வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 13, 2014

சினிமா 1913 -2013 – 5. ஆவணப்படங்கள்

(Disclaimer : இது என்னுடைய தேடலின் பட்டியல். இன்னும் நல்ல ஆவணப்படங்கள் இருக்கிறது. விடுப்பட்டிருந்தால் அது என்னுடைய தேடலின் குறையே !)

குடும்ப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பது, திருமணத்தை வீடியோ படம் பிடிப்பது, குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று நம் வாழ்நாளில் பசுமையான நினைவுகளை பதிவு செய்து அன்றாட விஷயம். தங்கள் வாழும் நாட்களின் நினைவுகளை பதிவு செய்வது, பின்னாளில் அதுவே ஆவணமாக மாறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதராஸ் மகாணத்தில் வெள்ளையர்கள் எடுத்தப்படம், சென்னை எப்படி இருந்ததற்கு காட்டுகிறது. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நடத்தும் போது எடுத்தப்படம், அணு ஆயுதத்தின் விபரிதத்தை எதிர்காலத்திற்கு சொல்கிறது. ஈழத்தில் ஏழுபதுகளில் எடுக்கப்பட்ட ஒரு படம் யாழ்பாணம் பல்கலைக்கழகம் இருந்தத்தற்கு சாட்சியாக இருக்கிறது.

பண்டைய பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு ஆவணமாக இருந்திருக்கும் பலருக்கு தோன்றும். இன்று விடைத் தெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும். அப்படி ’சினிமா’ என்ற ஒளி பொழுதுப்போக்கு சாதனமாக மட்டுமில்லாமல் முந்தைய வரலாற்றை பதிவு செய்யவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல பாடமாகவும் பல ஆவணப்படங்கள் இருகின்றன.




வியாபார நோக்கம் இல்லாமல் முடிந்தவரை வரலாற்றை பதிவு செய்தும், எதிர்காலத்தில் கொண்டு செல்லவும் உதவியாக இருந்திருக்கிறது. திரைப்படங்களுக்கு இருக்கும் வணிகம் இதற்கு இல்லாததால் ஆவணப்படம் எடுப்பவர்கள் பல சோதனைகள் சந்திக்க வேண்டியது தான் இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஆவணப்படம் உண்மை நிகழ்வுகளை படம் எடுப்பது என்கிற ரீதியிலே எடுக்கப்பட்டது. டாக்டர் ஆர்.பி.பராஞ்சபே (இவர் இயக்குநர் சாய் பராஞ்சபேயின் தாத்தா) என்ற வழக்கறிஞருக்கு பம்பாய் சந்பாத்திக் கடற்கரையில் பொதுமக்கள் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை 1901-ஆம் ஆண்டு ஹரிசந்திர சகாரம் பட்வடேகர் என்பவர் படமாக எடுத்தார். நூறு வருடங்கள் பம்பாய் சந்பாத்திக் கடற்கரை, பொது மக்கள் கூட்டம் போன்ற விஷயங்களில் இந்தப் படம் ஆவணமாக இருக்கிறது.

இந்திய முதல் திரைப்படத்தை எடுத்த பால்கே, தான் படம் எடுப்பதை கேமிரா மூலம் பதிவு செய்திருக்கிறார். படக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது, பிலிம் ரோல் சரிப்பார்ப்பது என்று மௌனப்படத்தின் காலத்திலேயே பதிவு செய்திருக்கிறார். இதை பாடம் வகை சேர்ந்த படம் என்று சொல்லலாம். இன்று, தங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை படம் பிடித்து பட விளம்பரத்து பயன்படுத்துவதை பார்க்கிறோம். ஷங்கர் முதல் அறிமுகமாகும் இயக்குனர்கள் வரை இதை கையாள்கிறார்கள். சன் டி.வி, விஜய் டி.வியில் படப்பிடிப்பு பற்றி அனுபவங்களை பகிரும் போது பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னோடியாக பால்கே இருந்திருக்கிறார்.

1903 முதல் 1911 வரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் படங்களின் நிகழ்வுகள் சம்மந்தப்பட்டது தான். இந்திய அரசரின் திருமண விழாக் காட்சிகள், டெல்லி தர்பார் காட்சிகள், தசரா திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின், தினசரி வாழ்க்கை காட்டும் படங்களாக எடுக்கப்பட்டன.

தமிழ் சினிமாவில் ஆவணப்படங்களுக்கும், குறும்படங்களுக்கும் வரவேற்பு இல்லாதக் காலத்தில் அதற்காக பாடுப்பட்டவர் பீ.லெனின் அவர்கள். எடிட்டிங் துறையில் பிரபலம் என்றாலும், குறும்படங்கள் இயக்கியிருப்பது பலருக்கு தெரியாது. குத்துச்சண்டை வீரனைப் பற்றி அவர் இயக்கிய ‘நாக் அவுட்’ குறும்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

வருடம் தோறும் லெனின் அவர்களை கௌரவிப்பதற்காக தமிழ் ஸ்டூடியோ ‘லெனின் விருது’ என்று சிறந்த ஆவணப்பட இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆம்ஷன் குமார், ஆர்.ஆர்.சீனிவாசன், லீனா மணிமேகலை போன்றவர்கள் இந்த விருதை பெற்றுள்ளார்கள்.

தமிழ் ஆவணப்படங்கள் உலகளவில் எடுத்து சென்ற பெருமை சொர்ணவேல் அவர்களுக்கு இருக்கிறது. இவர் இயக்கிய தங்கம், வில், ஐ.என்.ஏ, கார்கில் போன்ற ஆவணப்படங்கள் மிக முக்கியமானவை.



முன்பெல்லாம் பல ஆவணப்படங்களை பொதிகைத் தொலைக்காட்சி மட்டும் பார்க்க முடிந்தது. சமீபத்தில் தந்தி டி.வியில் முருகன், சாந்தன், பெறளிவாணன் போன்றவர்களின் தூக்கி தண்டனையை ரத்து செய்வதாக எடுப்பப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் போட்டிருக்கிறார்கள். இப்படி ஆவணப்படத்திற்கு ஊடகங்களில் ஆதரவு கிடைப்பது மிக சொற்பமே !

தமிழில் எடுக்க வேண்டிய ஆவணப்படங்கள் இன்னும் நிறைய இருந்தாலும், அதை பயன்படுத்திக் கொள்ள இன்றைய ஊடகங்கள் தயாராக இல்லை. அதை பெரிதாக அங்கிகரிக்கவும் இல்லை என்பது தான் உண்மை. இன்று பல தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. தமிழில் வரும் ஆவணப்படங்களை அவர்கள் ஒளிப்பரப்பினால், ஆவணப்பட எடுப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

முன்பு 1967ல் ஆவணப்படத்திற்கு பிலிம் பேர் விருதுகள் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எதோ சில காரணங்களுக்காக 1998ல் அந்த விருது வழங்குவதை நிறுத்திவிட்டனர். தென்னிந்திய பிலிம் பேர் திரைப்பட விழாவிலும் ஆவணப்படத்திற்கு விருதுகள்கிடையாது.

உலகில் சினிமாவுக்காக விருதாக இருக்கும் ஆஸ்கர் விருதுகளில் குறும்படத்திற்கும், ஆவணப்படத்திற்கும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால், சினிமா வளர்க்கிறோம் என்ற பெயரில் திறமையை ஊக்கவிப்பதாக சொல்லி விருது வழங்குபவர்கள் ஆவணப்படங்களை கண்டுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

கதையே இல்லாமல் திரைப்படம் எடுக்கலாம். வெற்றி பெறலாம். ஆனால், எந்த வித தகவலும், திட்டமும் இல்லாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியாது.

படம் எடுக்கப் போகும் களனை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதைப் பற்றி படிக்க வேண்டும். அதை திரையில் எது பதிவு செய்ய வேண்டும், வேண்டாம் என்ற முடிவு எடுத்து அதற்கான திட்டம் இருக்க வேண்டும்.

வருங்காலத்திற்கு பாடமாகவும், பதிவாகவும் இருக்க போகும் ஆவணப்படத்திற்கு சந்தை விருதுகள் மட்டுமில்லாமல், ஊடகங்களின் ஆதரவு இருந்தால் இன்னும் விரைவாக முன்னேற முடியும்.

தமிழில் சில முக்கியமான ஆவணப்படங்கள்.
பீ – இயக்குனர் சு.அமுதன்,
நதியின் மரணாம் – சீனிவாசன்,
பேசாமொழி – செந்தமிழன்,
காவிரிப்படுகை : துரோகமும் துயரமும் - யாமினி,
தேவதைகள் – லீனா மணிமேகலை,
மூன்றாம் தியேட்டர் – அம்ஷன் குமார்

கட்டுரைக்கு உதவியது
சொல்லப்படாத சினிமா – ப,திருநாவுக்கரசு

நன்றி : நம் உரத்தசிந்தனை, எப்ரல் இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails