வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, November 25, 2015

இரண்டு கவிதை : மழை, புகைப்படம்

மழை
----------

வானம் மழை சிந்தினால்
விவசாயி கண்ணீர் சிந்த தேவையில்லை !

வீட்டுக்கு மழைநீர் சேகரித்தால்
குடம் ஏந்தி சாலையில் நிற்க தேவையில்லை !

கடலுக்குள் கலக்கும் முன் மழைநீரை சேமித்தால்
 தண்ணீருக்கு அண்டை மாநிலத்தை நம்ப வேண்டியதில்லை !

பண சேமிப்பு எதிர்காலத்திற்கு நல்லது
மழைநீர் சேமிப்பு பூமிக்கு நல்லது !!

மழை
நம் வாழ்க்கைக்கு தேவையானது மட்டுமல்ல
நமக்கு சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை !

**

புகைப்படம் 
------------------- 

நரைத்த முடி
தோல்வியடைந்த கனவுகள்.

நிகழ்கால வலி
இறந்தக்கால நினைவுகள்.

நட்பின் கொண்டாட்டம்
நட்பின் சுயநலம்.

ஆறு வித்தியாசங்களை
கடந்து செல்கிறது
கல்லூரிக்கால புகைப்படத்திற்கும்
தற்போதிய புகைப்படத்திற்கும் !!

Tuesday, November 3, 2015

குற்றம் கடிதல் - திரை விமர்சனம்

எத்தனையோ நல்ல படங்கள் வந்ததும் தெரியாமல் தோல்வியடைந்து பெட்டிக்கு போன பிறகு ’தேசிய விருது’ என்று அறிவிப்பு வரும். படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சென்ற வருடம் வரை ‘தேசிய விருது’என்பது தோல்வியடைந்த படங்களுக்கு ஊக்க மருந்தாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த வருடம் தான் ‘தேசிய விருது’ ஊக்க மருந்தாக இருந்ததோடு இல்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. 

’காக்கமுட்டை’ படத்தை அடுத்து தேசிய விருதால் அதிக எதிர்ப்பார்ப்போடு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்றப்படம் ’குற்றம் கடிதல்’. 



இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்விமுறையின் அவசியத்தை பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் படம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

ஆறாம் வகுப்பு மாணவன் செழியன் சக மாணவியை பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக நினைத்து முத்தம் கொடுக்கிறான். அந்த மாணவனை ஆசிரியர் மெர்லின் கேள்விக் கேட்க, அதற்கு ‘உங்கள் பிறந்தநாளுக்கும் முத்தம் கொடுப்பேன்’ என்று சொல்ல, ஆசிரியர் மெர்லின் கோபத்தில் அடிக்கிறார். அதிர்ச்சியில் மயங்கி விழும் மாணவன் செழியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறான். 

ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியில் இருக்கும் ஆசிரியர் மெர்லினை காப்பாற்ற அவளது கணவன் மணி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறான். இன்னொரு பக்கம் அடித்த ஆசிரியர் தண்டிக்க வேண்டும் என்று செழியனின் மாமா மெர்லினை தேடுகிறார். இதற்கிடையில் செழியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பள்ளி முதல்வர் போராடுகிறார். மகனுக்கு இப்படியானதில் அதிர்ச்சியில் உறைந்து போய் செழியனின் அம்மா இருக்கிறார். 

அவரவர் தங்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, ஊடகங்கள் இந்த பிரச்சனையை வைத்து விவாத நிகழ்ச்சி, கருத்துக் கேட்பது, என்று ஒளிப்பரப்புகிறார்கள். தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்யை ஏற்றிக் கொள்கிறார்கள். 

மருந்துக்கூட தெரிந்த நடிகரோ, நடிகையோ இந்த படத்தில் இல்லை. பிரபலங்கள் நடிக்காதப்படம். அதுவே இந்த படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாப்பாத்திரமாகவே நமக்கு தெரிகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மை நமக்கு மிக எளியக்காட்சிகளில் இயக்குனர் பிரம்மா உணர்த்தியிருக்கிறார். 

’காக்கமுட்டை’ அடுத்து தமிழ் சினிமா ‘உலக சினிமா’ நோக்கி செல்கிறது என்பதை ’குற்றம் கடிதல்’ நிருப்பித்திருக்கிறது.

Thursday, October 8, 2015

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

சமிபத்தில் ஒரு நண்பரிடம் ஹிட்லரைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, ‘ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்று சொல்வதற்கு பதிலாக, ஒரு கிறித்துவன் யூதர்களை கொன்றதாக ஏன் யாரும் சொல்லவதில்லை தெரியுமா ?” என்று கேட்டார். யூத இனப்படுகொலைக்கு வாட்டிகன் போப்பின் ஆதரவு இருந்தது என்றார். 

அந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வாட்டிகன் மௌனம் காத்தது என்று சொல்லலாம். ஹிட்லரை எதிர்த்து கருத்துக் கூறினாலோ கண்டனம் தெரிவித்தாலோ, இத்தாலி இராணுவத்தை எதிர்க் கொள்ள வேண்டிய அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கூறினேன். பிறகு, Amen ( 2002ல் ஜெர்மன் மொழிப்படம்) படத்தில் வந்த சில காட்சிகள், வசனங்கள் பற்றி பேசினோம். எங்கள் விவாதம் தொடர்ந்துக் கொண்டே போனது. 

இன்றும், ’ஹிட்லரை’ பற்றி பேச தொடங்கினால் மர்மங்கள், விவாதங்கள், கதைகள் தொடர்ந்துக் கொண்டே போகும். வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், வரலாற்று பிரியர்களுக்கு ஈர்க்கு காந்தசக்தியாகவே ’ஹிட்லர்’ இருக்கிறார். 



அப்படிப்பட்ட ஹிட்லரைக் குறித்து சமிபத்தில் வாசித்த புத்தகம் முகில் எழுதிய ’ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்’ 

பொதுவாக, ஹிட்லரை குறித்த வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் அவருடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் இருப்பதில்லை. 1934க்கு பின்பு நடந்த பல விஷயங்கள் தான் தமிழில் வாசிக்க கிடைக்கிறது. 

ஆனால், முகில் ஆரம்பக்கட்ட வாழ்க்கையில் இருந்து மிக விரிவாக எழுதியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தமிழில் ஹிட்லரை குறித்து இவ்வளவு விரிவாக, ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் வந்ததில்லை என்று சொல்லலாம். 

ஹிட்லர் நல்லவர், கெட்டவர் என்ற விவாதத்தை தள்ளி வைத்துப் பார்த்தால், அவர் ஒரு ‘Interesting Personality’. ஹிட்லரைக் குறித்து பல சுவையான இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்டியிருக்கிறார். 

தமிழ் புத்தகச்சந்தையில் ஹிட்லருக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பதை இந்த புத்தகம் காட்டியிருக்கிறது. 

வாழ்த்துகள் முகில் !!

**
ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்
- முகில்
- Rs.333


Tuesday, October 6, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 2

நேரு நேதாஜியின் மரணத்தை நம்புகிறார் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் இந்தியா நாட்டின் பிரதமர். அவர் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்புகிறார் என்றால் ‘நேதாஜி இறந்ததை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று எடுத்துக் கொள்ளப்படும். 

ஆனால், ”நேருவின் கருத்தை இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா” என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப்பாய் படேலிடம் கேள்விகள் கேட்டப்பட்டது.

”போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இந்திய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது ?” என்று கேட்டனர். 

”போஸ் பற்றி கிடைக்கும் ஆதாரங்கள் பல வித சந்தேகத்தை எழுப்புவதால், அவரைக் குறித்து எந்த விதக் கருத்து கூற முடியாத நிலைமையில் இந்திய அரசு இருக்கிறது. ” என்றார். 

“அவரைப் பற்றி ஏதாவது விசாரணை நடத்தப்படுமா” என்று கேட்டனர்.

“இல்லை” என்றார்.

(இன்றைய பா.ஜ.கவில் ஒருவர் கருத்துக் கூறி சர்ச்சையை கிளப்பினால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று சொல்வது போல் அன்றைய பட்டேலில் பேட்டி இருந்தது.) 


காந்திஜி, நேரு இருவரும் போஸின் மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருக்காக வெள்ளையரை எதிர்த்து யுத்தமிட்ட ஐ.என்.ஏ வீரர்கள் இதை நம்பவில்லை. 

'அவர் உயிருடன் இருக்கிறார்’ என்றே நம்பினர். அவர் மீண்டும் வருவார். எங்கள் போராட்டத்திற்கு அடுத்த திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்று கூறினர். 

ஒவ்வொரு நாளிதழும் நேதாஜி மரணத்தைப் பற்றி ஒவ்வொரு விதமாக வெளியிட்டது. “நேதாஜி மரணச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. இதோ அந்த விபத்தில் தப்பிய ஜப்பானிய வீரரின் பேட்டி என்று United Press of India செய்தியை வெளியிட்டனர். 

”நேதாஜிவி உடலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி தாய்பே என்ற பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்று சென் பீ ஷா என்பவர் சீனாவில் இருந்து வரும் Central New Agency என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். சென் பீ ஷா ஒரு மருத்துவ செவிலியர். 



நேதாஜி மரணத்தை பத்திரிக்கையை உறுதி செய்துக் கொண்டு வெளியிட Hindustan Times story பத்திரிக்கை ’’Netaji is Not dead என்ற தலைப்பில் நேதாஜி சென்ற விமானம் வெடிக்கவில்லை. அதே விமானம் திட்டப்படி ஹாங்காங் வந்திறங்கியது. விமானம் வெடித்ததற்கான எந்த ஆதாரம் இல்லை என்று கூறியது. 
*

போஸ் சென்ற விமானத்தில் அவருடன் சென்றவர் கர்னல் ஹபிபூர் ரஹ்மான். விமான விபத்து நடந்ததாக சொல்லப்படும் பயணத்தில் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் காயம் ஏற்ப்பட்டிருக்கிறது. அவருடன் பயணம் செய்ததால் இவருடைய சாட்சியம் மிகவும் முக்கியம். 

“போஸ் இறந்தது உண்மை தான். அந்த விமான விபத்தில் நான் சில காயங்களோடு தப்பித்தேன். பலத்தக் காயங்களோடு போஸ்யை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு தான் அவர் உயிர் பிரிந்தது.” என்று கூறினார். ( இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் பாகிஸ்தான் குடியேறினார்.) 

ஆனால், அவரின் சக ஐ.என்.ஏ வீரர்களான தர், சந்திரா குமார் போன்றவர்கள் போஸ் கர்னல் ஹபிபூர் ரஹ்மானை அப்படி பொய்ச் சொல்லச் சொல்லியிருப்பார் என்று கூறினர். அப்போது தான் போஸ்ஸால் சுதந்திரமாக செயல்ப்பட முடியும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. 

** 
போஸ் நிஜமாகவே தப்பித்திருந்தால் ஜப்பானின் உதவியில்லாமல் நடந்திருக்காது. பல ஆயிரம் கதைகள் சொன்னாலும், போஸின் போர் நடவடிக்கை, திட்டம் அனைத்தும் ஜப்பானுக்கு தெரிந்திருக்கும். போஸின் அனைத்து யுத்த நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வழங்குகிறோம் என்று ஜப்பான் உறுதி அளித்திருந்தது. 

ஆதலால், போஸ் தன் திட்டத்தை ஜப்பானுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார். ஆனால், இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஜப்பான் தனது யுத்த ஆவணங்களை அனைத்தும் அழித்திருக்கிறது. செம்படைகளிடம் இருந்து யுத்தக் குற்றவாளி பட்டியலில் தங்கள் இராணுவ தளபதிகளையும், கூட்டணியில் இருப்பவர்களையும் காப்பாற்ற இப்படி செய்ததாக கருதப்படுகிறது. ஒரு வேளை தப்பித்தது உண்மையென்றால், போஸ் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்திருப்பார்கள் என்ற நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு வேளை போஸ் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் அதை ஆய்வு செய்து வெளியிட ஜப்பானிடம் கொரிக்கை வைப்பது இந்தியாவின் கடமையாகும். இந்தியாவிடம் இருக்கும் ஆவணங்களே முழுமையாக வெளியிடாதப் போது மற்ற நாடுகளுடன் கொரிக்கை வைக்கமாட்டார்கள் என்பது நிதர்சண உண்மை. 

** 
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தைப் போல நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை கூறினர். ஆளுக்கு ஒரு கதை, ஆளுக்கு ஒரு ஆதாரத்தை கூறினர். எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்த்து கூற முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அதே சமயம் எதையும் நிராகரிக்க முடியவில்லை. 

போஸ் இறந்தாரா ? இல்லையா ? மாறு வேடத்தில் வாழ்ந்தாரா ? பல யூகங்கள், கதைகள், கருத்துக்கள் என்று உலவிக் கொண்டு இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. 

எல்லாவற்றிருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஒரே வழி ! போஸ் மரணத்தை குறித்து விசாரிக்க வேண்டும் !! 

கட்டுரைக்கு உதவியது :

Wednesday, September 23, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 1

“சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முறையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையென்றிருந்தனவென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர் தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கொண்டேன்”


– காந்திஜி ( 15.1.47)


**
ஆகஸ்ட் 28, 1945

மேயர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கலந்த முகத்தில் கல்கத்தா முனிசபல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். சில ஐரோப்பிய உறுப்பினர்களும் இருந்தனர்.

தேபேந்திராத் துக்கம் கலந்த குரலில், “சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டுக்காக போராடியவர். அவருடைய மரணம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்காக மௌனமாக அஞ்சலி செலுத்துவோம்”

யாரும் மேயர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் இறந்தவரையா ? தன்னையா ?

“ஒரு நிமிடம் போஸ் மரணத்திற்காக அஞ்சலி செலுத்துவோம்” என்று திரும்ப கூறினார்.

காதில் வாங்கிக் கொள்ளாதவாறு அனைவரும் இருந்தனர். யாரும் அசையவில்லை.

“என்ன ஆனது. நமக்காக போராடியவருக்கு மௌன அஞ்சலி ஏன் செலுத்த தயங்குகிறீர்கள் ?”

 “போஸ் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் யாரும் நம்பவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார்.”

”என் உத்தரவை மதிக்காதவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டாம்.”

அரங்கத்தில் மேயரை தவிர்த்து யாருமில்லை.

**



செப்டம்பர் 21, 1945

1942ல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், பல தலைவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அன்றைய தினத்தில் 1942ல் இருந்து 1945 வரை காலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. இறந்த தலைவர்களின் பட்டியலில் ’நேதாஜி’ பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு காங்கிரஸ் தலைவரான அபுல் கலாம் ஆசாத், “சுபாஷ்யின் மரண செய்தி எத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஏட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். செய்தி வெளியிட்டவர்கள் மீது நமக்கு சந்தேகம் இருப்பதாலும், அவருடைய மரணம் உறுதி செய்ய முடியாத நிலையில் இரங்கல் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

 இன்று வரை, இந்திய தேசிய காங்கிரஸ்யோ அல்லது வேறு அரசியல் கட்சியோ நேதாஜி மறைவிற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

**
ஜப்பான் ரென்கோலி என்ற ஆலயத்தில் போஸ் புகைப்படத்திற்கு புக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தினர். ஜப்பானிய இராணுவத்தினர் முன்னிலையில் மொஜிசுகி என்பவர் அவரது இறுதி சடங்கை நடத்தினார் என்று கூறப்பட்டது.

இந்த செய்தி ஜப்பானில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. பலர் கண்டித்தனர். இன்னும் போஸ் மரணச் செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவது யாரும் ஏற்ற்க் கொள்ள முடியாத ஒன்று.

இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. போஸ் அஸ்தியா ? இறுதி சடங்கா ? யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள் என்று கண்டித்தது.

**
”செய்தி பொய்யாக இருக்கலாம்; போய் உயிரோடு தலைமறைவாக இருக்கலாம். எந்த தருணத்திலும் அவர் வெளிவருவார் நம்புகிறேன்” என்று ஆரம்பத்தில் கூறி வந்த காந்திஜி, பிறகு நேதாஜி மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

அதேப் போல் நேதாஜி மரணத்தைப் பற்றி நேரு, “ஆரம்பத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பார் என்று தோன்றியது. நானும் அதை தான் நம்பினேன். விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியை வைத்து பார்க்கும் போது அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக என்பதை நாம் நம்ப வேண்டியதாக தான் இருக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்லை” என்றார்.

நேதாஜி இறந்ததாக யார் சொன்னது ? யார் யார் சாட்சியம் அளித்தனர் ? எதை வைத்து நேதாஜியின் மரணத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள் ? எதனால். அளித்த சாட்சியங்கள் மீது அவநம்பிக்கை.... விவரங்கள் அடுத்த பதிவில் !!


LinkWithin

Related Posts with Thumbnails