வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, November 19, 2014

சினிமா 1913 -2013 : 10. மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர்கள் (1930-50)

காலையில் ஒரு சிலர் பூங்காவில் வாய்விட்டு சிரித்து பயிற்சி எடுப்பதை பார்த்து வருகிறோம். பொருள் தேடும் வாழ்க்கையில் பலர் முகத்தில் சிரிப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்களே மறந்துவிட்டார்கள். உடம்பில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயல்பாய் இயங்க இப்போது செய்ற்கை சிரிப்பு தேவைப்படுகிறது.

சிரிப்பு. நமக்கும், மிருகத்துக்கும் உள்ள வேறு. 

என்.எஸ்.கிருஷ்ணன் 

’சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் சொல்லும் முன்பே, மக்களுக்கு புரிய வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள். 

1935ல் மேனகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1936ல் ‘சதிலீலாவதி’, ‘வசந்தசேனா’ போன்ற படங்களில் நடிக்கும்போதே மதுரம் அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். 

கலைவாணர் முற்போக்கு சிந்தனைகள் உடையவர். தனது படங்களிலும் தனது கருத்துக்களை நகைச்சுவையாக சொல்லி மக்களை சிரிக்க வைத்தவர். இன்று பல நகைச்சுவை நடிகர் கையாலும் கிண்டலும், கேலியும் கலைவாணர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்கிறார்கள்.

‘அம்பிகாபதி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் முதன் முதலாக நடித்தார். அன்று தொடங்கிய அவர்களது நட்பு லட்சுமிகாந்தன் வழக்கு வரை தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டு பெரும் கலைஞர்களை வாழ்க்கையிலும், நடிப்புலகத்திலும் புயலை வீசியது. 

வழக்கில் இருந்து மீண்டு வந்த கலைவாணர் நடிப்போடு படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். 

1957ல் தனது 49 வயதில் இறந்தார். 



டி.ஏ.மதுரம் 

என்.எஸ்.கே – டி.கே.மதுரம் அவர்களைப் போன்ற கலை தம்பதிகள் என்று சொல்லுவதை விட எங்கும் காண முடியாத தம்பதிகள் என்று சொல்லலாம். கணவன் – மனைவி சேர்ந்து நூறுக்கு மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

கணவரின் எல்லா சுகத் துக்கத்திலும் பங்கு கொண்டு இருக்கிறார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது அவரது நாடக சபாவை திறம்பட நிறுவாகம் செய்தார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது ‘பைத்தியக்காரன்’ படத்தை தயாரித்தார். 

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட “சந்திரலேகா” படத்தில் என்.எஸ்.லே - டி.ஏ.மதுரம் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. கலைவாணர் மறைவுக்கு பிறகு ஒரு சிலப்படங்கள் நடித்தார். மே 23, 1974 காலாமானார். 

காளி என். ரத்தினம் 

கலைவாணர் காலத்தில் புகழ்ப் பெற்ற இன்னொரு நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள். நடிப்பு, பேச்சு, பாட்டு பாடுவது என்று தனி திறமை வாய்ந்த அவரை ‘ரத்தின வாத்தியார்’ என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். 

1936ல் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உரிமையாளரான எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளையின் மேற்பார்வையில் உருவான ‘பதிபக்தி’ படத்தின் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு இரண்டு வேடங்கள் !!! 

அதைத் தொடர்ந்து சந்திரகாந்தா, ராஜமோஹன், பஞ்சாப் கேசரி, மாத்ருபூமி, போலி பஞ்சாலி, போன்ற பல படங்களில் நடித்தார். 

சந்திரகாந்தா படத்தில் “சுவாமிகளே ! யோகாப்பியாசம் செய்யலாமா?” என்று போலி சாமியார்களை சாடும்படி இரட்டை அர்த்த வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால், கலைவாணரைப் போல் பகுத்தறிவு, தீண்டாமை, அடிமைத் தனம் சமுக சிந்தனைகள் இவர் தனது நகைச்சுவையில் சேர்த்ததில்லை. தனது நகைச்சுவையில் கிராமிய பாணியை அதிகம் கலந்து நடித்திருக்கிறார்.


டி.ஆர்.ராமசந்திரன் 

 நாடகங்கள் நடித்தவாரே சினிமாவில் நடித்து புகழ்ப் பெற்ற நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமசந்திரன் அவர்கள். 

ஏவி.எம். செட்டியார் இயக்கிய முதல் படமான ’சபாபதி’ படத்தில் அறிமுகமானார். சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரனும், வேலைக்காரனாக காளி என்.ரத்தினமும் நடித்தக் காட்சிகள் அந்தக் காலத்தில் புகழ் பெற்றது. 

‘ஸ்ரீ வள்ளி’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். ‘வாழ்க்கை’ படம் இவரை நாயகன் அந்தஸ்த்தைப் பெற்று தந்தது. ஒரு பக்கம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வித்யாபதி போன்ற நாயகனாகவும், கள்வனின் காதலி, வண்ணக்கிளி போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடிப்பார். 

அஞ்சலி தேவி தயாரித்த ‘அடுத்த வீட்டு பெண்’ படத்தில் இவரும், தங்கவேலு செய்த நகைச்சுவை காட்சி இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் வடிவத்தில் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கே.சாரங்கபாணி 

அந்த காலத்தில் நகைச்சுவை கலந்த அப்பா பாத்திரத்தில் பொருந்தக் கூடிய நடிகர் கே.சாரங்கபாணி அவர்கள். எல்லா இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் மரியாதையுடன் பழகக் கூடிய நடிகர் என்று பெயர் எடுத்தவர்.

’வேதாள உலகம்’ படத்தில் தன்னை கொல்ல வந்த ராட்சர்களை வயிறு முழுக்க சாப்பிட வைப்பார். ’மிஸ்சியம்மா’ படத்தில் ஒவ்வொரு விஷயத்தை சொல்லுவதற்கு பணத்தை பெறுவதும் பல நகைச்சுவை நடிப்பில் பல பரிமானங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 துகாரம் படத்தில் தொடங்கி பந்துலுவின் ‘தங்கமலை ரகசியம்’, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘மோகனசுந்தரம், சிவாஜியின் ‘தெய்வப்பிறவி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, நவம்பர், இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails