுமானு கேட்டேன்" என்று சாமர்த்தியமாக பேசினான்.

" அவ்வளவு என்னால எப்படிடா. உனக்கு தர வேண்டிய அஞ்சாயிரத்த எப்படியாவது ஏற்பாடு பண்ணி கொடுத்துடுறேன். மீதி யார்கிட்டையாவது கேட்டு சொல்லுறேன்." என்றான்.

சங்கர் வயிற்றில் பால் உற்றியது போல் இருந்தது. எப்படியோ வாங்கிய பணம் வந்தால் சரி. " ஒ.கே டா ! நாளைக்கு காலையில நானே வீட்டுக்கு வந்து வாங்கிக்குறேன்" என்றான்.

" இல்ல மச்சி ! நானே வீட்டுக்கு வந்து பணம் தரேன் " சங்கர் வீட்டுக்கு வருவதை கார்த்திக் தடுப்பது போல் பேசினான். ஆனால், பல முறை கார்த்திக் வீட்டுக்கு வந்து பணம் தருவதாக சொல்லி வராமல் இருந்திருக்கிறான்.

"சரி டா ! காலையில வந்து கொடு. இல்லனா நா உங்க வீட்டுக்கு சாய்காலம் வந்து வாங்கிக்குறேன். பணம் அவ்வளவு அர்ஜென்ட். தப்பா நினைச்சுக்காதே...!" என்றான் சங்கர்.

கார்த்திக்கும் சம்மதித்தான். இருந்தும், சொன்னப்படி வீட்டுக்கு வந்து பணம் தருவானா என்ற சந்தேகம் உள்ளூர சங்கருக்கு இருந்துக் கொண்டு தான் இருந்தது.

வீட்டு காலிங் பேல் ஒலித்தது.

கார்த்திக் தான். சொன்னப்படி சரியாக வாங்கிய ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டான். பல மாதங்களாக இப்போ அப்போ என்று சொல்லி தருவதாக சொன்ன பண்ணத்தை ஒரு பொய் சொல்லி வாங்கிவிட்ட சந்தோஷத்தில் சங்கர் இருந்தான்.

இனிமேல், கார்த்திக் எவ்வளவு கஷ்டம் என்று சொன்னாலும் பணதர கூடாது. கார்த்திக்கு மட்டுமல்ல யாருக்கும் பணம் தர கூடாது என்ற முடிவுக்கு வந்தான் சங்கர்.

இரண்டு மாதமானது. கார்த்திக்கிடம் இருந்து எந்த போன் கால் வருவதில்லை. வண்டியில் செல்லும் போது எதரே ராஜேந்திரனை பார்த்தான்.

" என்ன ராஜ் ! எப்படி இருக்க..? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு !"

நல்லமாக இருப்பதை கூறினான். இரண்டு பேரும் தங்கள் வீட்டு, வேலை நலங்களை விசாரித்து முடித்தனர். கொஞ்ச நேரம் கலித்து சங்கருக்கு கார்த்திக் ஞாபகம் வந்தது.

" கார்த்திக பார்த்தியா ! எப்படி இருக்கான் " என்று விசாரித்தான்.

" அவன பத்தி பேசாத கோபமா வருது. இரண்டு மாசம் முன்னாடி அம்மாவுக்கு மலேரியா சொல்லி அஞ்சாயிரம் வாங்கிட்டு போனான். எப்போ கேட்டாலும் இப்போ தரேன். அப்போ தரேன் சொல்லுறான். ஏதாவது சொல்லி திட்டிடுவேன். கொடுத்த பணம் வரனுமே. அதான் அவன் கூட பிரண்டா இருக்கேன்" என்று அவன் கார்த்திக்கிடம் மாட்டிய கதையை சொன்னான்.

கடன் நட்பை முறிக்கும் என்று யார் சொன்னது ? இங்கே, கடன் தான் நட்பை வளர்கிறது என்று சங்கர் மனதில் நினைத்துக் கொண்டான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails