வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, August 9, 2014

சினிமா 1913 -2013 – 7. ஆரம்பக் கால கதாநாயகிகள்

எந்த தொழிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பணிப்புரிகிறார்கள். ஓய்வு எடுக்கும் வயது வரை ஆண்கள் வேலை செய்யலாம். ஆனால், பெண்கள் குடும்பம், சொந்த கடமைகள் என்று வலையத்திற்குள் சிக்கி கொள்வதால் தங்களுக்கு திறமையிருந்தும் அந்த துறையில் முழுமையாக பணி செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

மற்ற துறைகள் இப்படி இருக்கும் போது சினிமாத்துறை பற்றி சொல்ல வேண்டியதில்லை. புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு சினிமா விட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு சினிமாவில் தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்ற விரும்பம் இருந்தாலும், வயது காரணமாக ஓரம் கட்டப்படுவார்கள். எந்த தொழிற்துறை காட்டிலிலும் சினிமாவில் பெண்கள் பல சவால்களை சந்தித்துக் கொண்டு தான் சாதிக்கிறார்கள்.

சினிமாவில் வேண்டுமானால் பெண் உரிமைப் பற்றி பேசலாம். ஆனால், சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பெண் உரிமைப் பற்றி பேசினால் ஓதுக்கிவிடுவது இன்றைய சூழ்நிலை. இந்த காலத்திலேயே இப்படி இருக்கும் போது சினிமாவின் ஆரம்பக் காலத்தில் பெண்கள் நடிப்பது என்றாலே கேவலமாக பார்த்த காலத்தில் அவர்களின் நிலைமை அதைவிட பரிதாபம். அதையும் மீறி சாதித்த சில பெண்களை தான் இந்த வாரம் பார்க்க போகிறோம்.

டி.பி.ராஜலட்சுமி 

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி என்று இல்லாமல், முதல் பெண் இயக்குனர் என்ற புகழுக்குரியவர் டி.பி.ராஜலட்சுமி அம்மா அவர்கள். எட்டு வயதில் பாலிய திருமணத்தில் வரதட்சனை கொடுமையால் அம்மா வீட்டுக்கு வந்தார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு குடும்ப சுமையை ஏற்க ராஜலட்சுமி அம்மா சுமக்க வேண்டியதாக இருந்தது.



அப்போது சி.எஸ்.சாமண்ணா நாடக கம்பெனியில் நடிக்க சென்றார். ராஜலட்சுமி அம்மா பார்க்க அழகாகவும், நல்ல குரல் வளமும் இருந்ததால் மாதம் ரூ.30 சம்பளம் கிடைத்தது. (அன்றைய தேதியில் ஒரு சவரன் ரூ.13)

பல நாடகங்களில் நடிக்க பெண் கிடைக்காததால் ஆண்கள் (சிறுவர்கள்) பெண் வேடமிட்டு நடிப்பார்கள். ஆனால், டி.பி.ராஜலட்சுமி அம்மா முதல் முறையாக ‘அர்ஜூனன்’ வேடமிட்டு நடித்தார். முதல் ஆண் வேடமிட்ட பெண் நடிகையும் இவர் தான்.

டி.பி.ராஜலட்சுமி அம்மா தனது ஆபார திறமையால் பல நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கோவலன், உஷா சுந்தரி போன்ற மௌனப் படங்களில் நாயகியாக நடித்ததோடு இல்லாமல், முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தின் நாயகியாகவும் நடித்தார்.

பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இவருக்கு ’சினிமா ராணி’ என்ற பெயரும் சூட்டினர். டி.வி.சுந்தரம் என்பவரை மணந்து கடைசி வரை வசதியுடன் வாழ்ந்து இறந்தார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி 

“பவளக்கொடி” நாடகத்தை பார்த்த அழகப்ப செட்டியாரும், மானகிரி லேனாவும் தாங்கள் தயாரிக்கும் படத்திற்கு இவர்கள் தான் நாயகன், நாயகி என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தை இயக்கவிருந்த கே.சுப்பிரமணியனும் ’சரி’ என்று சொல்லிவிட்டார். அந்த நாடகத்தில் நாயகனாக நடித்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நாயகியாக நடித்தவர் எஸ்.டி.சுப்புலட்சுமி.



தனது கணீர் வசனத்தால் இந்த வாய்ப்பினைப் பெற்றார். ‘பவளக்கொடி’ படத்தில் நடித்த தியாகராஜ பாகவதருக்கு ரூ.1000 சம்பளம். இயக்குனர் கே.சுப்பிரமணியனுக்கு ரூ.700 தான். ஆனால், நாயகியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மாவுக்கு ரூ.2000 சம்பளம் வழங்கப்பட்டது.

கே.சுப்பிரமணியன் இயக்கிய மற்றொரு படமான ‘நவீன சாரங்கதரா” படத்திலும் நடித்தார். கே.சுப்பிரமணியன் முன்பே திருமணமானவர் என்றாலும், எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மா அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கே.பி.சுந்தரம்மாள்

இன்று வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம். மறக்க முடியாத குரல். நினைவில் நிற்கும் பாடல்கள். முதல் படமான “நந்தனார்” படத்தில் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்ற நடிகை என்ற புகழ். அனைத்திற்கும் சொந்தமானவர் கே.பி.சுந்தரம்மாள் அவர்கள்.

இளமையின் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் “வள்ளி திருமணம்”, “கோவலன்”, “ஞானசவுந்தரி” போன்ற பல நாடகங்கள் நடித்ததோடு இல்லாமல் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சுந்தரம்மாளுக்கு 25 வயது இருக்கும் போது கிட்டப்பா அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அதன் பின் துறவி போல் கடவுள் பாடல்கள் மட்டுமே பாடி வந்தார். ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கூட்டங்களில் மட்டும் கலந்துக் கொண்டார்.

அதன் பின் வந்த சினிமா வாய்ப்புகளிலும் பக்தி பாடல்கள் பாடும் பாத்திரங்களை மட்டும் ஏற்று நடித்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி

இன்னும் எத்தனை நூற்றாண்டு கொண்டாடினாலும் ”காற்றினிலே வரும் கீதம்” (’மீரா’ படம்) பாடலை யாராலும் மறக்க முடியாது. காலையில் அவரது சுப்ரபாதம் பாடல் கேட்டாமல் கண் விழிப்பவர்கள் குறைவு. அந்த அளவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் குரல் நம்மை வசியம் செய்து வைத்திருக்கிறது.

“சேவா சதனம்” படத்தில் அறிமுகமான எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள் தமிழ் சினிமா முக்கிய ஆளுமையாக இருக்கிறார். “சாவித்திரி” என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடப்பதற்கு ரூ.40,000 சம்பளமாகவும் பெற்று இருக்கிறார். திரைப்படங்களில் நடித்ததோடு இல்லாமல் பல ஆன்மிக பாடல்களை பாடியும் இருக்கிறார்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையரசி. நான் வெறும் பிரதம மந்திரி தான்” என்று நேரு புகழாராம் சூட்டி இருக்கிறார்.

தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்த சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது 88வது வயதில் இறந்தார்.



டி.ஆர்.ராஜகுமாரி

இன்று தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு என்று அளவுக் கோள் இல்லாமல் இருக்கிறது. சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழை வாங்குவதைக் கூட பெருமையாக நினைக்கும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால், தனது காந்தப் பார்வையாலே பலரது கனவுக் கன்னியாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள்.

“கச்சதேவயானி” என்ற படத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் ‘ஹரிதாஸ்’, சந்திரலேகா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி பாத்திரங்களில் ஏற்று நடித்து ’வில்லி’ பாத்திரத்திற்கு புது இலக்கணத்தை அமைத்திருக்கிறார்.

ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்ற பெயரும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவுக்கே சேரும்.

மேலும் பானுமதி, டி.கே.மதுரம், புஷ்பவல்லி போன்ற நாயகிகளை பட்டியல் போட்டு பேச தொடங்கினால் நீண்டு கொண்டே போகும்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஜூன் இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails