வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 6, 2016

ஜெ.ஜெ !!!!

டிசம்பர் 24, 1987

தமிழகமே இருண்டது போல் உணர்வு. மக்களைப் பற்றி சிந்திக்கிற தலைவர் மீண்டும் தமிழ்நாட்டில் பிறப்பார்களா என்ற கவலை. ”மக்கள், மக்கள்” என்று உழைத்தவரின் உடல் உயரற்று கிடப்பதை கண்ணீரும், கவலையாக பார்க்க மக்கள் அலையென திரண்டனர். இப்படி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததால் தான் இன்று வரை புரட்சி தலைவரை “மக்கள் திலகம்” என்றே அழைக்கப்படுகிறார். 

எம்.ஜி.ஆரை “நண்பர்” என்று கருணாநிதி அழைத்தாலும், அவரது எதிர்கட்சியாக செயல்படுபவர். அவரது உடலைப் பார்க்க சென்றால் கண்டிப்பாக சலசலப்பு ஏற்படும். அதனால், தகவல் பரவுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

மக்களுக்காக உழைத்து உழைத்து தனது உடலை கவனிக்காமல் விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு கூட்டம். பெரியார், அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு நிகரான கூட்டம். மக்களுக்காக உழைத்த மாசற்ற மாணிக்கத்தை பார்க்க இறுதி வாய்ப்பு. 

எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று பார்த்தார்கள். ராஜாஜி பவனில் தொடங்கிய வரிசை சாந்தி திரையரங்கம் வரை நீண்டது. எத்தனை மணி நேரம் வரிசையில் நின்றாவது பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி அழ வேண்டும் என்று மக்கள் துடித்தனர்.



திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர். 

மதியம் 1 மணி அளவில் எம்.ஜி.ஆரின் உடல் இராணுவ டிரக்கில் ஏற்றினர். அவரது இறுதி பயணத்தில் கடைசி வரை செல்ல விரும்பிய அவரை ஒரு சிலர் ஓரம் கட்ட நினைத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அவரை டிரக்கில் ஏற்ற நினைத்தும், அவர்கள் விடவில்லை.

நாகரிகமற்ற வளர்ந்தவர்களிடம் அந்தச் சமயத்தில் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி சொல்லித்தர முடியும். அந்த புனிதமான சூழ்நிலையில் மாசுப்படுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருந்தார். 

அவரை அரசியலில் தனியாளாகிவிட்டோம் என்ற மிதப்பில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது பலர் கொண்டாடினார்கள். புரட்சி தலைவருக்கு பிறகு தங்களை எதிர்க்கும் சக்தி இல்லை என்று நினைத்தார்கள். இனி, நம் ராஜ்ஜியம் என்று துள்ளி குதித்தார்கள். அ.தி.மு.க கட்சி தங்களுடையது தான் என்று நினைத்தனர். உண்மையில் அவரின் அரசியல் வாழ்க்கை அங்கு இருந்து தான் தொடங்கியது.

அதற்கு முன் எம்.ஜி.ஆர் அரசியல் தளபதியாக இருந்தவர், எம்.ஜி.ஆர் இருந்த தலைமை பொருப்பை எடுத்து நிரப்பியவர். நெருக்கமானவர்களுக்கு ‘அம்மு’. திரையுலகத்தினருக்கு ஜெ.ஜெயலலிதா. அனைவராலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவர் என்பவர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது என்று பலர் நினைத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் உதயமாகும் ஒரு வாய்ப்பு இருக்கும் சூழ்நிலை உருவானது. ஒரு சில அ.தி.மு.கவினர் தங்கள் கட்சியை விட்டு எதிர் முகாமுக்கு சென்றார்கள். அவர்களின் கனவை எல்லாம் கனவாய் வைத்து, நிஜத்தில் வெற்றிகள் குவித்தவர் ஜெ.ஜெயலலிதா.

”ஜெயலலிதா” என்ற ஆளுமை மிக எளிதாக தோன்றவில்லை. சுற்றியிருப்பவர்கள் உதாசினத்தில், துரோகத்தில் உருவான ஆளுமை. 

அவர் மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். திமிர்ப் பிடித்தவர். என்று எதிர்க்கட்சினர் விமர்சனம் செய்யலாம். அலுவலகத்தில் ஒரு பெண் அமைதியாக இருந்தாலே ஏறி மீதிக்கும் உலகம். அரசியலில் அமைதியாக இருந்தால், வளரவிட்டுவிடுவார்களா ? 

ஆண்களை கொண்டு, அவர்களிடம் தன்னை காத்துக்கொண்டு வளர வேண்டும் என்றால் கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகவும் அவசியம். அதை தான் ஜெ.ஜெயலலிதா செய்தார்.

ஜெ.ஜெயலலிதா அடுத்து கட்சி தலைவர் யார் என்ற பேச்சு வந்ததேயில்லை. அதைப்பற்றி பேச யாருக்கு துணிவுமில்லை. அவரை மீஞ்சி கட்சியில் ஒருவராலும் செயல்பட முடியாது. தனது கட்சியை கட்டுப்படாக நடத்தி வந்தார். புரட்சி தலைவர் மறைவுக்கு பிறகு கட்சியை சீராக நடத்தியவர் ஜெ.ஜெயலலிதா மட்டும் தான்.

ஆண்கள் சிங்கமாக நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்புலியாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார்! 

நம்முடைய காலத்தில் ஜெயலலிதாவை விட சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails