வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 7, 2016

மரணம் ஒரு கொண்டாட்டம் !!!

நாம் யாருக்காக உழைக்கிறோமோ, நேசிக்கிறோமோ, வாழ்ந்துக் கொண்டிருக்கிறமோ அவர்கள் நம்மை பற்றி கவலைப்படாமல் சுயநலமாக நடந்துக் கொள்ளும் போது நமது வாழ்க்கை அர்த்தமற்றது போன்ற ஓர் உணர்வு தோன்றும். அப்போதெல்லாம் மரணத்தை குறித்த சிந்தனை ஏழும். அப்படி பல முறை நமது மரணத்தை குறித்த சிந்தனையை உங்களை சுற்றியிருப்பவர்கள் நினைவுப்படுத்துக் கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கடந்து எதோ ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையில் பயணிப்போம். 

அப்படிப்பட்ட ஒரு மனச்சாட்சியின் உரையாடல் தான் சம்பத்தின் ”இடைவெளி”. 



இந்த நாவலில் வரும் தினக்கரன் மரணத்தை கொண்டாடுபவன். மரணத்தை பற்றியே சிந்திப்பவன். மரணத்தோடு உரையாடுபவன். மரணத்தோடு ஸ்நேகமாக்கி கொள்கிறான். மரணம் என்றால் என்ன ? என்ற கேள்வி எழுப்பி அதற்கான விவாதத்தை முன் வைக்கிறான். 

நாவல் முழுக்க “சாவு” என்ற வார்த்தையில் நமது மரணத்தை நினைவுப்படுத்துகிறார். 

மரணத்தை குறித்த சிந்தனை எவ்வளவு அற்புதமானது. நம்மை சுற்றியிருப்பவர்களின் உண்மையான நிறத்தை காட்டுகிறது. அவர்களின் சுயநலத்தை புரியவைக்கிறது. வாழ்க்கையின் முடிவான ஒரு இடம் இருப்பதை தெளிவுப்படுத்துகிறது. இங்கு எதுவுமே நமக்கானது இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது. 

 வாழ்க்கை எந்த அளவுக்கு அற்புதமானதோ… மரணத்தை குறித்த சிந்தனையும் மிக அற்புதமானதாக இருக்கிறது. 

’நாம் மரணிக்க அஞ்சுகிறோம்’ என்றால் யாரோடு வாழ ஆசைப்படுகிறோம் என்ற கேள்வி எழுப்பிப்பாருங்கள். நாம் அன்பு காட்டிய மனைவி அல்லது காதலி, மகன் / மகள், பெற்றோர்கள், நண்பர்கள் அவர்களோடு வாழும் சந்தர்ப்பத்தை இழக்க மனம் ஏற்காமல் இருக்கலாம். 

உண்மையில், நம் மரணத்தை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் தான். நாம் அவர்களுக்கு தேவை. நம் அன்போ, பணமோ, சேவையோ அவர்களுக்கு தேவை இருக்கிறது. அதைக் குறித்த அச்சமே அவர்களின் சோகத்தை காரணமாக அமைகிறது. 

உண்மையில் நாம் மரணத்தை குறித்து அஞ்சுகிறோம் என்றால், நமக்காக எதையும் செய்யக் கூடிய நபர்கள் இருப்பவர்களை நினைத்து தான் கவலைப்பட வேண்டும். நமது பிறந்த நாளை கொண்டாடுபவர்கள், நமக்கு பிடித்ததை செய்பவர்கள், நமது அன்பை பெருவதை நோக்கமாக கொண்டவர்கள். நமது கவனத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பதை விரும்புபவர்கள். அப்படி ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால், சந்தோஷப்படுங்கள். நீங்கள் மரணத்தை குறித்து அஞ்சத் தேவையில்லை. 

இந்த உலகத்தில் நாம் இறக்கும் போது எதையும் இழக்கப்போவதில்லை. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை இழக்கிறார்கள். இந்த உலகில் பிறப்பு பிறகு போதுவானதாகவும், அடிப்படையாகவும் ஒன்று உண்டு என்றால் அது ’மரணம்’ தான். 

மரணத்திற்கு நம்மை தயார்ப்படுத்துக் கொண்டுவிட்டால், எந்த விதமாக பிரச்சனைகளையும் சமாளித்துவிட முடியும். எல்லா காரியங்களும் துசிப் போன்றதாக இருக்கும். எப்பேர்ப்பட்ட துரோகத்தை சகித்துக் கொள்ள முடியும். சுற்றத்தின் சுயநலத்தை மன்னிக்கும் பக்குவம் வரும். 

 உங்கள் மரணத்தை நீங்கள் தயார்ப்படுத்துக் கொண்டு சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை வாசிக்கவும். ஒர் அற்புதமான உணர்வு உங்களுக்காக காத்திருக்கிறது. 

குறிப்பு : சம்பத்தின் ”இடைவெளி” நாவல் அச்சுப்புத்தகமாக இல்லை. வாசிக்க விரும்புபவர்கள், கீழ் காணும் இணையதளத்தில் e-book ஐ download செய்துக் கொள்ளலாம். 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails